Wednesday, November 26, 2014

வித்தியா வீட்டுச் செல்லம்

மீண்டும் வசந்தகாலம் மரம் ,செடி, கொடி பூத்து குலுங்க தொடங்கிவிட்டன.வீட்டுத்தோட்டம் வைக்கும் சிட்னிவாழ் பெரும் குடிமக்கள் தங்களது முயற்சியில் தீயா வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்.அவர்கள் தீயா வேலை செய்வதைப் பார்த்து சுரேஸும் கொஞ்சம் மிளகாய் கன்றுகளை வாங்கி வந்து நடத்தொடங்கினான். சுரேஸின் நடமாட்டத்தை அறிந்த பின் வீட்டு நாய் குரைத்தது.உடனே நாயின் உரிமையாளர் ஆங்கிலத்தில் நாயைவிட அதிக சத்தத்தில் குரைக்க நாய் குரைப்பதை நிறுத்தியது. மீண்டும் குரைக்க தொடங்க ஆத்திரமடைந்த சுரேஸ் "ஏய் நாயே நானா, நீயா இந்த ஏரியாவுக்கு முதல் வந்தது"உரத்த குரலில் கத்தியவன் ஊரா இருந்திருந்தால் பொட்டுக்குள்ளால் பூர்ந்து வந்து உன்ட காலை அடிச்சு நொருக்கியிருப்பேன் என் மனதில் திட்டியபடியே மிளகாய் கன்றுகளை நடத்தொடங்கினான்.
நாய் மீண்டும் குரைக்காமையால் ,தனது திட்டலுக்கு பயந்து விட்டது, தமிழ் அறிந்த நாயாக்கும் என எண்ணி சிரித்துக்கொண்டான்.

"பிராவுனி" ஊரில அவன் வளர்த்த நாயின் பெயர் .பெயர் மட்டும் ஆங்கில பெயர் ஆனால் தெருநாய்.முற்சந்தியில் யாரோ மூன்று குட்டிகளை கொண்டுவந்து விட்டிட்டு போய்விட்டார்கள் .இவன் ஆசைப்பட்டு ஒன்றை தூக்கி வந்துவிட்டான்.நாய்குட்டியின் முனகலை கேட்ட தாயார் 
"தம்பி யாரப்பு உதத் தந்தது" 
"சந்தியில நிண்டது நான் பிடிச்சிட்டு வந்தனான் அம்மா"
"அது பெட்டை நாய்குட்டியாக இருக்கும் அப்பு ,பிறகு குட்டி போட்டுதென்றால் கரைச்சல் நீ அந்த இடத்திலயே விட்டப்பு"
"அம்மா ....பிளிஸ் அம்மா நான் வளர்க்க போறன்"
நாய்குட்டியை தூக்கி பார்த்த தந்தை, இது கடுவன் ஆசைபடுகிறான் வைச்சிருக்கட்டுமன் என அவனுக்கு ஆதரவு குரல் கொடுக்க தாயார் தலையை ஆட்டி அனுமதிகொடுத்தார். அம்மா அந்த நாயை வளர்ப்பத்தற்கு சில நிபந்தனைகளை விதித்தார்.நாயை வீடுக்குள் விடக்கூடாது,நாயை தொட்டு விளையாடிய பின்பு கை கழுவிய பின்புதான் வீட்டுக்குள் வர வேண்டும்
குசினிக்குள் சென்று நாய்க்கு சாப்பாடு,தண்ணிர் வைப்பதற்காக கோப்பைகளை தேடிக்கொண்டிருந்தான் .
"என்னப்பு குசினிக்குள் சத்தம் கேட்குது உன்ட நாய்குட்டி உள்ள வந்திட்டுது போல கிடக்கு,பிடிச்சு வெளியால விடு"
"அது நான் அம்மா, சாப்பாடு வைக்க கோப்பை ஒன்று தேடுறேன் "
"சனம் சாப்பிட கோப்பை இல்லை உனக்கு நாய்க்கு சாப்பாடு வைக்க கோப்பை வேண்டிக்கிடக்கு,சிரட்டையில் சாப்பாடு போடப்பு"
இதற்கு எதிர்கதை கதைச்சால் நிச்சயம் நாய்குட்டியை இழக்க நேரிடும் என்ற காரணத்தால் சிரட்டையிலயே பால்,தண்ணிர் ,உணவுயாவும் கொடுத்தான்..
