Monday, December 30, 2013

வோர்மல்..(Formal)

சுதாவின் நீண்டநாள் ஆசை அன்றுதான் நிறைவேறியது.அம்மா இவ்வுலகைவிட்டு போகமுதல் தான் சிட்னியில் கட்டிய வீட்டுக்கு ஒருமுறை அழைத்துகாட்ட வேணும் என்ற அவளது ஆசை அன்று நிறைவேறியதயிட்டு ஒரே சந்தோசம்.சுதாவின் அம்மா இப்பொழுதுதான் முதல் முறையாக வெளிநாட்டுக்கு வெளிக்கிடுகின்றார்.ஊரில் அயலவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு என வெளிக்கிட தானும் ஒரு நாள் மகளிடம் போவேன் என்று நினைத்துக்கொண்டாள்.அவளுக்கு இப்ப 75 வயசு .மிகவும் கஸ்டப்பட்டு தான் விசா எடுத்தார்கள்.பிணை பணம் 10ஆயிரம் அவுஸ்ரெலியா பணம் கட்டி கடைசி குடும்ப அங்கத்தவர் என்ற பிரிவில் ஒரு மாதிரியாக விசாவை எடுத்துப்போட்டார்கள். விமான நிலையத்திற்கு சுதாவும் மகள் சுருதியும் சென்றிந்தார்கள்.சக்கரநாற்காலியில் அம்மாவை விமானப்ணிப்பெண் தள்ளிகொண்டுவருவதை கண்ட சுதா "சுருதி! கிரான்ட்மா இஸ் தெயர்" என்று கத்தியபடியே ஒடிப்போனாள் .மகளை கண்ட தாயும் உடனடியாக சக்கரநாற்காலியை விட்டெழுந்து ஓடிப்போய் கட்டியணைத்துகொண்டாள் .இருவரும் ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.இந்த காட்சியை கண்ட விமானபணிப்பெண் திகைத்து ஒரு விநாடி அதிர்ந்து போனாள்.சக்கர நாற்காலி எதற்கு பாவிப்பது என்பதின் வரைவிலக்கணத்தை அறிய வேண்டும் என மனதில் எண்ணிக்கொண்டாள்.
அதே மனநிலையில்தான் சுருதியும் இருந்தாள்.
"அம்மா இவள்தான் மூத்தவள்"

"அப்படியே உன்னை மாதிரி இருக்கிறாள் ,இரண்டு வயசில் கண்டதற்கு பிறகு இப்பதானே பார்க்கிறேன் என்ட மனுசனின்ட உசரம் அவளுக்கு வந்திருக்கு,அவரும் போய் ஐந்து வருசமாகி விட்டது.,மனுசன் இருந்திருந்தால் இப்ப என்னோட வந்திருக்கும் என்ன செய்யிறது காலம் செய்த கோலம்"என்று கூறியபடியே கண்களை துடைத்துகொண்டாள்.

"Hi Grandmamaa how are you........"
" I am good...தமிழ் தெரியாதோ"
"அவளுக்கு தமிழ் விளங்கும் ஆனால் கதைக்கமாட்டாள்"
"அப்ப என்னை மாதிரித்தான் என்று சொல்லு,எனக்கு இங்கிளிஸ் விளங்கும் பேசவராது but I can manage"..
"வீல் செயர் ஒன்றை எடுக்கவோ அம்மா?"

"என்ன பகிடியே விடுகிறாய்,நான் நல்லாய் நடப்பன்,வெளிநாட்டுப்பிள்ளைகள் மாதிரி ஐந்து வயசிலயே கண்ணாடி போட்டு வாழ்கிற கோஸ்டிகளே,நான் வாசிக்கமட்டும் கண்ணாடி போடுகிறன் அதுவும் 50 வயசுக்கு பிறகுதான்..."
"காரை தூர பார்க் பண்ணியிருக்கிறன் அதுதான் கேட்டனான்.அம்மா"
"பிள்ளையாரை பார்க்க இரண்டுகட்டை நடந்து போறனான் உது என்ன பெரிய தூரம்" மூவரும் கதைத்த படியே கார்தரிப்பிடத்தை அடைந்தனர்.

காரினுள் ஏறியவுடன் சுருதி அம்மாவின் பெல்டை போட்டுவிட்டு அவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
"நீயும் கார் ஒடுவியே சுருதி"
"ஜெஸ் கிரான்ட்மா"
"அது என்ன கிரான்ட்மா, அம்மம்மா என்று சொல்லு"
"ஒகே அம்மம்மா"
"எங்க அப்பா ?வேலைக்கு போயிட்டாரே"
"ஒம் அம்மம்மா ஒவ் சோர்(off shore) வர வண் வீக் ஆகும்"
"நான் திரும்பி ஊருக்கு போகமுதல் உனக்கு தமிழ் படிப்பிச்சு போட்டுதான் போவன் யு வெயிட் அன் சி" சுருதிக்கு சிரிப்பு வந்து விட்டது அம்மம்மாவின் இங்கிலிஸ் உச்சரிப்பை கேட்டு.
"அம்மா பிளெனில் வந்தது களைப்பா இருக்குதோ"
"எனக்கு என்ன களைப்பு,சின்னவன் விமான பணிப்பெண்ணிடம் எல்லாத்தையும் கொடுத்து கதைத்து விட்டவன்,அவள் வடிவாக என்னை கூட்டிக்கொண்டு வந்தவள்.....மற்றது நான் எல்லோரும் வார எக்கனமிக்ஸ் கிளாசில வரவில்லை..பிசினஸ் கிளாசில வந்தனான்...."

"நித்திரை வந்தால் உதுல சாய்ந்து படுங்கோ'சுருதி அம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிடுங்கோ"
சுருதி அம்மம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிட்டாள். அம்மம்மா பயணகளைப்பில் நித்திரையாகப் போய்விட்டார்.கார் வீட்டினுள் சென்று நிற்பாட்டியவுடன் அம்மம்மா விழித்து கொண்டார்.திடுக்கெட்டு எழுந்த அம்மம்மா
"அடி என்னடி கார் வீட்டுக்குள்ள நிற்குது"
சுதாவின் வீட்டினுள் காரை நிறுத்தினால்நேராக வரவேற்பறைக்கு செல்லலாம்.காருக்கு ஏற்ற வீடு ...வீட்டுக்கு ஏற்ற கார்.தாயாரைஉள்ளே அழைத்துச் சென்றாள். தமிழ்சினிமாவிலும்,நாடகங்களிலும் பார்த்த வீட்டை நேரில் கண்ட அம்மம்மாவுக்கு தான் நிஜவுலகில் இருக்கிறேனா அல்லது கனவு காண்கிறேனா என்ற சந்தேகம் வந்துவிட்டது.
கீழ்தரையில் குளியலறை,மலசலகூடத்துடன்கூடிய பெரிய அறை ,அழகான உயர்தர மெத்தை விரிப்புடன் கூடிய கட்டில் ,கட்டிலுக்கு அருகே இரு விலையுயர்ந்த மேசைகளின் மேல் டெபிள் லாம்ப் இருந்தன.உடுப்புக்களை வைப்பதற்கு என ஒரு அறை சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு நட்சத்திர கொட்டல் அறை போல காட்சி அளித்தது.
"அம்மா உள்ளே வாங்கோ இது தான் உங்கன்ட அறை, குளிச்சு போட்டு வாங்கோ சாப்பிடுவோம்"எனகூறிய படியே குளியலறை கதைவை திறந்து சுடுதண்ணி பைப்,குளிர்தண்ணீர்பைப் போன்றவற்றை விளங்கப்படுத்தி தாயருக்கு குளிக்க உதவிகள் செய்தாள்.குளித்து முடித்து வெளியே வந்தாள் அம்மம்மா .
"அம்மா சாப்பிட்ட பிறகு வீட்டை பார்க்க போறியளோ,இப்ப பார்க்க போறியளோ"
" எனக்கு இப்ப பசிக்கவில்லை ,வா உன்ட வீட்டை பார்ப்போம் முதலில"
" இது வோர்மல் லிவ்விங் ,இது வோர்மல் டைனிங்"இரண்டிலும் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாற்காலிகளும் ,சோப செட்களும் போடப்பட்டிருந்தது.
"இது குசினி "
"என்னடி அப்படியே எல்லாம் புதுசா கிடக்கு நீ சமைக்கிற இல்லையோ"
"பின்னுக்கு ஸ்பைஸ்கிச்சின் என்று ஒன்று இருக்கு அதிலதான் சமைக்கிறனாங்கள்,இதுக்குள் சமைச்ச வீடெல்லாம் மணக்கும் "
"இது என்னடி ஊர் கோவிலில் சர்பத் கடையில கலர் கலராக அடுக்கி வைச்சிருக்கிற மாதிரி நீயும் வாங்கி அடுக்கி வைச்சிருக்கிறாய் எனக்கும் உதுல கொஞ்சத்தை தாவேன் குடிப்பம் "
"ஐயோ அம்மா அது சர்பத் இல்லை அது இவரின்ட மினிபார்"
"அது என்ன மினிபார்"
"அ....து அம்மா சாராயப்போத்தல்கள் இவர் பார்ட்டி வைச்சா சினேகிதர்மாருடன் சேர்ந்து குடிக்கிறவர்"
"அப்ப வீட்டுக்குள்ள தவறணை வைச்சிருக்கிறார் உன்ட மனுசன்,அதுசரி உன்ட மனுசன் கலியாணம் கட்டும்பொழுது தண்ணி கிண்னி பாவிக்கிறதில்லை என்று சொல்லிச்சினம் "
""உன்ட மனுசனின்ட கொப்பர்ரும் அந்தகாலத்தில நல்ல தண்ணிச்சாமி அதுதான் மகனும் தண்ணிச்சாமி போல கிடக்குது,நானும் நாலு பெடியள் பெத்து வளர்ந்தனான் ஒருத்தனும் தண்ணி பாவிக்கிறதில்லை"
"அம்மா அது எல்லாம் உங்களோட இருக்குமட்டும்தான் இப்ப பெரியண்ணனின் மெல்பெர்ன் வீட்டில் இதை விட பெரிய பார் இருக்கு,சின்னண்ணன்வீட்டையும் இப்படிதான்,,அப்பா குடிக்கிறதில்லை ஆனால் அண்ணன்மார் குடிக்கினம்,அதற்காக பரம்பரை குடிகாரர் என்றே சொல்லுறது"
"தம்பியவையள் குடிக்கிறவங்களோ,அதுகென்ன குடிச்சா ? வெளிநாட்டில் இது எல்லாம் சகயம்"
"அதென்ன உங்களுடைய பிள்ளைகள் குடிச்சா சகயம்,மற்றவங்கள் குடிச்சா பரம்பரை குடிகாரன் என்கிறது..நல்ல நியாயம்"
"அடியே எங்களுடைய உறவுகள் தப்புசெய்தா அதை மறைச்சு போடவேணும் மற்றவன் செய்தா தூக்கி கதைக்க வேணும் ,அதுதான் உலக வழக்கு"
"உலக வழக்கில்லை,உங்கன்ட ஊர் வழக்கு"
"என்ன மனுசனைபற்றி சொன்னவுடன் கோபம் வருகுதுபோலகிடக்கு,சரி,சரி வா மிச்ச வீட்டையும் பார்ப்போம்"
சுதா தனது வீட்டின் பின்பக்கம் உள்ள ஸ்பைஸ் கிச்சின்,மற்றும் ரம்பஸ் , BBQபோடும் இடம் ,தனது வீட்டுதோட்டம் எல்லாம் சுற்றிக்காட்டினாள்.
"எல்லாம் இரண்டு இரண்டா வைச்சிறுக்கிறீயள்,சாப்பாட்டு மேசை,குசினி,டிவி எல்லாம் இரண்டு"
"வாங்கோ அம்மா மேல போய் பார்ப்போம்""இது மாஸ்டர் பெட்ரூம் இது எங்கன்ட அறை உள்ளே வாங்கோ,"
ஸ்பாவுடன் கூடிய குளியலறை,பில்ட் இன் வோர்ரோப் ,பெரிய டிவி எல்லாம் அந்த அறையிலிருந்தது.
"உன்ட பாத்ரூமிலயும்,உடுப்பு வைக்கிற இடத்திலயும் இரண்டு கட்டில் போடலாம் போலகிடக்கு""இது கோம் தியட்டர் அம்மா"
"அதென்னடி கோம் தியட்டர்"இவர்கள் அங்கே இருக்கும்பொழுது சுருதியும் உள்ளே வந்தாள்.
"கிரான்ட்மா ...அம்மம்மா தியட்டருக்கு போய் படம் பார்க்க தேவையில்லை ,வீட்ட இருந்தே படம் பார்க்க முடியும்,இவினிங் ஒரு படம் போட்டு பார்ப்போம்"
வீட்டை எல்லாம் சுற்றிக்காட்டிய பின்பு மதிய உணவை சுதா தயாருக்கு பரிமாறினாள். அம்மம்மா சாப்பிட்டவுடன் ஒரு சிறிய தூக்கம் போடுவது வழக்கம்.நித்திரையால் எழுந்து சுதா கொடுத்த தேனீரை பருகிகொண்டிருக்கும் பொழுது,வீட்டு அழைப்புமணி அடித்தது.கம்மிங்க் என்று குரல் கொடுத்தபடியே சுருதி ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்.
"காய் சுணில்"
"காய் சுருதி"
இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர்.இதை பார்த்த அம்மம்மா. இங்கு என்ன நடக்குது என்ற ரீதியில் சுதாவை திரும்பி பார்த்தார். அம்மா அவன் சுணில் முன்வீட்ட இருக்கிறவன் .சிங்களவர்கள், நல்ல சனம் இப்ப உங்களை பார்க்கத்தான் வந்திருக்கிறான்.
"சுணில் சீ இஸ் மை மதர்"
"கலோ அன்ரி"
"கலோ"
சுணிலும் சுருதியும் ஆங்கிலத்தில் எதோ பேசி சிரித்துக்கொண்டிரிந்தார்கள்.இவற்றை பார்த்த அம்மம்மாவுக்கு தலைசுற்றுவது போல இருந்தது. சுணில் விடை பெற்று சென்ற பின்பு
"நீ சிங்களவனோட நல்ல கொண்டாட்டம் போலகிடக்கு,உவங்களால் தானே எங்கன்ட சனம் அநியாயமாக செத்தது"
"அம்மா, சும்மா அரசியல் கதைக்காதையுங்கோ"
"இதில என்னடி அரசியல் கிடக்குது, அவங்களின்ட ஆட்கள்தானே இவ்வளவு சனத்தையும் கொண்டவங்க"
"ஏன் என்கன்ட ஆட்களும் அவங்களை கொண்டவங்கள் தானே"
"ஏய் நீ சும்மா விதண்டா வாதம் பண்ணாதே பக்தியும்,படிப்பும் என்று இருந்த சனத்தை துவக்கு தூக்க வைத்தவன் அவன் தான் இதில எனக்கு மாற்றுகருத்து இல்லை "
"சரி சரி உதுகளை பற்றி நாங்கள் கதைச்சு வீணாக சண்டை பிடிக்காமல் வாங்கோவன் வெளியால நடக்கப் போவம்"
"இரு சீலையை சுற்றிகொண்டு வாரன்"
"உப்படியே வாங்கோவன் "
"சீ சீ ஒரு நிமிசத்தில் சீலை சுற்றிகொண்டு ஒடிவாரன்" இருவரும் வெளியால் நடக்கதொடங்கினார்கள்.வீதியில் காண்பவர்களுக்கு தனது தாயாரை அறிமுகசெய்து வைத்து கொண்டிருந்தாள் சுதா.
"அது சரி இவள் சுருதி குமர் பிள்ளை பெடியளை கண்டவுடன் இப்படி கட்டிபிடிச்சு முத்தம் கொடுக்கிறது சரியில்லை,நான் இப்பவும் வேறு மனுசங்கள் பக்கத்தில் இருந்தால் விலத்தித்தான் இருக்கிறனான்.ஒரு கூச்சம் இருக்கு"
"அம்மா இங்க உதெல்லாம் சகயம் ,நானே வேலை செய்யிற இடங்களில் சில நேரம் முத்தம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டு,அவள் இங்க பிறந்து வளர்ந்தவள், இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரிதான் வாழ முடியும்"
"சுருதி ஒரு சட்டை போட்டுகொண்டு போனால் உள்ள போட்டிருக்கிறதெல்லாம் தெரியுது நீ உதுகளை பார்த்து ஒன்றும் சொல்லுறதில்லையோ,உங்களை நான் இப்படியே வளர்த்தனான்.."
"அம்மா அது விலையுயர்ந்த சட்டை பாடசாலை வோர்மலுக்கு வாங்கினது,அப்படியான உடுப்புதான் போடவேணும் எல்லா பெட்டைகளும் இப்படித்தான் போடுங்கள் அப்படி போட்டாத்தான் மதிப்பு".
"எதுக்கு எடுத்தாலும் உங்களுக்கு ஒரு கண்டறியாத வோர்மல் ...."
ஒரு கிழமை சென்றும் சுதாவின் கணவனை வீட்டில் காணாதது அம்மம்மாவுக்கு கவலையை ஏற்படுத்தியது. பக்கத்துவீட்டு வெள்ளை இனத்தவன் சுதா வீட்டு குப்பை தொட்டியை தள்ளி வைத்துவிட்டு செல்வதை கண்டுவிட்டார்.அம்மம்மாவுக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது.உந்த வெளிநாட்டில புருசன்மாரும் வொர்மல்,இன்வொர்மல் என்று இருக்குமோ!!!!!!!!!!!!!!!! என்ட கடவுளே...          

