அன்று வருடப்பிறப்பு. தமிழ் சிங்கள வருடப்பிறப்பு .தமிழனின்ட வருசப்பிறப்பை சிங்களவன் திருடினானோ அல்லது சிங்களவரின் வருடப்பிறப்பை தமிழன் திருடினானோ நான் அறியேன்.அல்லது இருவருக்கும் வேறு ஒருத்தன் வந்து திணித்து விட்டு சென்றானோ யார் அறிவார்.ஆனால் இன்று தீவார் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.சிறுவர்களுக்கு வருடப்பிறப்பு என்றால் இரட்டிப்பு. மகிழ்ச்சி கை விஷேசம் கிடைக்கும் அத்துடன் பாடசாலை விடுமுறை வேறு..
அது ஒர் இறப்பர் தோட்டங்கள் நிறைந்த சிங்கள கிராமம் அங்கு சுரேஸின் முப்பாட்டனார் குடியேறி ஏக்கர் கணக்கில் இறப்பர் தோட்டங்களை வாங்கி வைத்திருந்தார் அதன் பின்பு அந்த தோட்டம் அவரின் வாரிசுகளுக்கு கொடுக்கப்பட்டது .அந்த காலத்தில் வாரிசுகள் இந்த காலம்போல ஒன்று இரண்டு அல்ல குடும்ப கட்டுப்பாடு இல்லாத காலம் எட்டு ஒன்பது என வாரிசுகள் இருந்த காலம் .... இதனால் சுரேஸுக்கு பல ஒன்றுவிட்ட சகோதரிகளும் சகோதர்களும் இருக்கின்றனர்.விடுதலை நாட்களில் அநேகமாக எல்லோரும் அந்த வீட்டில் சந்திப்பார்கள் . பந்தி போட்டு தான் சாப்பாடு பரிமாறுவார்கள் அவ்வளவுக்கு வாரிசுகள் ,ஆனால் இந்த வாரிசுகள் இன்று ஒருத்தரை ஒருத்தர் தொலைபேசியில் பேசமாட்டார்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில், தொடர்புகளற்று இருக்கின்றனர்.
மூன்றாம் தலைமுறையான சுரேஸுக்கு , வருடப்பிறப்பில் வரும் விடுதலைக்கு இங்கு செல்வதென்றால் கொள்ளை பிரியம்,அவனுக்கு அப்பொழுது ஒன்பது அல்லது பத்து வயதுதான் இருக்கும்.சிங்கள பலகாரங்களான கவுன்கொண்டை,மற்றும் இடியப்பத்தினுள் கொழுக்கட்டைக்கு போடும் உள்ளுடலை வைத்து பொரித்திருப்பர்கள், மிகவும் பிடித்தவை.
அவனது பாட்டியின் வீட்டு வாசலில் "அலுத் அவுருது நோனா" என்ற சத்தம் கேட்டதும் பாட்டியும் எழும்பி சென்று "அலுத் அவுருது" பண்டா என்றார்
பண்டா கையில் வைத்திருந்த பழத்தட்டையும் வெற்றிலையையும் கொடுத்து விட்டு காலில் விழுந்தார் .அவருக்கு பக்கத்தில் நின்ற அவரது மகனும் விழுந்தார். பாட்டி இருவருக்கும் வெற்றிலையில் பணம் வைத்து கொடுத்தார்
அவர்கள் சென்றதும் தந்தையிடம் "ஏன் அப்பா பாட்டியின் காலில் விழுந்தவர்கள்"
"அவர்களின் கலாச்சாரம் அது"
"எனக்கும் பாட்டி காசு தந்தவர் ஆனால் நான் விழவில்லை, நீங்களும் பாட்டியின் காலில் விழுந்ததையும் காணவில்லை",
"பாட்டிக்கு காலில் விழுவது பிடிப்பதில்லை அது தான் நான் விழவில்லை மரியாதை நெஞ்சில இருக்க வேணும் எண்டு சொல்லுவா"
"அப்படியென்றல் மச்சான் சூட்டாவும் மச்சாள் சூட்டியும் பாட்டியின் காலில் விழுந்தவையல் நான் பார்த்தனான்"
"அடே! மாமா அந்த கலாச்சாரத்தில இருந்து தானே வந்தவர் அதனால் பிள்ளைகளும் அதை பின்பற்றுகின்றனர் "
"சரி நான் விளையாட போறன், சூட்டாவும் ,பண்டாவின்ற புஞ்சியும் வருயினம் என்னோட"
பதிலுக்கு காத்திராமல் ஓடிச் சென்றான்.