அம்மாவின் மச்சாள் முறை உறவுக்கார பெண் அத்துடன் அவரின் நெருங்கிய நண்பியும் ஆவார்.
வித்தியா என்ற ஒரு பெண்பிள்ளை உண்டு, சுரேசை விட இரண்டு வயது குறைவு.தாயும் மகளும் ஒன்றுவிட்ட கிழமையாவது சுரேஸின் வீட்டுக்கு வருவார்கள்.வருபவர்களுக்கு எல்லாம் நாய்குட்டியை காட்டுவதுதான் சுரேசின் பொழுதுபோக்கு ,வித்தியாவையும் அழைத்து சென்று நாய்குட்டியை காட்டியவன் பெட்டியினுள் இருந்து வெளியே எடுத்துவிட்டான் ,இதை எதிர்பாரத வித்தியா "அம்மா" என அலறியபடியே வீட்டினுள் ஒடினாள்.
சுரேஸுக்கும் மீசை அரும்பி வயசுக்கு வர,வித்தியாவும் பருவமடைய அவர்களுடன் சேர்ந்தே நாய்குட்டியும் நாயாகிவிட்டது.வித்தியா சுரேஸின் வீட்டை வருவதை குறைத்துக்கொண்டாள்.பிரவுனி ஒருநாள் வீதியை கடக்கும் பொழுது பஸ்வண்டியில் அடிபட்டு இறக்க கவலையுடன் இருந்த சுரேஸை,"மனிதனே சாகிறான் நீ உந்த நாய்க்கு போய் கவலை படுகிறாய்,இழுத்து கொண்டுபோய் தேசிக்காய் மரத்தடியில் தாட்டுவிடு மரம் நல்லாய் காய்க்கும்" என்றார் தந்தை .அடுத்த ஆண்டு மரம் நல்லாய் காய்க்க தொடங்கியது.

அம்மா சில காய்களை பொறுக்கி அவனிடம் மச்சாள் வீட்டை கொடுக்கும்படி கூறினாள்.அவனுக்குள் ஒருவித கிளுகிளுப்பு அவனை அறியாமலயே உண்டாகிவிட்டது.அவனிடம் இருந்த அழகான ஒரு சேர்ட்டை மாட்டிகொண்டு வித்தியா வீட்டிற்க்கு சென்றான்.வாசலில் இருந்து குமுதம் வாசித்து கொண்டிருந்தவள் 
"அம்மா சுரேஸ் வந்திருக்கிறார் "என்றவள் மீண்டும் தனது கதை புத்தகத்தில் மூழ்கிவிட்டாள் வெளியே வந்த தாயார் அட தம்பி சுரேஸ் உள்ள வாவேன்.
வாசல்லிருந்தவளை பார்த்துகொண்டிருக்கும் பொழுது அவளது தாயார்
"வித்தியா தம்பியை சுரேஸ் என்று கூப்பிடக்கூடாது அவர் உனக்கு அண்ணா முறை" என்றாள்
"அன்ரி அம்மா இதை உங்களிட்ட கொடுக்க சொன்னவ "
"என்னது தம்பி"
"வீட்டு மரத்து தேசிக்காய் ,நான் போயிற்று வாரன்" வந்த வேகத்தில் வீடு திரும்பினான்.....பாய் சுரேஸ் அண்ணா என்ற குரல் நக்கலா, நளினமா, காதலா என்று தெரியாமல் வித்தியா கலியாணம் கட்டி வெளிநாடு செல்லும் வரை ஏக்கத்துடன் இருந்தான்.
வித்தியாவுக்கு இரு ஆண்பிள்ளைகள் வெளிமாநில பல்கலைகழகத்தில் பயில்கின்றனர்.கணவனும் ,தாயாரும்,செல்லமும்தான் அந்த பெரிய வீட்டில் குடியிருக்கின்றனர்.