Saturday, October 12, 2013

முருகா நீயும் சுழியன்டாப்பா

அவுஸ்ரேலியாவுக்கு முதல்முதல் வந்தவுடன் மனிசி முருகன் கோவிலுக்கு போகவேணும் வாங்கோ என அழைத்தாள்.மறு பேச்சு இல்லாமல் வெளிக்கிட்டு போனேன்.புதுசா என்னைத்தை செய்தாலும் ஆண்டவனிடம் அனுமதி பெறுவது எங்கன்ட மனசில் பதிந்த ஒன்று..
காரில் போகும் பொழுது மனிசி சிட்னி முருகனின் சரித்திரம் சொல்லிகொண்டு வந்தாள் .நல்லூர் கந்தனுக்கு ஒரு கதை இருக்கு,செல்வசந்நிதிமுருகனுக்கு ஒரு கதை இருக்கு அதுபோல் நம்மட சிட்னி முருகனுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.ஒரு முருகதொண்டன் அவரை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து தனது வீட்டில் வைத்திருந்து ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு பாடசாலை மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு எம்பெருமான் முருகனுக்கு பிராமணர்களின் ஆசியுடன் பூஜை செய்து வந்தவராம்.
அந்த காலகட்டத்தில் அவுஸ்ரேலிய ஜனநாயக கட்சிகள் அரசாண்ட காலம்...சேர சோழர்கள் ஆண்ட காலம் போல் இதுவும் ஒன்று. ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருந்தும் பக்தர்கள் முருக தரிசனத்திற்கு அலையேனவந்து எம்பெருமானுக்கு ஒரு நிரந்தர ஆலயம் அமைக்க வேணும் என்று எகமனதாக முடிவெடுத்து சிட்னி சைவமன்றம் என ஒரு அமைப்பை உருவாக்கி வைகாசி குன்றில் எம்பெருமான் முருகனுக்கு ஒருசிறு காணியும் வாங்கி ஒரு மண்டபம் அமைத்து அவனை குடியமர்த்தினார்கள் என சிட்னி முருகன் படலத்தை சொல்லிகொண்டே வந்தாள்.
சிவனின் கடைசி பெடி முருகன் வைகாசி குன்றில் இருந்தான்.ஆங்கிலபெயர் .....பெரும் தெருவும் மோட்டார் வீதியும் சந்திக்கும் ஒர் முக்கோணவடிவ காணியில் ஒரு சிறு மண்டபத்தில் தாய் தந்தை சகோதரத்துடன் அலங்கார கோலத்தில் வீற்றிருந்தான். நல்லூரானை அலங்கார கந்தன் என்பார்கள் அதுபோல சிட்னி முருகனை ஆடம்பர முருகன் என்று சொல்லலாம்.முருகா அவுஸ்ரேலியாவுக்கு உன்னை நம்பி குடிபெயர்ந்துள்ளேன்
எல்லாம்தந்து என்னை காத்தருள்வாய் என வேண்டுகொள் வைத்து வழிபட்டேன்...தொடர்ந்து முருகனிடம் சென்று வந்தேன். சென்றும் வருகின்றேன் .தொடர்ந்தும் செல்வேன்... ஒவ்வொரு கிழமையும் அவுஸ்ரேலிய பாடசாலை மண்டபத்திற்கு சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பது கந்தனின் மனதில் நல்லதாக படாதமையால் தனது பக்தர்களின் மனதில் உள்புகுந்து பக்தர்களே நீங்கள் எனக்கு நிரந்தர மண்டபம் அமைத்து ஏன் என்னை வழிபட நடவடிக்கை எடுக்க கூடாது என கேட்டுவைத்தார்.இந்த கேள்வி எல்லா முருக அடியார்களையும் சிந்திக்க தூண்டியிருக்க வேண்டும்.இதனால் எழுந்ததுதான் சிட்னிமுருகனுக்கு நிரந்தர கோவில் கட்டும் எண்ணமாகும்.அது இருக்கட்டும் இப்ப விசயத்திற்கு வருவோம் இருபது வருடங்களுக்கு.முதல் எம்மவர்களால் உருவாக்கப்பட்ட முருகனின் மண்டபத்தை சூழ பல குடியிருப்புக்கள் இருந்தன யாவும் அவுஸ்ரேலிய வெள்ளை இனத்தை சேர்ந்தவர்களின் குடியிருப்புக்கள்.மண்டபத்தில் இருந்த முருகனுக்கு கோவிலில் குடியிருந்து தனது பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது.எனக்கும் தொடர்மாடி வீட்டிலிருந்து தனிவீட்டுக்கு குடிபெயர வேண்டும் என்றஎண்ணம் உண்டாக முருகனிடம் வேண்டுகோள் வைத்து வங்கியிடம் கடன் கேட்டேன் வங்கி கேட்ட கடனை தந்தது .தனி வீடு வாங்கி குடி பெயர்ந்தேன். என்னுடைய எண்ணத்தை வங்கி நிறைவேற்ற முருகனின் எண்ணத்தை முருகு பக்தர்கள் நிறைவேற்றினார்கள்.முருகனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. கோவில் கும்பாபிசேகம் மிகவும் விபரிசையாக நடை பெற்றது.அந்த தெருவில் அப்படியான ஒரு சன நடமாட்டத்தை அந்த வீதிவாசிகள் தங்கள் வாழ்நாளில் கண்டிருக்கமாட்டார்கள்.சனநடமாட்டம் மட்டுமல்ல வாகன நெரிசலையும்தான்.குடியிருப்புக்கான பகுதியில் எப்படி இப்படி மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்தார்கள் என அந்த வீதிவாசிகள் நிச்சயம் குரல் கொடுத்திருப்பார்கள்.கும்பாபிசேகத்தை தொடர்ந்து முருகனின் விசேட தினங்கள் மற்றும் ,வெள்ளிக்கிழமைகள் தோறும் வழிபாடுகள் நடைபெற தொடங்கிற்று.
வீதிவாசிகள் சிறு சிறு தொல்லைகளை எதிர் நோக்கத் தொடங்கினார்கள்.எங்களுக்கு சிறு தொல்லையாகத் தெரிந்த விடயம் வீதிவாசிகளுக்கு பெரியதொல்லையாக தென்பட்டது.நாங்கள் பக்தியுடன் எம்பெருமானுக்கு செய்த விடயங்கள யாவற்றையும் வீதிவாசிகள் தொல்லையாக எடுத்துகொண்டார்கள்.

வெள்ளிக்கிழமை வேலை முடிந்தவுடன் வீட்டை வந்து குளித்து காரில் முருகனை இரவு ஏழுமணி பூஜையில் தரிசிக்க போனால் எனக்கு முதலே பல முருகபக்தர்கள் தங்களது காரை அந்த சிறிய வளவில் நிறுத்தி விடுவார்கள இதனால் எனக்கு அங்கு நிறுத்தமுடியாமல் போய்விடும்.பிறகு என்ன வீதிகளில் தான் நிறுத்த வேண்டும். வீதிகளிலும் எம்மவர்களின் வாகனங்கள்தான் அதிகமாக இருக்கும்.முருகனை தரிசிக்கவேண்டும் என்ற ஆவலால் சில சமயங்களில் யாராவது வீட்டின் ட்ரைவ்வே க்கு முன்னால் ஒருமாதிரி சுழிச்சு காரை நிறுத்தி விட்டு சென்றுவிடுவேன்.செல்லும்பொழுது அவர்களின் வீட்டின் பூந்தோட்டாத்திலிருந்து அழகான ரோஜா பூக்களை பறித்தெடுத்து சென்று காணிக்கையாக கொடுத்ததும் உண்டு. பூஜை முடிந்தவுடன் ஒலிபெருக்கியில் அறிவிப்பார்கள் ,கோவிலுக்கு அருகாண்மையிலுள்ள வீடுகளின் முன்பு உங்களின் வாகனங்களை தரிக்காதீர்கள்,பூக்களை பறிக்காதீர்கள் என்று ஆனால் நான் கண்டு கொள்வதில்லை.முருகன் கைவிடமாட்டான் என்ற ஒரு துணிவு.
வீதிவாசிகள் பொலிஸில் முறையிட்டார்கள்,நகரசபையில் மனுத்தாக்கல் செய்தார்கள் நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை காலப்போக்கில் எங்களுடைய தொல்லை தாங்கமுடியாமல் வீதிவாசிகள் வீடுகளை விற்பனை செய்துவிட்டு புறநகர்பகுதிகளுக்கு செல்ல தொடங்கினாரகள்.முருகனுக்கும் அவரகளின் காணிகள் மீது ஆசையிருந்தமையால் பக்தர்கள் மூலம் காணிகளையும் வீடுகளையும் தனதாக்கி கொண்டான்.இன்று முருகன் பல இன்வென்ஸ்மன்ட் புரொப்பட்டிக்கு சொந்தகாரன்.அன்று வீதிவாசிகளின் வீடுகளுக்கு முன்னால் ட்ரைவ்வேயில் காரை நிறுத்தியமைக்காக பொலிஸில் முறையிட்டார்கள் ஆனால் இன்று அதேவீதிவாசிகளின் காணிகளின் உள்ளே எமது வாகனங்களை நிறுத்துகிறோம்.எம்பெருமான் மகிமையோ மகிமை....
முருகா நீ சுழியன்டாப்பா..ஆனால் இன்னும் ஒரெ ஒரு வெள்ளை இனத்தவன் அசையாமல் இருக்கின்றான் அவன் உன்னை விட சுழியன்.எம்மவர்கள நம்புகிறார்கள், நீ அவனையும் வெகு சீக்கிரத்தில் வெளியேற்றிவிடுவாய் என்று உன்னை நம்பியோரை கைவிடமாட்டாய் என நானும் நம்புகிறேன்.