” பின்நேரம் யாழ்ப்பாணம் போக வேண்டும், விளையாடிக் கொண்டிருக்காமல் சீக்கிரமா வா ராசா”. என்ற தந்தையின் வேண்டுதல் அவன் காதில் விழவேயில்லை..
சூட்டா,சூட்டி ,சுரேஷ் , பூஞ்சி எல்லோரும் ஒன்றாக விளையாடிக்கொண்டு இருந்தார்கள் அவர்களுக்கு பொதுவான மொழி இல்லை, ஆனால் மிகவும் மகிழ்ச்சியாக தங்கள் உணர்வுகளை பகிர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர் .சூட்டாக்கும் சூட்டிக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும் ஆனால் பூஞ்சி க்கு தமிழ் தெரியாது. சில ஆங்கிலச் சொற்களை பாவித்து தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் . அவர்களின் பொழுது அன்று மிகவும் மகிழ்ச்சியாக கழிந்தது ..தந்தையின் குரல் கேட்கவே ,சுரேஷ்க்கு பயணம் போக வேண்டிய ஞாபகம் வர நண்பர்களிடம் இருந்து விடைபெற்றுச் சென்றான். ஏனைய மூவரும் கண்ணீர் வடித்து அவனை வழியனுப்பி வைத்தனர்.
”அடுத்த விடுதலைக்கு வருவேன் no cry அழாதையுங்கோ..” கையை அசைத்து கொண்டே விடை பெற்றான்.
அன்று அவனுக்கு புரிந்திருக்க வில்லை இனி அவன் அந்த மண்ணை வாழ் நாளில் மிதிக்கப்போவதில்லை என்று.
வீடு வந்தவுடன், அடுத்த விடுமுறைக்கு போகும் எண்ணம் அவனை தொடர்ந்து ஆட்கொண்டிருந்தது.
காலங்கள் மெல்ல நகர ஒரு நாள்,
நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது என்ற செய்தியை இலங்கை வானொலி அறிவித்தது , இதைக் கேட்ட அவனது தந்தை சற்று கலக்கம் அடைந்தார். அந்த கலக்கத்துக்குக் காரணம் அவரது தாயார் வாழ்ந்த சிங்கள கிராமத்தின் போலீஸ் நிலையம் பயங்கரவாத அமைப்பினரால் தாக்கி அழிக்கப்பட்டது என்ற செய்தியே ..
தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி அவரது தாயினதும் சகோதரரினதும் நிலமையை அறிய முடியாத சூழ்நிலை அதேசமயம் போக்குவரத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டு விட்டது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திகளை மட்டுமே நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது .
இரண்டு மாதங்கள் கழித்து நிலைமை சீரானது . ராணுவ போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கின.
அவனது தந்தை முதல் பஸ்ஸில் தாயாரை சந்திக்கச் சென்றார். மகனை கண்டதும் தாயார் அவரை கட்டி அனைத்து அழத் தொடங்கிவிட்டார்….
"அம்மா அழாதையுங்கோ நான் வந்திட்டன் தானே"
"இனி இங்க இருக்க ஏலாது,பயமா இருக்கு தம்பி "
"ஊருக்கு வாங்கோ என்ட வீட்டில வந்திருக்கலாம்"
" நான் தனியாள் என்றால் வந்திடுவேன் , செல்வம் தனித்து போய் விடுவான் பிறகு இந்த தோட்டம் ,வீடு எல்லாத்தயும் யார் பார்க்கிறது"
"எங்கே செல்வம் "
"பின்னுக்கு தோட்டத்துக்கு போய்விட்டான் ,றப்பர் பால் எடுக்கிறதுக்கு பண்டா வந்தவன் ,அவனோட தான் போய்ட்டான்"
"எப்படி இருக்கிறார் பண்டா,"
"நல்லாய் இருக்கிறான் அவன் தான் எங்களுக்கு நல்ல துணையா இருந்தவன்"
"அவர் தாத்தாவின் காலத்திலிருந்து குடும்பமா வேலை செய்யினம் விசுவாசமாக இருப்பார்கள் தானே"
தாயார் அங்கும் இங்கும் பார்த்து விட்டு
"பண்டா மாதிரியில்லை அவனின்ட மூத்தவன் லொக்கு "
" ஏன் அப்படி சொல்லுறீங்கள் ,அவன்கள் சின்ன வயசு விளையாட்டுபெட்டியள் குறும்பு செட்டைகள் இருக்கும் தானே"
"வந்திடுவாய் அவன்களுக்கு வக்காலத்து வாங்க"
"ஏன் கொதிகிறியல்,அவன்கள் என்ட சொந்தக்காரனே ,நீங்கள் தானே எங்களுக்கு பண்டா குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைத்தனீங்கள்..."