அடிக்கடி வித்தியாவின் தாயாரை பார்ப்பதற்க்கு வீட்டை சென்றுவருவான் .அவள் இப்பவும் சுரேஸ் அண்ணா என்றுதான் அழைப்பாள்.தாயார் வயது போனாலும் மிகவும் துடிப்பாக தனது வேலைகளை கவனித்துகொள்வார்.

வித்தியாவின் மாமா இவர்களுடன் ஊரில இருந்தவர் பின்பு அவுஸ்ரேலியா வந்தவுடன் அவரையும் இங்கு அழைத்திருந்தார்கள். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு சுரேஸை அழைப்பார்கள் . சுரேஸ்,மாமா,வித்தியாவின் கணவர் மூவரும் ஒன்றாக இருந்து உற்சாக பாணம் அருந்துவது வழமை இருவருடங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார்.
" சுரேஸ் அண்ணா இன்றைக்கு யாரின்ட பிறந்த நாள் சொல்லு ங்கோ பார்ப்பம்"
"மாமாவின்ட"
"செல்லத்தின்ட பிறந்த நாளும் அவரின்ட பிறந்த நாளும் ஒரே நாள்"
"மாமாவை மாதிரித்தான் இவனும், சாப்பாடு நேரத்திற்கு கொடுக்காவிட்டால் கோபம் வந்திடும்,செல்லம் வாடா சாப்பிடுவம்" என தூக்கி அரவணத்தபடியே விலையுயர்ந்த சில்வர் கோப்பையில் ,அலுமாரியிலிருந்த பெட்டியை திறந்து அதனுள் போட்டவள் ,செல்லம் சாப்பிடடா என வயிற்றை யும் முதுகையும் தடவிக்கொடுத்தாள்.
அம்மாவுக்கு ஒரு கிஸ் தாடா ,அப்பா எங்கயடா? அவரை காணவில்லை அதுதான் தேடு,என அவனின் செயல்களுக்கு அவளே விளக்கம் கொடுத்துகொண்டிருந்தாள் .கார் வந்து நின்ற சத்தம் கேட்டு பாய்ந்து ஒடியவனை வாடா வாடா அப்பா உள்ள வருவார்.அப்பாவை கண்ட செல்லம் அவர் மேல் பாய்ந்து தாவிக்கொண்டது.அவரும் அவனுக்கு ஒரு முத்தம் கொடுக்க அதுவும் ஒரு முத்தம் கொடுத்தது. அப்பா வாங்கி வந்த விளையாட்டு பொருளை வெளியே எடுத்து கிலுக்கி காட்டவே பாய்ந்து வாங்கியவன் வீட்டை சுற்றி சந்தோசத்தில் ஒடிவந்தான் .
"ஹலோ சுரேஸ் "
"ஹாய் விமல்"
செல்லத்தை மடியில் வைத்து தடவியபடியே 
"வித்தியா இவனின்ட ரெயினிக் நாளைக்கு இருக்கு ,பிறகு டொக்டரிட்ட அப்பொயின்ட்மன்ட் இருக்கு,மறந்திடாமல் அவனின்ட சாப்பாட்டையும் வாங்கி கொண்டு வர வேணும்"
"எல்லாத்துக்கும் முதல் செல்லத்தை குளிப்பாட்ட அவங்கள் வருவாங்கள் ,செல்லத்துக்கு குளிக்கிறது என்றால் நல்ல விருப்பம்,என்னடா செல்லம் "வினாவியபடியே செல்லத்திற்க்கு முத்தமிட்டாள் வித்தியா.
ஐந்தாறு குடும்பம் பரிசுப்பொருட்களுடன் வந்திருந்தனர் .கப்பி பேர்த்டெ பாடி கேக் வெட்டினார்கள்.கேக் செல்லத்திற்க்கு தித்தி முத்தமும் இட்டனர் விமல் தம்பதியனர்,அத்துடன் பாட்டியும் தந்து பங்குக்கு முத்தமும் கேக்கும் கொடுத்தாள். செல்லத்தின் நண்பர்கள் ஒருத்தரும் அங்கு வரவில்லை.நண்பர்களின் பெற்றோர்களும்,காவலர்களும் தான் வந்திருந்தனர்.