பக்தர்கள் சாப்பாட்டுகடை ஒன்றை உனக்காக ஆரம்பித்து பகுதிநேர வருமானத்திற்காக உதவினார்கள்.நீ உனது முழுநேர தொழிலை உட்கார்ந்திருந்து கவனிக்க பக்தர்கள் பகுதிநேர வருமானத்திற்காக நன்றாக உழைத்தார்கள்.நீயும் கோடிஸ்வரன் ஆகிவிட்டாய்.
மண்டபத்தினுள் குடி புகுந்தவுடன் பெற்றோரையும் சகோதரத்தையும் ஸ்பொன்சர் பண்ணி அழைத்த எம்பெருமான் காலபோக்கில் பல உறவுக்காரர்களை ஸ்பொன்சர் செய்து கூட்டுகுடும்பமாக வாழ்கிறான்.பழனிமுருகன்,நல்லூர் கந்தன்,செல்வசந்நிதி முருகன் மற்றும் மாமன்,மாமி எல்லோரும் அடக்கம். சைவனாக இருந்த நீ இப்ப இந்துவாக மாறிவிட்டாய்.இதனால் உனது குடும்பம் இப்ப பெரியது.வரும் காலங்களில் இன்னும் பல உறவுகளை நீ ஸ்பொன்சர் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.உன்னால் முடியும் நீ ஒரு சுழியன்டாப்பா!
சதாரண மக்கள் குடியிருப்பாக(low density zone) இருந்த உனது வாழ்விடத்தை வியாபர அதாவது கொமர்சல் பகுதியாக(commercial zone) மாற்றிவிட்டாய் ,நகரசபை நிர்வாகத்தினரின் சிந்தையில் புகுந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்திய நீ மகா சுழியன் எல்லாம் வல்ல இறைவன் .... கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற எம்மவர்களின் கூற்றுக்கிணங்க பலர் இன்று உனது ஊருக்கே குடியெர்ந்துள்ளன்ர் ,இன்னும் பலர் குடிபெயர இருக்கின்றனர். ஒரு ஊரையே உன்பக்தர்களின் குடியிருப்பு ஆக்கிய பெருமை உன்னையேசாரும்.....

என்னதான் இருந்தாலும் , உன்ட சனம் முள்ளிவாய்காலில் அவதிப்படும் பொழுது கண்டுகொள்ளவில்லை.சிட்னியில வந்து பெரிய நடப்படிக்கிறாய் ..........

எண்டுபோட்டு யாழில் இந்த கிறுக்கலை நாளைக்கு போடுவம் என நித்திரைக்கு சென்றுவிட்டேன்...
" அடெ புறம்போக்கு,முழமாறி ,முடிச்சு அவுக்கி நானே கேட்டனான் சிட்னிக்கு வரப்போறன் எண்டு நீங்கள்
தானே ,சிவனே எண்டு சும்மா இருந்த என்னை இங்க எடுப்பிச்சனியள்...அங்க சுத்த பசுப்பாலில்உடனே கறந்த சுத்த பசுப்பாலில் கிடைச்ச அபிசேகத்தை கெடுத்து போட்டு இப்ப குளிர் பாலை லீட்டர் கணக்காய் மக்கள் ஊத்தக்காரணமே நீங்கள் தானேடா"என கத்தி கொண்டே வேலுடன் என்னைநோக்கி பாய்ந்தார். நான் ஐயோ முருகா! என்னை ஒன்றும் செய்யாதே என கை எடுத்து கும்பிடுகிறேன் ஆனால் முருகன் என்னை நோக்கி வந்து பாய்துகொண்டேஇருந்தார் உடனே ஒம் நமச்சிவாய எனகத்தி கொண்டே சிவனின் காலில் விழுகின்றேன் .....பக்கத்தில் படுத்திருந்த மனிசி என்னப்பா என்ன நடந்தது என என்னை எழுப்பினாள் .முருகன் வேலால் குத்த வாற மாதிரி ஒரு கனவு கண்டனான் .உதுக்குத்தான் நான் சொல்லுறனான் படுக்க போகும்பொழுது விபூதி பூசி நல்ல நினைவுகளுடன் படுக்கவேணும் எண்டு .சொல்லிபோட்டு "நினவு நல்லது வேணும்" என்ற பாரதி பாடலை பாடிக்காட்டினாள்....
நானும் ஒமோம் எண்டு போட்டு ஓம்முருகா,ஓம்நமச்சிவாய,என உரத்தகுரலில் சொல்லிகொண்டு ...மனதில் எவனடி படுக்கப்போகும்பொழுது நல்லெண்ணத்துடன் படுக்கப்பபோறான்.........வாய் ஓம் முருகா என்றது....

Tuesday, September 10, 2013

"என்ட............."

மனிதன் பிறந்தவுடன் தொடங்கிய என்ட என்னுடைய என்ற சொல் அவன் இறக்கும் வரை தொடரும் என்பது யாவரும் அறிந்தது.சுரேஸுக்கும் அது விதிவிலக்கல்ல.
அந்த பாடசாலைக்கு அவன் முதல் காலடி எடுத்து வைத்தவுடன் ஆசிரியை அவனை அழைத்து சென்று இதுதான் உன்னுடைய இடம்,மணி அடித்தவுடன் ஒவ்வொரு நாளும் இந்த இடத்தில் வந்து இருக்க வேண்டும் என ஆசிரியை கூறியவுடன் "ஒம் டீச்சர்" என்றவன் அதில் அமர்கின்றான்.சிலேட்டும்,சிலேட் பென்சிலும் அடங்கிய பையை மேசை மீது வைத்துவிட்டு பக்கத்து கதிரையில் அமர்ந்திருக்கும்பெடியனை பார்த்து சிரிக்கின்றான்.அவன் அழுது கொண்டிருந்தான்.அவனை பார்த்தவுடன் இவனுக்கும் அழுகை வந்துவிட்டது.அம்மாவிட்ட போகப் போறன் என அழத்தொடங்கிவிட்டான். முதல் நாள் பாடசாலைக்கு வருபவர்களில் அநேகர் அழுவார்கள்,பாடசாலைக்கு வரமாட்டேன் என அடம் பிடிப்பார்கள்.ஆசிரியர் பெண் என்றபடியால் இருவரையும் சமாதானப்படுத்தினார்,அடுத்த நாள் எல்லாம் சகயமாகி போய்விட்டது.

"டீச்சர் இவர் என்ட சிலேட்டில கீறிப்போட்டார்" "டீச்சர் இவர் என்ட சிலேட் பென்சிலை உடைச்சுப்போட்டார்" "டீச்சர் இவர் என்ட கதிரையை எடுத்திட்டார்" ஆசிரியை விசாரனை தொடங்கியவுடன். "ஏன் அவனின்ட சிலேட்டில் கீறினனீ" "அவன் தான் என்ட சீலேட்டில் முதல் கீறினவன்,அதுதான் நானும் கீறினன்" "இல்லை டீச்சர் நான் கீறவில்லை அவன் தான் முதல் என்ட சிலேட்டில் கீறீனவன்.அவன் பொய் சொல்லுறான்" ஆசிரியை இருவரையும் வாங்கின் மேல் எழுந்து நிற்கசொல்லிவிட்டு படிப்பிக்க தொடங்கிவிட்டார்.தண்டனை முடிந்து இறங்கியவுடன் சுரேஸ் தனது சிலேட்டில் இருந்ததை எச்சில் போட்டு அழித்துவிட்டு நல்ல பிள்ளைமாதிரி கதிரையில் அமர்ந்தான்.

ஒரு நாள் தாயாருடன் கடைக்கு சென்றவன் அங்கு டீச்சரை கண்டவுடன்," அம்மா என்ட டீச்சர் நிற்க்கிறா போய் கதைச்சுப்போட்டு வாரன்"என்றவன் ஒடிப்போய் கதைத்தான்.அவனின் ஆரம்பகல்வி பல என்ட என்ற உறவுடன் முடிவுக்கு வந்தவுடன் . டீச்சர் நான் ஆறாம் வகுப்புக்கு என்ட புது பள்ளிகூடத்திற்கு போக போறன் என்று கூறி மகிழ்சிப்பட்டான்.

ஆரம்ப பாடசாலை முடிவடைந்து உயர்வகுப்பு பாடசாலைக்கு சென்றவுடன் அதிபர் உனது வகுப்பு 6பீ உன்ட வகுப்பாசிரியர் வந்து உன்னை அழைத்துசெல்வார் ,அந்த லைன்னில போய் நில்லு என அதிபர் கட்டளையிட்டார். அதிபரின் தோற்றமும் ,குரலும் அவனுக்கு பயத்தை உருவாக்கியது.அந்த பாடசாலையில் நீண்ட கதிரைகளும் மேசைகளும் இருந்தன.வகுப்பாசிரியர் 6பீ குறிப்பிட்ட வகுப்பை காட்டி எல்லோரையும் அந்த வகுப்பில் போய் இருக்கும்படி கூறினார் ,மாணவர்கள் அடிபட்டு,முண்டியடித்து ஒடிப்போய் முதல்வரிசையில் இருந்தார்கள்.சிலர் கடைசி வரிசையில் போய்யிருந்தார்கள்.முதல் இரு வரிசையிலும் படிக்க கூடியவர்கள் இருந்தார்கள். பின் வரிசையில் எனையோர் இருந்தார்கள். ஆசிரியரும் இதைத்தான் விரும்பினார்.படிக்க கூடியவர்களுக்கு சில சலுகைகளும் ஆசிரியரிடமிருந்து கிடைத்தது.படிக்க முடியாதவர்கள்,படிப்பில் அக்கறை இல்லாதோர்,படிப்பில் அக்கறையிருந்தும் படிக்க முடியாதோர்,சிவாஜி,கமல் ரசிகர்கள் கூட்டம் பின்வரிசையில் இருந்தார்கள்.

சுரேஸுக்கு நடுவரிசையில் ஒரு இடம் கிடைத்தது.கொஞ்சம் படிப்பு ,கொஞ்சம் விளையாட்டு என்ற ரகத்திற்க்குரிய வரிசை. அவனுக்கு பக்கத்திலிருந்தவனிடம் பேச்சை தொடங்கினான்.இருவரும் வேறு வேறு பாடசாலையிலிருந்து அங்கு வந்திருந்தார்கள். "உன்ட பெயர் என்ன" "வின்சன்ட் ஞானசீலன்,உன்ட " "சுரேஸ் சுப்பிரமணியன்" "என்ட குடும்ப பெயர் ஞானசீலன்" "உன்ட அப்பாவின் அப்பாவின் அப்பாவின் பெயர் என்ன?" "தெரியாது" "என்ட அப்பாவின்ட அப்பாவின்ட அப்பாவின் பெயர் ஞானசீலன்" சுரேஸ் ஒன்றும்புரியாமல் முழித்துக்கொண்டிருக்கையில் ஆசிரியர் ,பிள்ளைகள் சத்தம் போடாதையுங்கோ,உங்களுடைய வகுப்பாசிரியராகிய நான் தமிழும்,சமயமும் படிப்பிப்பேன் கணக்கு விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு வேறு ஆசிரியர் வருவார்.வகுப்பு அட்டவணை எழுதுகிறேன் நீங்கள் உங்கன்ட கொப்பியில் எழுதுங்கோ.ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போட்டு பக்கத்து வகுப்பு ஆசிரியையுடன் விடுப்பு கதைக்க சென்றுவிட்டார் மாணாவர்கள் எழுதிபோட்டு கதைக்க தொடங்கிவிட்டார்கள்.

அடுத்த பாடத்திற்கு மணி அடித்தவுடன் ஆசிரியர் உள்ளே வந்து கோபமாக சத்தம் போடாதையுங்கோ,எல்லோரும் எழுதியாச்சோ என கேட்டார்.

"ஒம் சேர்"என எல்லோரும் ஒன்றாக பதில் சொன்னார்கள்.

"அட்டவனையில் இப்ப என்ன பாடம் போட்டிருக்கு என்று பாருங்கோ"

"சமயம் சேர்"

"சரி எல்லோருக்கும் தேவாரம் தெரியுமோ,தெரிஞ்ச ஆட்கள் கையை உயர்ந்துங்கோ"

"ஒம்,சேர் " என கோரொசா குரல் கொடுத்துப்போட்டு அனேகர் கையை தூக்கினார்கள்கையை உயர்த்தாத வின்சன்டை பார்த்து

"ஏன் உனக்கு தேவாரம் தெரியாதோ "
"இல்லை சேர் எனக்கு தெரியாது நான் கிறிஸ்டியன் என்ட மதம் கத்தோலிக்கம்"

".எல்லொரும் கையை கீழ விடுங்கோ இந்தவகுப்பில் எத்தனை கிறிஸ்தவர்கள் இருக்கின்றீர்கள் ".நாலு பேர் எழும்பி நின்றார்கள்.. உங்களுக்கு நான் அதிபருடன் பேசி கத்தோலிக்கம் படிபிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிய ஆசிரியர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.எனையோரின் இந்து சமய பாடநேரத்தில் இவர்களுக்கு கத்தோலிக்கம் படிப்பிக்கபட்டது.