"நானோ ? உன்ட கொப்பரும் ,கொப்பரின்ட கொப்பரும் அவங்களுடன் உறவு கொண்டாடினவையள் நான் எப்பவும் விலத்தி தான் பழகிறனான் "
"சரி அதை விடுங்கோ"
"என்னத்தை விடுறது,உனக்கு தெரியுமே இவன் லொக்கு போன வருடப் பிறப்புக்கு வீட்டை வரவில்லை"
"அதற்கு என்ன இப்ப, அவன் வரவில்லையென்றபடியால் உங்களுக்கு வருசம் பிறக்கல்லையோ"
" என்ன இரத்தினம் எல்லாத்துக்கும் பெரிய ஞானி போல கதைக்கிறாய்"
சற்று கோபமாக சொல்லி கண்ணை கசக்கினார் ,அவர் வழமையாக அவனை தம்பி ,அப்பு என அன்பாக அழைத்து தான் பேசுவார் அவனின் பெயரை சொல்லி கதைத்தார் என்றால் ஏதோ கோபத்தில் இருக்கின்றார் என்ற அர்த்தம் ...அதை புரிந்த அவன்
" சொறி அம்மா,சொறி அம்மா பிளீஸ் அம்மா "சொல்லி தாயாரை சமாதானப்படுத்தினான்
"சரி சரி வா தம்பி சாப்பிடுவம்"
"என்ன கறி இருக்கு"
" மீன்டின் குழம்பும்,பிலாக்காய் கறியும் தான் வைச்சனான் நீ வருவாய் என்று தெரியாது,நாளைக்கு ஒரு சேவல் நிற்கின்றது ,செல்வத்திட்ட சொல்லி பிடிச்சு உரிக்க வேணும் ,பின்னேரமாய் பார்த்து அமுக்க வேணும் ,விடிய என்றால் பாய்ந்து ஒடி விடும்"
"ஒம் நாளைக்கு சமையுங்கோ கண்ணகி குடும்பத்தையும் கூப்பிடுவோம்"
"ம்ம்ம் ...கூப்பிடு உன்ட தங்கச்சி வந்தா சந்தோசம் தான்"
"ஏன் அவள் வார இல்லையே"
"ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா வருவாள்,பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வாராதும் குறைவு"
"மச்சான் நல்ல மனுசன் ,அந்தாள் தங்கமான மனுசன் தானே"
"ஓ ஒ உன்ட மச்சான் பொன்சேக்கா தங்கம் தான் உங்களுக்கு ஆனால் என்ட தங்கத்தை மாற்றிப்போட்டார்,பொன்னரை நொந்து என்ன பயன் ,எல்லாத்துக்கு காரணம் உன்ட கொப்பர்"
“மேல போன அப்பரை ஏன் திட்டுறீயல் உங்கன்ட சம்பந்தியும் பண்டாவின் சொந்தகாரர் தானே...நீங்கள் தானே அந்த சமபந்தத்தை செய்து வைச்சனீங்கள்"
",அப்பவும் நான் சொன்னனான் பொம்பிள்ளை பிள்ளையை ஊரில ஹொஸ்டலில் விட்டு, உங்கள் மூன்று பேரையும் போல படிப்பிக்க சொல்லி,மனுசன் கேட்டிச்சே"
"அவளுக்கு என்ன குறை இப்ப நல்லாத்தானே இருக்கிறாள்"
"கண்ணகி என்று தமிழ் பெயர் வைக்க வேணும் ,என என்னோட சணடை பிடிச்சு உந்த புராண பெயரை வைச்சவர் ஆனால் அவள் இப்ப பொன்சேகா என்று திரியிறாள் பிள்ளைகளுக்கும் அவங்களின்ட பெயர்களை தான் வைச்சிருக்கிறாள்"
"சரி சரி கட்டி கொடுத்திட்டியள் இனி உதுகளை ஏன் தூக்கி பிடிக்கிறீயள்"
"நான் விரும்பி கட்டி கொடுக்கஇல்லை அதை மட்டும் மனதில வைச்சு கொள்ளுங்கோ, இங்கிலிசில படிக்கட்டும் என உந்த சிங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினதால் தான் எல்லாம் வந்தது"
"எங்கே செல்வத்தை காணவில்லை எப்ப போனவன்"
" வந்திடுவான் ,பண்டாவோட போன படியால் பயமில்லை வந்திடுவான் ,அவனும் ஒரு சிங்களத்தியோட கதைச்சு கொண்டு திரியிரானாம்"
No comments:
Post a Comment