இன்று மாமாவின் பிறந்த நாள் அதே நாள் இவனின்ட பிறந்தா நாளும்,......மாமா எங்களுடன் நல்ல பாசமாய்யிருந்தவர் பாவம் செத்து போயிட்டார்".
"இப்ப என்ன வித்தியா சொல்லுறீர் மாமா ,நாயாக மறுபிறப்பு எடுத்திருக்கிறார் என்றொ"
"ஒம் அண்ணே எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றது.இவனின் செயல்கள் எல்லாம் அப்படிதான் இருக்கிறது"
" உமக்கு ஞாபகம் இருக்கே 30வருசத்திற்கு முதல் என்ட வீட்டு நாய்குட்டி உம்மட காலை நக்க வர அலறிஅடிச்சு கொண்டு அம்மாவிடம் ஒடிப்போனது, இப்ப என்னடா எனற நாய்குட்டிக்கு முத்தமிடுகின்றீர்"
"அப்ப நான் சின்ன பிள்ளை மற்றது அது தெருநாய்"
"அடுத்த பிறவி அவுஸ்ரேலியாவில் நாயாக உம்மட வீட்டில பிறக்க வேணும் ."சுரேஸ் சொன்னதை கேட்ட நாய் ஒரு பார்வை பார்த்து குரைத்தது.அந்த குரைப்பும் பார்வையும் டேய் உனக்கு என்ன விசரா என்ற மாதிரி இருந்தது.
நீங்களும் உங்கன்ட நாய்களை கூட்டிகொண்டு வந்திருந்தால் அதுகளும் ஒடிப்பிடிச்சு ,ஒளிச்சுப்பிடிச்சு விளையாடியிருக்குங்கள்.தங்களுடைய இச்சைகளையும் தீர்த்திருக்குங்கள் என்றான் சுரேஸ்.
"அதுகளுக்கு டிசெஸ் பண்ணியாச்சு"அண்ணே
"அட கடவுளே இவ்வளவத்தையும் கொடுத்து அதுகளின்ட பொறுத்த இடத்தில கைவச்சிட்டிங்களே"
இப்படி சுரேஸ் சொன்னதை கேட்ட செல்லம் துள்ளி குதித்து ஒடி வந்து சுரேஸின் காலில் விழுந்து "ஊ ஊ ஊ ,வவ்,வவ்"
ஆயிரம் இருந்தும்,வசதிகள் இருந்தும் no அது 
செல்லத்தை குனிந்து முதுகில் தட்ட அது மீண்டும் "ஊ.....ஊ......வவ்.........வவ் ........ஊ....ஊ"
ஊரில் தெருநாய்க்கு இருக்கிற அந்த சுதந்திரம் இங்க இல்லை நீ அவுஸில் நாயாக பிறக்க போறாயா ,ஊரில தெருநாயாக பிறக்கபோறீயா என்று கேட்பது போலிருந்தது.தொடர்ந்து அங்கிருந்தால் நாய் பாஷை யில் பாண்டித்தியம் கிடைத்துவிடும் என பயந்து வீட்டுக்கு புறப்பட தயாரானான்.
அவன் போக வெளிக்கிட மீண்டும் செல்லம் "வவ் ,வவ் ஊஊ"
"யாராவது வந்திட்டு போக வெளிக்கிட்டா எங்கன்ட செல்லத்திற்க்கு விருப்பமில்லை, அங்கிள் போயிட்டு பிறகு வருவார் அங்கிளுக்கு பாய் சொல்லு"

அட கோதாரி ,அவுஸ்க்கு வந்து நாய்க்கு அங்கிள் ஆனதுதான் மிச்சம். நல்ல வேலை மனிசி பிள்ளைகள் வரவில்லை வந்திருந்தால் ......"வவ் ஊ" :D
என நினைத்தபடி காரை ஸ்டார்ட் பண்ணினான்.....