எட்டாம் வகுப்பில் சுரேஸ் படிக்கும் பொழுது ஒரு நாள் பக்கத்து வகுப்பு மாணவனுடன் தகராறு ஏற்பட்டு அடித்துவிட்டான்.அவன் எட்டாம் வகுப்பு "சி "பிரிவை சேர்ந்தவன் .அவனது வகுப்பை சேர்ந்த இன்னொருத்தன் கண்டுவிட்டான் எங்கன்ட "சி"வகுப்புக்காரனை "பி" வகுப்புக்காரன் அடிச்சுப்போட்டான் பள்ளிக்கூடம் விட்டு போகும் பொழுது எல்லோரும் வாங்கோடா போய் அவனை அடிப்போம் என அந்த வகுப்பின் சண்டியத்தலைவன் அழைப்புவிட்டான். பாடசாலை விட்டு வெளியே சுரேஸ் வந்தவுடன் c பிரிவையை சேர்ந்த குழுவினர் அவனை ஏன்டா எங்கன்ட வகுப்பு பெடியனுக்கு அடிச்சனீ என கேட்டு தாக்கினார்கள் .சுரேஸ்சின் நல்ல அந்த நேரம்பார்த்து ஆசிரியர்களும் வெளியே வந்தார்கள் .அடிபட்டவர்கள் இடைத்தவிட்டு ஒடிவிட்டார்கள். A,B,C,D என்ற பிரிவுகள் கல்வி தராதரத்தின் அடிப்படையில் பிரிக்கப்படிருந்தன.A பிரிவின் கடைசி மாணவனின் புள்ளிகளை B பிரிவின் முதல் மாணவன் பெற்றிருப்பான் இப்படியே இறங்குவரிசையில் போகும் ,அதேபோல சண்டித்தனத்தில் ஏறுவரிசையில் செல்லும்,அதாவது A பிரிவைசேர்ந்தவர்கள் கல்வியில் அதிகம் நாட்டம் கொண்டிருப்பார்கள் B பிரிவைசேர்ந்தவர்கள் சண்டித்தனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.

பாடசாலை பருவம் முடிவடைந்தவுடன் ஊர் சுற்றும் காலம் தொடங்கியது.ஊர்கோவிலில் பரம்பரைபரம்பரையாக அவனின் குடும்பம் திருவிழா செய்து வந்துகொண்டிருந்த்தது.ஊரார் நாலுதிசையிலும் உள்ளவ்ர்களுக்கு திருவிழாக்களை பிரித்து .'வடக்கு மானிப்பாயிரின்ட ,தெற்குமானிப்பாயிரின்ட என் கொடுக்கப்படிருந்தது.

"தம்பி எங்கன்ட திருவிழா வருகிறது விஞ்ஞாபனத்தை கொண்டுபோய் கொடுத்துப்போட்டு திருவிழாகாசையும் வாங்கிகொண்டு வா,முதலில் மாமாவிட்டயும் ,சித்தப்பாவிட்டயும் போய் வாங்கு,"

"அப்பா,நான்முதலில் கனகுமாமாவின்ட வீட்டை போகட்டே"

"சீ,சீ அந்த மனிசன் கஞ்சன் கொஞ்சமாத்தான் போடுவான் ,பிறகு மற்றசனமும் அதை பார்த்து கொஞ்சமாய்தான் போடும்,சுந்தர் மாமாவிட்ட முதல் போ அவர்தான் போனமுறை அதிகமா போட்டவர் ,பிறகு சித்தப்பாவிட்ட போ,இந்த முறை எங்கன்ட திருவிழாவை நல்ல எழுப்பமா செய்யவேணும் ,நாலு சனம் திருவிழாவை பற்றி கதைக்க வேணும் எங்கன்ட திருவிழாக்காரின்ட வீடுகள் எல்லாம் தெரியும்தானே"

"ஓம் அப்பா" அவர்களுடைய திருவிழா முடிவடைந்து,தேர்திருவிழாவும்வந்தது.தேர்திருவிழாவில் எல்லொரும் எந்த திருவிழாகாரர் நல்லாய் செய்தது என்ற கதைதான் கதைப்பார்கள்.ஓவ்வோருத்தரும் தங்களுடையது சிறந்தது என்பார்கள்.தேர்திருவிழா அன்று வேஸ்டியணிந்து அம்மாவினுடைய சங்கிலியையும் போட்டு தேரின் வடத்தை பிடித்து அரோகரா என கத்தி இழுத்துகொண்டிருத்தவனுக்கு ,சகமாணவி ஒருத்தி பாவாடைதாவணியில் கனகாம்பரபூ தலையில் அலங்கரிக்க நிற்பதை கண்டவன் தன்னிலை மறந்தான். அவளின் காதலை பெறுவதற்காக சகாசங்களை செய்யத்தொடங்கினான்.இதை அறிந்த அந்த பெண் தனது காதலனிடன் சொல்லிவிட்டாள்.ஒரு மாலை நேரம் சுரேஸ் அவளின் பின்னால் தொடர்ந்து செல்லும் பொழுது ஐசே கொஞசம் நில்லும் என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நின்றான்.

"ஏன் நீ அவளுக்கு பின்னால சுத்துறாய்"

"அதை கேட்க நீ யார்" "அவள் என்ட காய்,அவளை நான் லவ்பண்ணுகிறேன்" சுரேஸ் அவளை பார்த்தான் அவளோ ஏளனமாக பார்த்து சிரித்த படியே சென்றாள்.

எங்கன்ட மொழியை சிங்களவன் அழிச்சு போடுவான் அதை தடுக்க வேண்டும் என்று விசன்ட் போராடபோனான்.சிங்களவன் மொழியையும்,அவனையும் அழித்தார்கள் இதை அறிந்த சுழியன் சுரேஸ் இது என்னடா நாடு வெளிநாடு போய் தப்பிகொள்வோம் என புலம் பெயர்ந்தான். புலத்தில் என்ட மதம் ,என்ட கடவுள் ,என்ட திருவிழா என்ட வீடு ,எங்கன்ட அவுஸ்ரேலியா .... என புலம்பிக்கொண்டு மீண்டும்... என்கன்ட ஊருக்கு போய்வருகிறான்.

Thursday, August 22, 2013

சிட்னி புலம்பல்

சிட்னியில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பழையமாணவ சங்கங்கள்,பல்கலைக்கழக சங்கங்கள் பல உள்ளன அவர்களின் நிகழச்சிகள் பல நடை பெறுகின்றன, அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றது அது பிழையாகவும் இருக்கலாம் ,இருந்தாலும் கிறுக்க வேண்டியதும்,புலம்பவேண்டியதும் என் பொறுப்பு.பழைய மாணவசங்கத்தில் நானும் உறுப்பினன் என்பதையும் முதலே தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஊரில் கோவில் திருவிழா காலங்களில் ஒவ்வொரு உபயகாரர்களும் தங்களது திருவிழா மற்றவர்களினுடய திருவிழாவை விட நன்றாகவும் ,பலராலும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஆடம்பரமாக ஏட்டிக்கு போட்டியாக செய்து முடிப்பார்கள்.ஒரு கூட்ட மேளமா?ஐந்து கூட்ட மேளமா?,ஒரு சப்பரமா? ஐந்து சப்பரமா?,என்ற பாகுபாட்டில் தராதரம் பார்க்கபடும்...தென்னிந்திய கலைஞர்களையும் சில திருவிழா உபயகாரர் அழைத்து தங்களது தராதரத்தை எனையோர் தொடமுடியாத படி உயர்த்தி மக்களிடையே பிரபலமாகிவிடுவார்கள்.
பழைய மாணவ சங்கங்கள் ,பல்கலைகழக சங்கங்கங்கள் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்வதற்காவே உருவாக்கப்பட்டது.

மாணவசங்கங்கள் புலத்தில் இந்திய திரைப்பட இசையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.இந்த மாணவசங்கங்களின் கடந்த காலவரலாறுகளை எடுத்து பார்க்கும் பொழுது வெள்ளிடைமழை.திரைஇசை மட்டுமல்ல போலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் ஆற்றியுள்ளது இனிமேலும் ஆற்றும்.பழைய மாணவர்களாகிய நாம் இந்த இடுப்பாட்டத்தை அன்றுதிரையில்தான் பார்த்தோம்.அந்தகாலத்தில் இதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஒர் ஆசைஇருந்தது.
அதை இன்று நரை விழுந்து ,மொட்டை தட்டிய பிறகு பார்க்க கூடியசந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இதுவும் என்போன்றோர்களுக்கு மகிழ்ச்சியே.
பழையமாணவ சங்க நிகழ்ச்சிகளுக்கு $50முதல்$100வரை நுழைவுச்சீட்டு அறவிடுகிறார்கள்.ஒருவர் $100 ரூபா செலவு செய்கிறார் என வைத்துகொள்வோம் அதில் $5 மட்டுமே தாயகத்தில் உள்ள ஒரு மாணவனுக்கு சென்றடையும்.
மிகுதி $95 கால்வாசி அவுஸ்ரேலியா அரசுக்கும் ,மிகுதி முக்கால்வாசி பணமும் இந்திய கலைஞர்களுக்கும் இந்திய அரசுக்கும் செல்கின்றது.
நுழைவுச்சீட்டில் தாயகமக்களின் துயர் துடைக்க என விளம்பரம் போடுகிறார்கள் ஆனால் அந்த பணத்தில் கால்வாசி கூட தாயக மக்களை சென்றடையவில்லை எனபது ,எனது கருத்துகணிப்பு மட்டுமே....எது எப்படியாயினும் மிக மிக சிறுதொகை தாயக மக்களை சென்றடைகிறது என்று
மகிழ்சியடைய வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம்.

இன்று எமக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி தேவைப்படுகிறது அதற்காக ஒழுங்கு செய்கின்றோம்.இன்னும் பத்து வருடங்களின் பின் பழைய மாணவர்களின் நிகழ்ச்சிகள் சிட்னியில் நடை பெறுமா என்பது கேள்விக்குறியே.புலத்தில் தமிழ்சினிமாஇசையை வளர்ப்பதிலும்,பொலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் உண்மையிலயே பாடுபடுகின்றார்கள்.இவர்களின் இந்த முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் பங்கும் அளப்பறியது. திரைப்படங்களில் ஒரு பாடல் பாடியவர்கள்,சின்னத்திரையில் பாடல்கள் பாடிய சிறுவர்கள்,மற்றும் பிரபலங்கள் ,பிரபலமடையாத நபர்கள் என யார் யாரை எல்லாம் அழைக்க முடியுமோ அழைக்கின்றோம்.இந்தியாவில் பிரபலமாகாத இசைகலைஞர்களை சிட்னியில் பிரபலமாக்கின்றோம்... இசைக்கலைஞர்களைமட்டுமல்ல இன்று தொலைகாட்சி அறிவிப்பாளர்களும் எமக்கு ஒரு கதாநாயகன் போல தோன்றுகின்றார் அவரையும் விட்டு வைக்கவில்லை .ஒரு பழைய மாணவச்ங்கம் ஜெயா தொலைகாட்சி பிரபலத்தை அழைத்தால் மற்றவர் சண்தொலைக்காட்சி கலைஞரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகின்றார்.
இந்த செயல்களை பார்க்கும் பொழுது எனக்கு ஊர் உபயகாரர்களின் போட்டி மனப்பான்மையில் திருவிழா செய்த்ததும் இன்று நாம் இங்கு பழையமாணவர்கள் என்ற போர்வையில் ஏட்டிக்கு போட்டியாக செயல் படுவதும் ஒன்று போல தெரிகின்றது....

அன்று கடவுளை மையப்படுத்தி உபயகாரர் பிரபலமடைந்தனர்...இன்று தாயக மக்களை மையப்படுத்தி பழையமாணவர்கள் நாம் பிரபலமடைய முயற்சி செய்கின்றோம்..... :D          

Tuesday, July 2, 2013

crush....கிரஷ்

பாடசாலை வளாகத்தில் தனது கிளைகளை பரப்பி அந்த மரம் விருச்சமாக வளர்ந்திருந்தது.அந்த நாட்டைப்போல் அந்தமரமும் பல் தேசிய காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.அந்த மரத்தின் கீழ் மாணவ,மாணவிகள் இடைவேளை நேர்த்தில் ஒன்றுகூடுவார்கள் ,பாடசாலை முடிவடைந்தபின்பு பெற்றோர்வரவுக்காகவும்,பேருந்தின் வரவுக்காகவும் காத்திருப்பார்கள்.ஒன்று கூடுபவ்ர்களில்சிலர் காதல் செய்வார்கள் வாங்குகளின் ஒருவரின் மடியில் மற்றவர் படுத்திரிந்து தலையை வாரிவிட்டபடியே காதல் மொழி பேசுவார்கள்.சில ஜோடிகள் புல்தரையில் அமர்திருந்து காதல் புரிவார்கள்.ஒரே தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் ,வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் அதில் இருக்கும்.அதாவது சீனா ஜோடிகள் ,தமிழ்(இந்திய பின்னனி) ஜோடிகள்,வெள்ளைக்கார ஜோடிகள்.....மற்றும் சீன இந்திய,இந்திய வெள்ளை,வெள்ளை சீன என கலப்பின ஜோடிகள் ஆகும்.
ஜோடிகளற்ற மாணவர்கள் குழுக்களாக நின்று கதைத்துகொண்டிருப்பார்கள் இவர்களை கண்டு பொறாமை படவோ ,எரிச்சல் படவோ இல்லை.அதிபர் ,ஆசிரியர்கள் வந்து போவார்கள் சில சமயம் ஆசிரியர்கள் அந்த மரத்தடியிலிருந்து உணவும் உண்பார்கள் ,ஆனால் காதல் ஜோடிகள் தன்னிலை மறந்து அந்த இடத்திலயே இருப்பார்கள்.காதல் ஜோடிகள் ஆசிரியர்களை கண்டு ஒதுங்குவதுமில்லை ஆசிரியர்களும் அவர்களை வெருட்டுவதுமில்லை.இவற்றை பார்த்த சுரேஸுக்கு ஒருவித பய உணர்வும்,பெற்றொர் என்ற அதிகாரமும் தலைதூக்குவதுண்டு.இந்த வெள்ளைகளின் கன்றாவி கலாச்சாரமும் ,பண்பாடும் எங்கன்ட கலாச்சாரத்தை அழிக்கின்றது வாத்திமாரும் கண்டிக்கிறதில்லை என வெள்ளைகள் மீது பலியை போட்டு நிம்மதி அடைவான்.தன்னுடைய கலாச்சாரம் பண்பாட்டை பிள்ளைகளுக்கு புகட்ட தாயகத்திற்கு புலம் பெயர்ந்து செல்லவேண்டும் என எண்ணியதுமில்லை இனிமேலும் எண்ணப்போவதுமில்லை.
.....>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சுரேசுக்கு இந்த காதல் ஜோடிகளை காணும்பொழுதெல்லாம் இளமை காலத்தில் தவறவிட்ட சம்பவங்களை எண்ணி ஏக்கம் வருவதுண்டு.சில சமயங்களில் இரைமீட்பதுண்டு.அவனின் பாடசாலை ஆண்கள் பாடசாலை.சகோதர பாடசாலையின் சகவகுப்பு மாணவியுடன் ஒருவித இது (ஒருதலைகாதல் என்றும் சொல்லலாம்)ஏற்பட்டுவிட்டது.அவளை பார்ப்பதற்காகவும் ,காதலை சொல்ல வேணும் என்ற காரணத்திற்காகவும் அவள் செல்லும் டியுசன் வகுப்புக்களுக்கும் சென்றான்.இருந்தும் காதலை இறுதி வரை சொல்லவில்லை. சுரேஸ் தன்னைச்சுற்றி வருவது தெரிந்திருந்தாலும் சுதா கண்டு கொள்ளவில்லை நீ ஏன் என் பின்னால் சுற்றுகிறாய் என கேட்கவுமில்லை.இரு வருட கடின சைக்கிள் சுற்றல் மூலம் சுரேசால் தனது ஒருதலை காதலை இருதலை காதலாக மாற்றமுடியவில்லை.
சுதா வீட்டு ஒழுங்கைவாழ்வாசிகள், தேவையற்ற பயணங்களை சுரேஸ் மேற்கொள்வதை அறிந்து கொண்டார்கள்.பெடிப்பயள் இங்குள்ள பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறான் என ஒழுங்கை வாழ் அண்ணன்மாரும் உசார் அடைந்துவிட்டனர்.ஒரு நாள் சுரேஸை பின் தொடர்ந்து இரு அண்ணமார் வந்தனர் அவன் சுதா வீட்டு ஒங்கைக்குள் சென்றவுடன் ஒரு அண்ணன் ஒழுங்கை முகப்பில் நின்றுவிட்டார்.மற்றவர் அவனை முந்தி சென்று சைக்கிளை குறுக்கே நிற்பாட்டினார்.
"தம்பி உம்மை இந்த ஒழுஙகைக்குள் அடிக்கடி காணுகின்றேன் உம்மோட சினேகிதப்பெடியள் யாரும் இந்த ஒழுங்கைக்குள் இருக்கினமோ?"

"இல்லை அண்ணே சும்மா வந்தனான்"சொல்லியபடியே சைக்கிளை திருப்பினான்.

"பிடிடா அவனை " என இந்த அண்ணை கத்த முகப்பில் நின்ற அண்ணை சைக்கிள் கன்டிலை பிடித்துநிறுத்தி சைக்கிளின் முன் டயரை தனது கால்கள் இரண்டுக்குமிடையில் வைத்துக்கொண்டார்.அவனால் ஓடமுடியவில்லை. இரு அண்ணமாரும் ஒன்றாக இணைந்து விசாரணை தொடங்கினர்.
"சும்மாவோ இந்த ஒழுங்கைக்குள் வாறனீ ,உண்மையை சொல்லு அந்த மதில் கட்டின வீட்டிலிருக்கிற சுதாவை சுழற்றத்தானே வாராய்"

"இல்லை அண்ணே"

"பின்னே என்னத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தரம் இந்த ஒழுங்கை வந்து போறாய் ,ஓவ்வொரு தரம் போகும் பொழுது மதில் பக்கம் ஒரு பார்வையை விட்டிட்டு போறாய்...எல்லாம் நங்கள் கவனிச்சுப்போட்டுத்தான் உன்னை இப்ப மடக்கினாங்கள்"

"இல்லை அண்ணே, சுதா என்னோட டியுசன் கிளாசுக்கு வாரவ"

"டியுசன் கிளாசுக்கு வந்தால் நீங்கள் சுழற்றிவியளோ மவனே
இனி இந்த பக்கம் உன்னை கண்டால் வீட்டை உருப்படியா போய் சேரமாட்டாய் ஓடு" என விரட்டீவிட்டனர்.
அதன் பின்பு அந்த ஒழுங்கை பக்கம் செல்வதை குறைத்துக்கொண்டான்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பாடசாலயில் இருந்து மகளை கூட்டிவருவதற்கு சென்றவன் காரை வழமையாக தரிக்குமிடத்தில் நிற்பாட்டிவிட்டு அந்த மரத்தடியை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.என்கன்ட பெடியன் போல கிடக்குது என உற்றுப்பார்த்தான்.எங்கன்ட பெடியன் மட்டுமல்ல அவனுக்கு அறிமுகமான ஒருத்தரின் மகன் வேறு.பையனுக்கு அருகில் இருந்தபெண் வேற்று இனத்தை சேர்ந்தவள்.மீண்டும் உறுதி செய்வதற்காக உற்று பார்த்தான்.
"கலோ அப்பா" என்றபடியே மகள் வந்து காரினுள் ஏறிக்கொண்டாள்.

"கலோ"கலோ என மகளுக்கு கூறியபடியே மரத்தடியை பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்ன அப்பா அங்கேயே பார்த்துக்கொண்டிருக்கிறீங்கள்" என கேட்டபடியே தந்தை பார்த்த திசையை நோக்கி பார்த்தாள்.

"அப்பா அது சுதன் எங்கன்ட கிளாசில் படிக்கிறவர், அவரின்ட girlfriend Korean "

"அவரின்ட அப்பாவின் பெயர் பொன்னம்பலம் தானே"

" உங்களுக்கு தெரியுமோ, Do you know him? நெடுகலும் அங்கேயே பார்த்துகொண்டிருக்க வேண்டாம், it's not nice "

"உப்படி பெடியளும் பெட்டையளும் ஒன்றாக இருக்கிறதற்க்கு டீச்சர்மார்,மாஸ்டர்மார் ஒன்றும் சொல்லமாட்டினமோ"
"They cannot say anything. it's against the law,"
"அப்ப நான் அவரின்ட அப்பாவிட்ட சொல்ல வேணும்"
"No, அப்பா, that is his private business. You cannot interfere in other's business."
"படிக்கிற வயசில உது என்ன இப்படி சேட்டைகள்விடுகிறது,இதை நான் கட்டாயம் அவரின்ட அப்பாவிட்ட சொல்லவேணும் ,எங்கன்ட பெட்டையை பிடிச்சிருந்தாலும் காரியமில்லை போயும் போய் ஒரு சப்பையை பிடிச்சிருக்கிறான்"என்று சொன்னபடியே காரை ஸ்டார்ட் பண்ணினான்.
"இப்ப நீங்கள் உதுக்கு போய் ஏன் டென்சன் ஆகிறீங்கள், this is normal in high school, it's just a crush. நீங்கள் ஸ்கூலில் படிக்கும் பொழுதும் உங்களுக்கும் crush எதாவது இருந்திருகுத்தானே அப்பா அப்ப.........பா"
"ஏய் !யாரோட என்ன கதைக்கிறீர் ,நான் உன்ட அப்பன்டி"
"So what?"
"நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் எங்கன்ட அப்பா அம்மாவோட இப்படியெல்லாம் கதைக்க மாட்டோம்,கதைச்சால் அப்பாவின்டா ஐந்து விரலும் கன்னத்தில் பதியும்"
"That is your fault"
"நான் படிக்கிற காலத்தில் லெமன் கிரஷ்,லைம் கிரஷ் என்ற கூல் ரின்க்ஸ்தான் கடையில் வித்தவை அதுகளைக்ப்பற்றி தெரியும் உந்த கன்றாவி கிரஷ்களைப்பற்றி தெரியாது"

"mmmmmm. Like I am going to believe you"          

Sunday, May 12, 2013

நீயும் ஊரவன்

"அண்ணே எங்க போகவேணும்"
பஸ்வண்டியை விட்டு கீழே இறங்கியவுடன் அந்த குரலை கேட்க மனதில் என்னை அறியாமலே ஒரு மகிழ்ச்சி ,"மாத்தயா கொயத யன்னே" என்ற குரல் போய் அண்ணே எங்க போகவேணும் என்றது எனது சனத்துடன் நான் ஜக்கியமானது போன்ற ஒர் உணர்வு உண்டானது.கையில் இருந்த ஒரே ஒரு பையையும் தூக்கிக் கொண்டு
"தம்பி மானிப்பாய் போகவேணும் ஒட்டோவில மீற்றர் இருக்கோ,மீற்றர் போடுவீரோ"
"அண்ணே இங்க மீற்றர் இல்லை மானிப்பாய்க்கு போக 400 ரூபா வரும்"
"என்ன வழமையாக 300 ரூபா தானே கொடுக்கிறனான் ,நீங்கள் என்ன நானூறு கேட்கிறீங்கள்".
. யாழ்நகரில் ஒட்டோ ஒடத்தொடங்கிய பின்பு கொழும்பில் இருந்து வந்த பஸில் இறங்கி இப்பதான் முதல் முதலாக ஒட்டோவில ஏறி ஊருக்கு போறன் என்ட விசயம் ஒட்டோக்காரனுக்கு தெரியாது என்ற எண்ணத்தில் அப்படி ஒரு பொய்யை சொல்லி பேரம் பேசினேன்.
"அண்ணே இப்ப எல்லோரும் நானூறு தான் எடுக்கிறவையள்,வந்து ஏறுங்கோ"
நாலு டொலர்தானே வரும் எங்கன்ட காசில என நினைத்தபடியே போய் ஏறினேன்.ஊருக்கு போராய் கண்ட சனத்தோடயும் வாயை கொடுக்காதே என கொழும்பில இருக்கிற உறவுகள் அறிவுரை சொன்னதிற்கு ஏற்ப நானும் பெரிதாக ஒட்டோ சாரதியுடன் பேச்சுக்கொடுக்கவில்லை. "அண்ணே இப்ப குளிராக இருக்கு மத்தியானம் பயங்கர வெய்யில் அடிக்கும்" என்று சொல்லி எனது மெளனத்தை கலைத்தார்.
"அப்படியா"
"மானிப்பாயில் எவடத்த "
"சுதுமலை சந்தியடிக்கு போங்கோ கிட்ட போன பிறகு வீட்டை காட்டுகிறேன்"
"அண்ணே வெளிநாடோ,கொழும்போ"
"நான் கொழும்பு " ஒட்டோவில் ஏறியவுடன் யாழ்நகரை வியப்பாக பார்த்த பார்வையில் சாரதிக்கு விளங்கியிருக்கும் மச்சான் வெளிநாடு என்று.வெளிநாடு என சொல்லாமைக்கு முக்கிய காரணம் சுயபாதுகாப்புத்தான். "இதில திருப்புங்கோ வலக்கை பக்கம் வாற நாலாவது வீட்டடியில் நிற்பாட்டுங்கோ"பேசியபடியே நானூறு ரூபாவை கொடுத்துவிட்டு ஒட்டோ போனபின்பு இடக்கை பக்கம் இரண்டாவதாக இருக்கிற எனது பெரியம்மா வீட்டை சென்றேன்.இதுவும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தான். இவர் பெரிய தேசியவீரன் இவருக்கு சுயபாதுகாப்பு என்ன கோதாரிக்கு என நீங்கள் எண்ணக்கூடும்,ஆனால் ஒரு பிரபல எழுத்தாளரை கண்டவுடன் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு மாலை மரியாதை செய்துவிடுவார்களோ என்ற பயம் தான்.
கிணற்றில் குளிக்கலாம் என்று போனால் அங்கு கப்பியும் இல்லை துலாவும் இல்லை..."தம்பி இங்க வந்து பாத்ரூம்மில் குளி" .
குளித்து விட்டு பெரியம்மா தந்த சுடான தேனீரை பருகிவிட்டு .மருதடியானை தரிசிக்கலாம் என வெளிக்கிட்டேன். பெரியம்மாவுக்கு தெரிந்த ஒட்டோசாரதியை ஒழுங்கு படித்தித் தந்தார்.அவர் தெல்லிப்பளையில் இருந்து புலம்பெயர்ந்து 20 வருடமாக மானிப்பாயில் வாழ்பவர்.என்னுடைய வயதுதான் இருக்கும் இருந்தும் என்னை தம்பி என்று அழைத்தார் .அவரைவிட இளமையாக அவருக்கு தெரிந்திருக்கிறேன் எல்லா புகழும் அவுஸ்ரேலியாவுக்கே.. "தம்பி மருதடிக்கோ விட,நீங்கள் அந்த அம்மாவுக்கு என்ன முறை?"
" ஒம் மருதடிக்கு விடுங்கோ அவவின்ட தங்கைச்சியின் மகன்"
அவரின் கேள்விகளுக்கு பதிலளித்தபடியே , பள்ளிபருவத்தில் உலா வந்த வீதியையும் அறிந்தவர்கள் வீடுகளையும் பார்த்த படியே சென்றேன்.வீதியில் அறிந்தவர் எவரும் கண்னில் படவில்லை.
வயலும் வயல் சார்ந்த இடத்தில் நம்மட மருதடியான் வீற்றிருந்தான்.முன்பு பழைய கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிவீசிகொண்டிருந்தவனை புதுதாக கோயில் கட்டுவதாக வெளிக்கிட்டு எழு வருடமாக கொட்டிலில் வைத்திருக்கிறார்கள்.
அவனையும் வீழ்ந்துவணங்கி ,யாராவது தெரிந்தவர்கள் வருவார்கள் ஊர் விடுப்பு அறியலாம் என சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். வயயோதிபர் ஒருவர் அருகில் வந்து
"தம்பி ஊருக்கு புதுசோ என்றார்."
"இல்லை நான் இந்த ஊர்தான்"
"நான் முப்பதுவருசமா இந்த கோயிலுக்கு வந்து போறன் உம்மை கண்டமாதிரி தெரியவில்லை,நீர் ஆர்ட மோன்,உம்மன்ட வீடு எங்கயிருக்கு "
"அண்ணே நீங்கள் முப்பது வருசமா வந்து போறீயள் நான் பிறந்ததில் இருந்து வந்து போறன்.உந்த மருதடியானிட்ட கேளுங்கோ சொல்லுவான்"என்று சொல்லிவிட்டு ஒட்டோவில் வந்து ஏறி சுதுமலை அம்மன் கோவிலுக்கு போக சொல்லிவிட்டு மீண்டும் வீதியை நோட்டம் விட்டேன் அறிந்தவர் எவரும் கண்ணில் படவில்லை. ஒட்டோவுக்குரிய பணத்தை கொடுத்து விட்டு ஆலயத்தினுள் சென்றேன் சுதுமலை அம்மன் கோவிலிலும் புனர்நிர்மாண வேலைகள் நடை பெறுவதால் மூலஸ்தானத்தில் இருந்த அம்மனும் அவரது குடுமபத்தினரும் வெளியே குடிபெயர்ந்து இருந்தனர்.ஒரு விதத்தில் எனக்கும் நன்மையைக இருந்தது.தூரத்தில் இருந்து மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனின் உருவம் இலகுவில் தெரியாது ஆனால் புதிதாக குடிபெயர்ந்த இடத்தில் அம்மனின் உருவம் நன்றாகவே தெரித்தது.வணங்கிவிட்டு தெரிந்தவர்கள் யாராவது கண்னில் படுகிறார்களா என நோட்டம் விட்டேன்.நான் அறிந்தவர் எவரும் இல்லை.என்னை அறிந்தவர்கள் யாரும் இல்லை.கோவிலின் வெளியே வந்து அமர்ந்திருந்தேன்.பூஜை முடிந்து வீடு செல்ல வந்த ஐயர்
"தம்பி ஊருக்கு புதுசோ, இந்த பக்கம் நான் உங்களை காணவில்லை" என கேட்டார்.
"இல்லை ஐயா நான் இந்த ஊர்தான்"
"அப்ப உங்கன்ட வீடு எங்க இருக்கு"
25 வருடங்களுக்கு முதல் எங்களுக்கு சொந்தமாய் இருந்த நான் ஒடி விளையாடிய,பாடசாலையில் உயர்கல்வி படிக்கும் பொழுது சைக்கிளில் மதிலில் சாய்த்துவிட்டு பெடியங்களுடன் அரட்டை அடித்த வீட்டை சொன்னேன்.உடனே அவர் தற்பொழுதைய சொந்தகாரனின் பெயரை சொல்லி அவரின் தம்பியோ என கேட்டார் .
"இல்லை ஐயா இப்ப அவர்தான் வாங்கி இருக்கிறார் நாங்கள் வீட்டை வித்து 20 வருசத்திற்கு மேலாய் ஆகிவிட்டது"
"அது தானே பார்த்தேன் 20 வருசத்திற்க்கு மேலாக இந்த கோவிலில் பூஜை செய்கிறேன் எனக்கு தெரியாத ஆட்களா இந்த ஊரில்”
ஐயரின் பூர்வீகத்தை அறிவோம் எண்டுபோட்டு முந்தி இந்த கோவிலில் பூஜை செய்த குருக்களின் சொந்தமோ நீங்கள் என்று கேட்டேன்.
"அவரை உங்களுக்கு தெரியுமோ,அவர் என்ட மாமா "
"உங்களுக்கு அவரை எப்படி தெரியும்"
"எங்கன்ட திருவிழாவில் அவரிட்டதான் காளாஞ்சி வாங்கிறனான்"
"எந்த திருவிழா உங்கன்ட"
"ஒன்பதாம் திருவிழா "
"அட நீங்கள் ஒன்பதாம் திருவிழா உபயகாரரின்ட ஆட்களே,முதலே சொல்லியிருக்கலாம் "சரி நான் வீட்டை போயிற்று வாறன் பிறகு சந்திப்போம்.
நடந்து வீடு செல்லும் பொழுதும் யாராவது என்னை அடையாளம் கண்டு கதைப்பார்களா என்ற ஏக்கத்துடனே வீடு சென்றடைந்தேன்.
அடுத்த நாள் காலை 5 மணிக்கு கோவில் மணியோசை கேட்டு விழித்தேன்.தொடர்ந்து 'விநாயகனே விணை தீர்ப்பவனே' என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்கதொடங்கியது.குளித்து மீண்டும் கோவிலுக்கு சென்றேன்.

சுதுமலை அம்மன் கோவிலின் வளவில் சிவனுக்கும்,முருகனுக்கும் வைரவருக்கும் தனி கோவில்கள் உண்டு.சிவன் கோவில் திருவிழாவிற்கே நான் ஊருக்கு சென்றேன்.அந்த திருவிழா எனது மாமா உயிருடன் இருக்கும் பொழுது செய்து வந்தார் .அவர் கொழும்பில் இருந்தபடியால் திருவிழாவுக்குரிய பணத்தை அனுப்புவார் நான் தான் தெற்பை போடுவதுவழமை.பிற்காலங்களில் நான் புலத்தில் இருந்து பணம் அனுப்புவேன் பெரியம்மா செய்து கொண்டிருந்தார்.
25 வருடங்களின் பின்பு மீண்டும் என் பணத்தில் தெற்பை போட்டு வழிபடும் சந்தர்ப்பம் முதல்தரம் கிடைத்தது.அன்று ஒருத்தரும் என்னிடம் நீங்கள் யார்? ஊருக்கு புதுசோ என்ற கேள்வியை கேட்கவில்லை?மூலஸ்தானத்தை பார்த்தேன் சிவலிங்கம் என்னை பார்த்து "டேய் நீயும் ஊரவன் தான்டா"என்ற மாதிரி இருந்தது.
என் ஊர்கோவில் என்னை அடையாளப்படுத்த உதவிற்று..எல்லா புகழும் கோவிலுக்கே....இதற்குதான் அந்த காலத்தில் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொன்னார்களோ என எண்ண தோன்றுகிறது.


ஒரு இனத்தை அழிக்க பல வகையிலும் முயற்சி செய்தும் அவர்களின் ஆத்மீக பலம் அந்த மக்களை மீட்டுள்ளது என்பதை நேரில் கண்டேன்.எந்த இசங்களும் ,ஆயுதங்களும்,தனிமனித சித்தாத்தங்களும் செய்ய முடியாததை கோவில் செய்துள்ளது.

ஒம்நமசிவாய....
புத்தனுக்கு கிறுக்கு பிடிச்சிட்டு நினைக்க வேண்டாம்....

Saturday, April 20, 2013

"....கண்டேன் என் க....."

சிட்னியில இருக்கிற குமர்கள்,குமரங்கள்,கிழடன்கள்,கிழடிகள்,நடுவயதானர் ஒருவித அருட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் .காரணம் என்ன தெரியுமோ இளைய தளபதி விஜய் எங்கன்ட சிட்னியில நிற்கிறார் எனபதுதான். தலைவா படப்படிப்பு சிட்னியில் நடைபெறுகிது. கமராவுக்கு முன்னாள் நின்று இளை தளபதி இலையான் கலைப்பது போல் கையை,காலை ஆட்டினால் கோடியாக பணம் அவரது வங்கியில் போய்சேரும்.
எங்களுக்கு என்ன வரும் ??????


"தம்பி என்னை ஒருக்கா கூட்டிகொண்டு போறியேடா”,
"எங்கன ஆச்சி கோவிலுக்கோ? பஜனைக்கோ? அல்லது எவனாவது புது சாமிமார்,சாத்திரிமார் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறானோ "
"இல்லையடா தம்பி எங்கன்ட தளபதி விஜய் தலைவா பட சூட்டின் சிட்னியில் எடுக்கிறாங்கள் அதுக்கு வந்திருக்கிறார்"
நான் எம்.ஜி.ஆர் ,சிவாஜி , எல்லாம் அந்த காலத்தில
பார்த்தனான் இந்த புதுசா நடிக்கறவங்கள் ஒருத்தரையும் பார்க்க கிடைக்கவில்லை,இந்த சந்தர்ப்பத்தையும் விட்டால் இனி என்ட வாழ்க்கையில் எப்பகிடைக்குமோ? இல்லாட்டி கிடைக்காமலயே மண்டையை போட்டுவிடுவனோ தெரியாது"
ஆச்சி இப்படி சொன்னபடியால் எனது மனது கொஞ்சம் இலகி போய்விட்டது.
"ஆச்சி கோவிலுக்கு போய் சாமியை கும்பிடப்போறீங்கள் என்றால் சொல்லுங்கோ கூட்டிகொண்டு போரன்.உந்த சினிமா கதாநாயகனை தூக்கி பிடிக்க நான் வரமுடியாது,மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஆச்சி."
" நீ கூட்டிக் கொண்டு போகட்டி உன்ட மனிசியை கூட்டிகொண்டு போகசொல்லு"
"அவள் வந்தா கூட்டிகொண்டு போங்கோ"
கலியாணத்திற்க்கு பின்பு மனிசிக்கு நான் தான் கதாநாயன் என்று நினைத்திருந்தேன்.ஆனாபடியால் சினிமா கதாநாயகனிடம் அவ்வளவு மோகம் இருக்காது .ஆச்சியை அழைத்து செல்லமாட்டாள் என்றிருந்தேன்.ஆனால் அவளும் ஆச்சியும் சேர்ந்துதான் திட்டம் போட்டிருக்கிறார்கள் பின்பு தான் தெரியவந்தது.
"வயசு போன நேரத்தில் ஆச்சி கேட்கிறா,கூட்டிக் கொண்டு போயிட்டு வரட்டேயப்பா"
"சரி,அவர் எந்த ஹொட்டலில் நிற்கிறார் என்று தெரியுமோ?எங்க போய் பார்க்கப் போறீங்கள்."
"அவர் உங்க பராமட்டாவில் ஒரு ரெஸ்டோரன்டில் சூட்டிங்க்கு வந்திருக்கிறார் ஆச்சியுடன் போய் பார்த்துவிட்டு வாரன் "
என்று காலையில் வெளிக்கிட்டவையள் வரும் பொழுது பிற்பகல் 4 மணி ஆகியிருக்கும்.
"அடி பிள்ளை, இவன் தம்பியை ஒரு பக்கமாக பார்த்தால் விஜய் மாதிரி இருக்கு என்னடி" ஆச்சி லெட்டா வந்ததுக்கு கொஞ்சமாக ஐஸ் வைத்தார்.

"விஜயயை படத்தில் பார்த்ததிலும் பார்க்க நேரில் பார்க்கும் பொழுது கூட வடிவாக இருக்கிறார்."என ஆச்சி மனிசிக்கு கொமனட் அடிச்சுது.
வயசு போனதுகள் ஊரில் படம் பார்த்து பழகினதாலும்,வெளிநாட்டுக்கு வந்து டிவி யில் படம்பார்த்த பழக்கதோசத்தாலும் இந்த கதாநாயக வழிபாடு,மோகம் இருக்கும் என எண்ணிகொண்டிருக்கும் பொழுது என்னுடைய கை தொலைபேசி ஒரு ராகத்துடன் சினுங்கியது.
"கலோ "
"யார் சுரேஸோ"
"ஒம் சுரேஸ் தான்"
"நாளைக்கு விஜய்யின் சூட்டிங் எங்க நடக்குது என்று தெரியுமோ"
"நான் அவரின்ட பி.ஏ இல்லை"
"சும்மா பகிடி விடாமல் சொல்லுங்கோ,உங்கன்ட மனிசிதான் , ஆச்சி விஜயை பார்க்க கூட்டிக்கொண்டு போனவவாம்"
"எனக்கு தெரியாது ,எதற்கும் லைன்னில் இரும் மனிசியிட்டை கேட்டு சொல்லுறன்"

"இஞ்சாரும் இவன் விஜய் சிட்னியில எங்க நிற்கிறான் என்று கனகர் கேட்கிறார் உமக்கு தெரியுமோ "
" இன்றைக்கு டார்லிங் காபரில ,நாளைக்கு காலையில திருப்பியும் பரமட்டா பார்க்கில்,நாளைக்கு பின்னேரம் காபர் பிரிட்ஜ்,நாளன்டைக்கு ....."இப்படி மனிசி அடிக்கு கொண்டே போனாள்.
" கனகு இந்தா மனசியிட்டயே கேள்ளப்ப" எண்டு தொலை பேசியை கொடுத்துவிட்டேன். இவளுக்கு எப்படி விஜய்யின் செடுல் எல்லாம் தெரியும் என்று மில்லியன் டொலர் கேள்வி மனதில் எழும்பியது.சரி பொம்பிளைகள் தான் விஜய்யை பார்க்க அலையுதுகள் என்றால் இவன் கனகனும் அலையிறான் பரதேசி என மனதிற்குள் திட்டிப்போட்டு விட்டிட்டேன்.
மனிசியின் கைதொலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கு என சினுங்கிச்சு நான் கண்டுகொள்ளவில்லை.கைதொலைபேசி வழங்குனர் காசு கட்ட சொல்லி செய்தி அனுப்புறான் எண்டு போட்டு பேசாமல் இருந்திட்டேன்.
வீட்டு தொலைபேசி அலறியது .
"கலோ"
" அங்கிள் அண்டி இல்லையோ?"
"வீட்டு வேலையா இருக்கிறா "
"அண்டியிட்ட சொல்லுங்கோ நான் விஜய்யின் சூட்டிங்கில் நிற்கிறன் என்றும்,அவவின்ட மொபைலுக்கு நான் விஜயின் தோலில் கை போட்டுக் கொண்டு எடுத்த படம் அனுப்பியிருக்கிறன் எண்டும் சொல்லுங்கோ"
மனிசியிட்ட சொன்னதுதான் செய்து கொண்டிருந்த வேலை எல்லாம் அப்படியே விட்டிட்டு மொபைலில் வந்த விஜயின் படத்தை பார்த்து ரசித்தாள்.ஆச்சிக்கும் தகவல் பரவியது.வீட்டுக்கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தேன்.ஆச்சியுடன் அவரின் பேத்தி சுருதியும் நின்றாள்.சுருதியும் கணவனும் கணக்காளராக பணிபுரிகின்றனர். கணவன் விஜயை விடவும் அழகானவன் அவனே ஒரு கதநாயகன் போலத்தான் இருப்பான்.
"அண்டி விஜய்யின் சூட்டிங்பக்கத்திலதான் நடக்குது வெளிக்கிடுங்கோ போய் பார்ப்போம்,சுமி இப்பதான் எஸ். எம்.எஸ் அனுப்பினவள் "
சுமிதா பல்கலைகழகத்தில் சட்டத்துறையில் இறுதியாண்டில் பயில்கின்றாள் அவளை எல்லோரும் செல்லமாக சுமி என அழைப்பார்கள்.

விஜயயின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற அவசரத்தில் எல்லொரும் வெளிக்கிட்டு ஒடினார்கள்.காலை 10 மணியளவில் புறப்பட்டவர்கள் மாலை 5 மணியளவில் வீடு திரும்பினார்கள்.
"அட தம்பி ஒரு தேத்தண்ணி போடடா குடிப்பம் சரியா கலைக்குது"
" ஆச்சி உந்த வயசில உங்களுக்கு உது தேவையா?"
"வேற என்னத்தை கண்டேன்"
"ஏன் அப்புவை கண்டனியள் தானே ...அதுசரி அப்பு விஜய் மாதிரி இருப்பாரோ?"
"சும்மா போடா ....அவர் ஜெமினி மாதிரி இருப்பார் ஆனால் கருப்பு"என்று சொல்லி வெட்கப்பட்டார்.மனிசி கொண்டு வந்த குளிர்பாணம்,சுடு பாணம் பருகியபடியே விஜய் புராணம் தொடங்கியது.

சுமி அங்கு எடுத்த படங்களை எல்லொருக்கும் காட்டினாள் ,அத்துடன் ஒட்டோகிராப்பில் சைன் வாங்கியதாகவும் அப்பொழுது விஜய்யின் கை தனது கையை தொட்டதாகவும் ஆனபடியால் இன்று தான் கை கழுவப்போரதில்லை என சொல்லி மகிழ்ந்தால்.
மனுசனுக்கு தெரியாமல் ஹொட்டலுக்கு பூச்செண்டு அனுப்பியதாகவும் .அதை அனுப்புவதற்கு தான் பட்ட கஸ்டங்களை சொல்லி பூரிப்படைந்தாள் சுருதி.
சிவாஜி கனேசன் பைலட் பிரேமநாத் படசூட்டிங்க்கு வந்த பொழுது சிவாஜியுடன் எடுத்த படத்தை 83 இனக்கலவரத்தில் சிங்களவன் எரித்துவிட்டான் என்று சொல்லி ஆச்சி துக்கப்பட்டாள்.
கலியாண கட்டின புதுசில இந்தியாவுக்கு போனபொழுது இந்த மனுசனை சூட்டிங் பார்க்க கேட்க கூட்டிகொண்டு போகமாட்டேன் எண்டிட்டார் .ஒரு நாள் எதிர்பாராத விதமாக மோகனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த மனுசன் பிலிம் போடாமல் கமராவை தட்டியிருக்கு ,என்று என்ட மனுசி தன்னுடைய கவலையை தெரிவித்தாள்.
இதெல்லாம் கேட்ட எனக்கும் எதாவது சொல்ல வேணும் போல இருந்தது.எனக்கு மயிர் வெட்டுகிறவர்தான் சிட்னியில விஜய்க்கும் மயிர் வெட்டுகிறார்...கி..கி.....

(க)..... தாநாயகன்
ணவன்
டவுள்

அளவெட்டியில் இருந்து அடையார்வரை

"அம்மா, நான் மிருதங்கம் பழகட்டே"

"நீ என்ன மேளக்காரனின்  பிள்ளையே ,போய் படிக்கிற அலுவலை பார்"

"அது மேளம் இல்லை அம்மா ,மிருதங்கம்...நேற்று சரஸ்வதி பூஜைக்கு பள்ளிக்கூடத்தில் ஒருத்தர் வந்து ,வ‌டிவா தலை எல்லாம் ஆட்டி அடிச்சவர், "

"எனக்கு மேளத்திற்கும் மிருதங்கத்திற்கும் வித்தியாசம் தெரியும் ,நீ சொல்லித்தரத்தேவையில்லை"

அம்மா மிருதங்கம் படிக்க வேண்டாம் என்று சொன்னபின்பு சுரேஸ் மிருதங்க கச்சேரி,மேளக்கச்சேரி  போன்றவற்றின் ரசிகனாக மட்டும் இருந்தான்.

ஊர் கோவிலில் சுரேஸ் குடும்பத்திற்கும் ஒரு திருவிழா ஒதுகப்பட்டிருந்தது. சுரேஸின் உறவினர்கள் எல்லோரும் அந்த திருவிழாவின் உபயகாரர்கள். கோவில் மேளத்துடன்   இன்னும் இரண்டு கூட்ட
மேளம் அவ‌ர்களின் திருவிழா அன்று நடை பெறும் .எனையோரின் திருவிழாவில்  ஆறு ,எழு கூட்ட தவில்  கச்சேரி நடை பெறும்.ஒரு திருவிழாவையும் சுரேஸ் தவறவிடமாட்டான். திருவிழா வேலைகளை முன்னுக்கு நின்று சுரேஸ் கவனித்துகொள்வான்.

தவில் வித்துவான்களையும்,நாதஸ்வர வித்துவான்களையும் அச்சவாரம் கொடுத்து திருவிழா தினத்தன்று வரவழைப்பதற்காக  அளவெட்டிக்கும், இணுவிலுக்கும் சென்று வித்துவான்மாரிட்ட‌ காசையும் கொடுத்து திகதியைசொல்லுவான்.

"தம்பி இந்த முறை உபயகாரரிட்ட சொல்லி  காசை கூட்டி தாங்கோ"

"ஒம் வித்துவான் ,அப்பாவிட்ட சொல்லுறன்,ஆனால் நீங்கள் இந்த முறை புதுசா வந்த‌ மூன்றுமுடிச்சு படப்பாடலை முதல் தரம் எங்கன்ட திருவிழாவில்தான் வாசிக்க வேணும்"

"ஒம்,ஒமோம்...."

திருவிழா தினத்தன்று மதிய சாப்பாட்டுக்கு  அடிச்ச ஆடு ,சாராயம் எல்லாம் வீட்டில் வைத்து வித்துவான்களுக்கு கொடுக்கப்படும்.சாராயம் அளவாகத்தான் கொடுக்கப்படும்  போதை கூடினால் இரவுக்கச்சேரிக்கு வரமாட்டார்கள் என்று பயத்தால் அந்த முன் எச்சரிக்கை.

வித்துவான்கள்  தங்கத்தால் செய்த புலிப்பல் மாலை,ஐந்து விர‌லுக்கும் மோதிரம் அணிந்திருப்பார்கள் . சில வித்துவான்கள் தங்களது நாதஸ்வரத்திற்கு தங்கத்தால்  சில அலங்கார வேலைப்பாடுகள் செய்திருப்பார்கள்.இவற்றை எல்லாம் பார்த்து சுரேஸ் எண்ணியதுண்டு இவர்கள் பெரிய பணக்காரர்கள்
என்று.

இப்படித்தான் ஒருமுறை திருவிழா ஒழுங்குகளுக்காக கூட்டம் நடை பெறும் பொழுது

"இந்த முறை சின்ன மேளத்தை கூப்பிடுவமோ"என ஒரு பெரிசு கருத்து சொல்ல‌

"சீ சீ ..சின்னமேளத்தை கூப்பிட்டியளோ நான் இந்த திருவிழா கொமிட்டியிலயே இருக்க மாட்டன்"என
இன்னொரு பெரிசு மாற்றுக்கருத்து சொல்ல

"நீ இல்லாட்டி கொடி ஏறாதே"

"என்னடா சொன்னாய்"

உடனே சமாதன விரும்பிகள் எல்லாம் இரண்டு பெரிசுகளையும் சாந்தப்படுத்தி சின்ன மேளம் இந்த
தடவை வேண்டாம் அடுத்த முறை கூப்பிடுவோம்...என ஏகமனதாக முடிவு செய்தனர்.

பொம்பிளைகள் தவில் அடிச்சு நாதஸ்வரம் வாசிச்சா நல்லா  இருக்காது.என சில அம்மாமார்
ஆதங்கப்பட்டினம்.

(1970 களில் சின்னமேளம் அழிய தொடங்கிவிட்டது.)

சிட்னியில் நடைபெறும் கலை,கலாச்சார,பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு சுரேஸ் சமுக அளிக்க
தவறுவதில்லை.இலவச நிகழ்ச்சியான அரங்கேற்றத்திலிருந்து பணம் செலுத்தும் தென்னிந்திய நட்சத்திர இரவு வரை செல்வது அவனது பொழுது போக்கு என்றோ,அல்லது அடுத்த சந்ததியினருக்கு
கலை பண்பாட்டை எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரு உயர்ந்த உள்ளம் என்றோ நீங்கள் நினைக்ககூடாது.....

சுவிங்கத்தை மென்றுகொண்டு குருத்தாரும், பாண்ட்ஸும் அணிந்து கலை ஆர்வமிக்க ந‌டுத்தர
வர்க்க கமானவான் போல அரங்கின் முன் அமர்ந்திருந்தான்.இடைக்கிடை தனது மீசையையும் தடவிக்கொள்வான்... நிகழ்ச்சி தொடங்கிய பின்புதான் தெரிந்த‌து அது மிருதங்க அரங்கேற்றம் எண்டு. வழ‌மையாக அரங்கேற்றம் என்றால் பரதநாட்டியம் தான் நடை பெறுவது வழக்கம். சனிக்கிழமைகளில் வீட்டில் இருந்தால் குடியும் குடித்தனமும் ஆக‌ இருப்பான் என்ற காரணத்தால் மனைவி இவனை இப்படியான நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுவிடுவாள்.ரசனை இருக்குதோ இல்லையோ நிகழ்ச்சியில் இருப்பான்.

திரைச்சேலை விலகியதும் செல்வன் கமேஸின் மிருதங்க அரங்கேற்றம் என அழகாக ஆங்கிலத்தில்
எழுதியிருந்தார்கள்.கமேஸும் தனது திறமைகளை ந‌ன்றாக வெளிப்படுத்தினான்.ஒவ்வோரு ஆவர்த்தன‌மும் முடிய சபையோர் பலத்த கரகோசம் செய்தனர்.

பிரதமவிருந்தினராக  வந்திருக்கும் "அடையாறு திரு சுப்பு சர்மா" அவர்களை மேடைக்கு வருமாறு தாழ்மையுடன் அழைக்கிறோம் என அறிவிப்பாளர் அறிவித்தவுடன் சுப்பு மேடைக்கு சென்றார்
சபையில் இருந்து பலத்த கரகோசம் எழும்பியது. சுப்பு சர்மா தனது சிஷ்யன் கமேஸ் பற்றி புகழ்ந்தார்
..இந்தியாவில் இருந்து கமேஸின் பெற்றோரின் பணத்தில் சிட்னிக்கு வந்து போட்டு கமேஸை
புகழாமல் உம்மடை பக்கத்து வீட்டுக்காரனையே புகழுவான் என நீங்கள் நினைப்பது புரிகின்றது.சுப்பு சர்மாவுக்கு பொன்னாடை போர்க்கப்பட்டது..கமேஸ் சர்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

அடையாறு கலைஞனுக்கு கிடைத்த முதல் மரியாதை அளவெட்டி கலைஞனுக்கு கிடைக்கவில்லை. மிருதங்கமும் தோல்கருவி,மேளமும் தோல் கருவி வாசிப்பது மனிதன் இருந்தும் பாகுபாடு
. அவனது சோசலிச மூளை சோசலிசம் பேசியது.

இப்படிதான் இன்னோரு நாள் எதோ வியுசன் முயுசிக் என்று போனான்.மேல‌த்தேய இசையும் கீழைத்தேய இசையும் ஒன்றாக கலக்கிற இடம் என்று சனம் சொன்னதை கேட்டுப்போட்டு இவனும் சென்றான்.

மேடையில் பலவிதமான இசைக்கருவிகள் இருந்தன‌ ஒரு சில இசைக்கருவிகள் மட்டும் இவனால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. பெண் ஒருவர் நாதஸ்வரம் போன்ற கருவியை வைத்திருந்தார் நாதஸ்வரத்தை விட சிறியது. இன்னொரு பெண் நாதஸ்வரம் போன்ற வளைந்த ஒரு கருவியை வைத்திருந்தார்.இரு கருவிகளும் நல்ல பளபளப்பாய் மின்னியது.வெளிநாட்டுக்காரன்  நாதஸ்வரத்தை மாத்திப்போட்டாங்கள் என்று எண்ணினான்.

"இங்க பாரன் எங்கன்ட நாதஸ்வரத்தை இந்த வெள்ளைகள் என்ன செய்து வைத்திருக்குதுகள்,அதை வைச்சிருக்கிறது எங்கன்டஆட்களின் பிள்ளைகளே"என பக்கதில் இருந்த மனைவியிடம் கேட்டான்.

"நாசமாய் போச்சு அது நாதஸ்வரமில்லை,வலப்பக்கம் இருக்கிற பிள்ளை வைச்சிருக்கிறது கிலாரினட்,நடுவில இருக்கிற பிள்ளை வைச்சிருக்கிறது சக்சாபோன்,அந்த இரண்டு பிள்ளைகளும்
எவ்வளவு அழகாக  வாசிக்கினம்.....உதுக்குத்தான் சொல்லுறனான் இப்படியான‌ இசை நிகழ்ச்சிக்கு
வந்து பொதுஅறிவை வளர்க்க வேணும் என்று
...."

Thursday, February 14, 2013

கப்டன்

சுரேஸ் அவனது சினேகிதருடன் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவான்.சுரேஸும் அவனது சினேகிதர்களும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவனது பக்கத்து வீடு,முன்வீடு ,பின் வீடுகளில் இருந்த அவனது வயதை ஒத்த பெடியள்தான் அவனது கூட்டாளிமார்.ஐந்தாம் வகுப்பு மட்டும் அயலில் உள்ள பெட்டை பெடி எல்லாம் ஒன்றாக தான் அந்த புளிய மரத்தடியில் விளையாடினதுகள்.பிறகு பெட்டைகள் வாரதில்லை பெடியள் மட்டும் அந்த மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவாங்கள்.

புலத்தில இப்ப எங்கன்ட பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கின்ற பிராண்டட் கிரிக்கட் மட்டையோ அல்லது பந்து போன்றவை அந்த காலத்தில் சுரேஸுக்கோ அல்லது அவனது சினேகிதருக்கோ கிடைக்கவில்லை.விளையாட வேணும் என்ற ஆசை ஆனால் அதற்குறிய பொருட்கள் மட்டும் அவர்களிடம் இருக்கவில்லை,இருந்தாலும் அவர்கள் முயற்சியை கைவிடவில்லை.தென்னை மட்டையின் அடிபாகத்தை வெட்டி கைப்பிடிக்கு சைக்கிள் டியூப்பினை போட்டு யாழ்ப்பாண பிராண்டட் கிரிக்கட் மட்டையை செய்து போட்டார்கள். றப்பர் பந்தின் சொந்தகாரன் பக்கத்து வீட்டு ரவி.விளையாட்டு முழுவதும் தானே பந்து போட வேண்டும் என அடம் பிடிப்பான். பந்து போட கொடுக்காவிடில் பந்தை தூக்கி கொண்டு வீடு சென்று விடுவான் .இதனால் ஆத்திரமடைந்த சுரேஸ் சொந்தமாக ஒரு பந்தை வாங்க வேண்டும் என முடிவெடுத்தான் .ஆனால் பந்து வாங்க அவனிடம் பணம் இல்லை.
அங்கு விளையாட வரும் எல்லோரிடமும் காசு சேர்த்து ஒரு பந்தை வாங்குவோம் என தீர்மாணித்து அமுல் படுத்தினான் .அடுத்த நாள் எல்லோரும் 25 சதம் கொண்டு வந்தார்கள் .உடனே மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் தனியாக கடைக்கு சென்றான். கடைக்கரானிடம் "அண்ணே பார்த்து போட்டு தாங்கோ " என கெஞ்சி அரைவாசி விலைக்கு பந்தை வாங்கி போட்டான். தனக்குறிய பங்கையும் போடாமல் விட்டுவிட்டான். இது எனைய குழு அங்கத்தவர்களுக்கு தெரியாது. நண்பர்களிடம் கடைக்காரர் முதலில் சொன்ன விலைக்குத்தான் பந்து வாங்கினதாக சொன்னான் .மிகுதி பணத்தை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான்.
அவனது குழுவில் எட்டு பேர் வரை இருந்தனர்..அநேகர் இவனது வயதை ஒத்தவர்கள் .சின்ன பெடியன்களும் இணைந்து கொண்டனர்.ரவி தனிப்படுத்தபட்டமையால் அயல் கிராமத்திற்கு விளையாட செல்வான்.பற்றையும் பந்தையும் பத்திரப்படுதும் பொறுப்பை சுரெஸ் எடுத்து கொண்டான். இதனால் அந்த குழுவுக்கே அவன் பொறுப்பாளன் போல செயல் பட தொடங்கினான்.குழு அங்கத்தினர் இவனை கிண்டல் அடிப்பதும் உண்டு.
"உவருக்கு தான் கப்டன் என்ற நினைப்பு"என்று சொல்ல
"என்னிடம் தானே பற்றும் பந்தும் இருக்கு அப்ப நான் தானே கப்டன் ,போஸ் எல்லாம் " என்று சிரித்தபடியே கூறுவான்.
"உந்த தென்னை மட்டை பற்றை வைச்சுகொண்டு இங்கிலாந்து டீமுக்கு கப்டன் மாதிரி கதைக்கிறாய்" என சிலர் கிணடல் அடித்தனர்.
ஒரு நாள் சுரேஸ் சிக்சர் அடிக்க முயற்சி செய்ய பந்து பக்கத்துவீட்டு பிலாமரத்தில போய் மாட்டிக்கொண்டுவிட்டது.கையில் இருந்த பற்றும் தவறிவிழுந்து உடைந்து விட்டது.தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது.எல்லோருக்கும் விளையாட வேணும் என்ற உத்வேகம் இருந்ததால் உடனடியாக அந்த உத்வேகத்தை தனிக்க பேணி(டின் ...ரின்) விளையாட்டை விளையாட தொடங்கினார்கள்.வீட்டில் அம்மா பலசரக்கு சாமான் போட கழுவி வைத்த லக்ஸ்பிறே ரின்களை யும் பழைய பந்தையும் எடுத்து கொண்டு வந்தான். இதனால் அவன் அம்மாவிடம் திட்டு வாங்கினது ஒரு பெரிய கதை.
"அட ரின் விளையாட்டிலும் இவன் 'கப்...... ரின்'"டாப்பா எனகிண்டலடித்தனர் .அவன் கண்டுகொள்ளவில்லை,கப்டன் என்று சொல்லுறான்கள் அப்படியே அதை நடைமுறைபடுத்த வேணும் என மனதில் எண்ணிகொண்டான்...

டெனிஸ் பந்தும்,ஒரு நல்ல பற்றும் வாங்க வேணும் என எல்லோரும் முடிவெடுத்தனர்.
தச்சு தொழில் செய்யும் ஒருவரிடம் போய் கேட்டார்கள் .பணம் தந்தால் செய்து தருவதாக அவர் சொல்ல, தீவிரமாக காசு சேர்த்து பற்றை செய்து போட்டார்கள்.
அவனது தீவிர முயற்சியும்,அயராத உழைப்பும் சக குழுவினர் அவனை கப்டன் ,கப்ரின் என அழைக்க தொடங்கிவிட்டார்கள்.

சிலர் கப்டனுக்கும் அடைமொழி வைத்து அழைக்க தொடங்கினார்கள்.சில வயசு போனதுகள் "டேய் கப்டன்"என்றும் வயசு குறைந்ததுகள் "கப்டன் அண்ணா" என்றும் அழைத்தார்கள்.
குழு உறுப்பினர்களுக்கு சமனான பந்து வீச்சும் துடுப்பாட்டமும் அனுமதித்தான் இதனால் எல்லோருக்கும் அவன் மீது அன்பு உண்டானது.

ரவி அயல் கிராமத்தில் உள்ள டிமில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு எதிராக விளையாடுவான்.சுரேஸுடன் விரோதமாக பழகியபடியால் அந்த கிராம மக்கள் எல்லோரையும் விரோதமாக பார்த்தான்.
புளியமரத்தடியில் விளையாடுவதை விட்டுவிட்டு இப்பொழுது தெருவிலும் ,பாடசாலை விளையாட்டு மைதானத்திலும் விளையாட தொடங்கி விட்டார்கள்.
ஸ்பின்,வாஸ்ட் போல்,அம்பயர்,லெக் அம்பயர்,ஒவர்,எறிபந்து இந்த சொல்லுகளை எல்லாம் பாவிக்கதொடங்கினார்கள்,காலில் எங்கு பட்டாலும் எல்.பி.டபில்யூ. க்கு கத்துவார்கள் ஆனால் அம்பயர் கொடுக்க மாட்டார்.அவரும் அந்த டீமில் தான் விளையாடுவார்.அவர் அடுத்து பற் பண்ண வேணும் என்றால் மட்டும் கையை தூக்குவார்.அவர் ஏற்கனவே பற் பண்ணி அவுட்டானவர் என்றால் கையை தூக்கவே மாட்டார்.
அனேகமாக விக்கட் விழுத்த வேணும்.இல்லாவிடில் கட்ச் பிடிச்சு ஆட்களை அவுட்டாக்க வேணும்...விக்கட்டில பட்ட பிறகு சில வேளை நோ போல் சொல்லுவினம்...பயங்கர அலாப்பி கிங்மார் இருந்தவங்கள்.

விளையாடுபவர்கள் பல வித கட்டளைகளை போடுவார்கள்.
"காலுக்கு நேரா போடு"

"பந்தை தூக்கி போடு என்ட பக்கமா நான் கட்ச் பிடிக்கிறன்"

"லெக்கில சைட்டா போடு கீப்பருக்கு டிப் போகும்"
சில நேரங்களில் கட்ச் விடுபட்டால் இன்னோருதன் வந்து சொல்லுவான் நான் நிக்கிறன் நீ போ எண்டு .அவரின்ட கையுக்கும் பந்து வரும் கட்ச்சை விட்டிடுவார்

மற்ற டீம்காரன் சொல்லுவான் "அடிடா சிக்ஸ்"

"தூக்கி அடிக்காத கட்ச் பிடிச்சு போடுவாங்கள்"

ஆனால் பந்து போடுறவன் தன் இஸ்டத்திற்கு பந்தை போடுவான்.பற் பண்ணுபவன் தன்ட இஸ்டத்திற்கு பற் பண்ணுவான்.

இப்படி எங்கன்ட அரசியல் கருத்துக்கள் மாதிரி விளையாட்டு கருத்துக்களும் தூள் பறக்கும்....

ஒருநாள் இராணுவ சோதனைச்சாவடிக்கு கிட்டடியில் நிற்கும் பொழுது கப்டன் அண்ணே என்று அவனது குழுவை சேர்ந்தவன் கூப்பிட்டான். இவனுக்கு உயிர் போய்விட்டு திரும்பி வந்த மாதிரி இருந்தது ,இவனது நல்ல காலம் அங்கிருந்த இராணுவத்தினருக்கு கேட்கவில்லை.

கிராமத்தில் கிரிக்கட்டில் சூரனாக இருந்தாலும் பாடசாலை டீமில் அவனை நிர்வாகம் தெரிவு செய்யவில்லை.
விமானஒட்டி ,கப்பல் ஒட்டி எல்லோரையும் கப்டன் எண்டு சொல்லுறது மட்டுமல்லாமல் இராணுவத்தில் பணிபுரிபவனையும் கப்டன் என அழைக்கிறார்கள் என்று இவனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.போதாக் குறைக்கு பாடசாலை இல்லங்களிலும் கப்டன் இருக்கு என்னடா இது என மனதில் எண்ணிக்கொண்டான்.

பாடசாலைபடிப்பு முடிந்தவுடன் ,தனது பெயருக்கு முன்னாள் கப்டன் வரக்கூடிய தொழில் பார்க்கவேண்டும் எண்ணியவன் எந்த தொழில் செய்யலாம் என யோசிக்க தொடங்கினான்.

விமான விபத்து நடந்தால் உடம்பே கிடைக்காது அந்த எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டான்.கப்பல் மாலுமியாக வந்தாலும் கலியாணம் கட்டி மனிசியை கூட்டி கொண்டு போக ஏலாது என சிலர் சொல்ல கேட்டதால் அந்த யோசனையும் கைவிட்டான்...
இராணுவத்தில சிங்களவன் சேர்க்கமாட்டான், அப்படி செல்வாக்கை பயன்படுத்தி சேர்ந்தாலும் புலிகள் வைக்கிற கன்னி வெடியில் ஆள் சுக்குநூறு என்று எண்ணியவன் கப்டன் ஆசை மறந்துவிட்டான் (துறந்துவிட்டான்)

"ரவி டேய் மச்சான் எப்படி இருக்கிறாய்,ஊர் பக்கம் போகவில்லையோ"

",சிட்னியில் இருக்கிற டமிழ்ஸின் பிள்ளைகளுக்கு கிறிகட் கோட்ச் பண்ணுகிறன் அத்துடன் ஒவர் 40(40 வயத்துக்கு மேற்பட்டோர்)டிமுக்கு கப்படனா இருக்கிறன் ....உனக்கு தெரியும்தானே நான் எங்கன்ட சனத்தோட பழகிறதில்லை எண்டு,அதுசரி நீ என்ன செய்கிறாய்"

"நான் என்கன்ட சனத்தோட நின்று பந்து உருட்டிறன்.........கி கி..."

முக்கிய குறிப்பு: இது சுத்த கற்பனை கதை கலப்படமில்லை..அத்துடன் கிறிகட்டுக்கும் என‌க்கும் வெகு தூரம்....