Saturday, February 7, 2015

சமூக சேவை


அழைப்புமணி யின் சத்தம் கேட்டு போய் கதவை திறந்தேன் கனகர் வாசலில் நின்றார்.வெளிநாட்டு சம்பிராதயம் பார்க்காமல் பழகிற மனுசன் என்றால் எங்கன்ட கனகர்தான்.தொலைபேசியில் அழைத்து உங்கன்ட வீட்டை வரப்போகிறேன் என்று முன் அனுமதி கேட்டு கனகர் வீட்டை போற பழக்கம் எனக்கும் இல்லை அதேபோல கனகர் என்ட வீட்டை வாறதற்க்கும் முன்னனுமதி கேட்காமல் வருவார்.கனகர் ஒரு சமுகசேவகர் என்று சொல்லலாம் .இளைப்பாறிவிட்டார் அதனால் முழுநேர சமுக சேவையில் ஈடுபடுகிறார்.நானும் பகுதி நேரமாக அவருடன் சமுக சேவையில ஈடு படுவதுண்டு.சமுக சேவை என்றால் நீங்கள் பெரிதாக ஒன்றும் நினைக்க கூடாது.என்ட ஆககூடிய சமுக சேவை எங்கன்ட சனத்திற்க்கு ,பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு டிக்கட் விற்கிறதுதான்.
அதுவும் ஒரு சமூக சேவை என நானே தீர்மானிச்சு தொடர்ந்து செய்துகொண்டுவாறன்.ஏன் சமூக சேவை என்றால் கனகரைப் போன்ற இளைப்பாறிய ஆட்கள்,என்னைபோன்ற இளைப்பாற இருக்கின்ற ஆட்களுக்கு தங்களது பொழுதை எப்படி கழிக்கிறது என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாக இருக்கும், இருக்கின்றது என்றுபோட்டுத்தான் நானும் கனகரும் இந்த சமுக சேவையில் இறங்கினோம் .வெளிநாடுகளில் பப்,டப்,கிளப்,மற்றும் விளையாட்டு மைதானங்கள்,தீம் பார்க்,சினிமா என பல களியாட்ட வசதிகள் இருந்தாலும் எங்கன்ட சனத்தோட பொழுதை கழித்தால்தான் ஒரு பூரணதிருப்தி கிடைக்கும் எங்களுக்கு, என்ற ஒரு நல்ல நோக்குடன் இந்த சமுக சேவையில நாங்கள் இறங்கினோம்.
ஏற்கனவே பலர் இந்த சமூகசேவையை செய்யினம் அவையளுக்கு ஒரு ஆதரவு கொடுக்க நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம்.
இப்படிதான் ஒருநாள் நானும் கனகரும் 'பப்' போயிருந்து பியர் அடிக்க ஒரு வெள்ளை "ஹாய் மயிட்" என்றான் கனகரும் பதிலுக்கு ஹாய் என்றுபோட்டு பியரை உறிஞ்ச பக்கத்தில நின்ற வெள்ளை தன்னுடைய நண்பனுடன் இரண்டு ஆங்கில தூஷண வார்த்தை பாவிக்க கனகர் கடுப்பாயிற்றார்.உதுக்குத்தான் நான் உவங்களின்ட இடத்துக்கு வாறதில்லை என கதிரையை தள்ளிபோட்டு வெளிவந்திட்டார். நானும் அவருக்கு பின்னால வந்திட்டன். அதற்கு பிறகு அவர் "பப் பக்கம் தலை வைச்சு படுக்கிறதில்லை"
இன்னோரு நாள் டப்புக்கு போய் குதிரையில காசை கட்டினோம் நாங்கள் கட்டின குதிரை கடைசியாக வந்தது.தொடர்ந்து இரண்டு நாள் போய் பணத்தை இழந்த பின்பு தொடர்ந்து போவதை நிறுத்திக்கொண்டோம்.
கொல்வ் கிளப்,போலிங்க் கிளப்,கிரிக்கட் கிளப் என சகல கிளப்பிலும் அங்கத்துவராக சேர்ந்து கொண்டோம். இப்படித்தான் ஒரு கிரிக்கட் கிளப்பில சினேக பூர்வமான ஒரு மட்ச் விளையாட வெளிக்கிட்டோம் ,கனகர் மற்றவன்கள் விளையாடும் பொழுது மைதானத்திற்க்கு வெளியே நின்று கொண்டு கொமான்ட் கொடுத்துக்கொண்டிருப்பார் .லெக்கில் போடு,ஒவில் போடு என பந்துவீச்சாளருக்கும்.ரைட்டில் அடி லெவ்டில் அடி என துடுப்பாட்ட காரருக்கும் கட்டளை போடுவார்,ஆனால் அது அவர்களுக்கு புரியாது ஆனால் மைதனத்திற்க்கு வெளியே கனகருக்கு பக்கத்தில் நிற்பவர்களுக்கு மட்டும் விளங்கும்,அத்துடன் கனகர் சகல மட்ச்களையும் பார்த்து கிரிக்கட்டில் கலாநிதிபட்டத்திற்க்கு தகுதி உடையவர் என்று சொன்னால் மிகையாகாது. தொலக்காட்சியில் ஒரு ஆட்டத்தை பார்க்கும் பொழுது பிரபல அவுஸ்ரேலியா ஆட்டக்காரன் விளையாட மட்டையை தூக்கினான் பந்து நேரடியாக விக்கட்டில் பட்டு அவுட்டாக கனகர் உணர்ச்சி வசப்பட்டு ,ஆங்கிலத்தில் திட்ட தொட்டங்கிவிட்டார் அவன் ஓவ்வில் போடுறான் உவன் விசரன் மட்டையை தூக்கி விலாசமல் சும்மா அவுட்டாகிவிட்டான் இடியட் ..இப்படி பல விமர்சனங்களை கனகர் வைப்பதை பார்த்து நானும் வேறு சில வயசு போன வெள்ளையும் கனகர் விசயகாரன் என நினைத்து அவரை எமது டீம்மில் சகலகலா வல்லவன் என நியமித்தோம் .அதாவது துடுப்பாட்டம்,பந்துவீச்சு இரண்டும் தெரிந்த வீரன் என முத்திரை குத்தினோம்.
அடுத்து விளையாடிய நாலு மட்சிலும் கனகர் ஒரு ஒட்டமோ,விக்கட்டோ எடுக்கவில்ல.இந்த அவமானத்தால் அவர் தொடர்ந்து தான் டீம்மில் இருக்கவிரும்பவில்லை என விலகி கொண்டார்.அவருக்கு பக்க பலமாக நானும் விலகி கொண்டேன்.
சின்ன வயசிலயிருந்து விளையாடிய வெள்ளைகளுடன் எங்களுக்கு இடு கொடுக்க முடியாத நிலையில் தொடர்ந்து இந்த கிளப்புக்களுக்கு போவதை தவிர்த்து கொண்டோம்.இப்படியான கசப்பான அனுபவங்களினால் எங்கன்ட சனத்திட்ட எங்கன்ட திறமையை காட்டி பொழுதை களித்து கொள்ள த்தான் நாங்கள் இந்த சமுக சேவையில் கடந்த பத்து வருடமாக ஈடுபடுகிறோம். ஆரம்ப காலங்களில் எங்கன்ட சமுக சேவைகள் மக்களிடையே எடுபடவில்லை ,ஆனால் கடந்த ஐந்து வருடமாக சனத்திடம் நல்ல வரவேற்பு கிடைக்குது. சமுக சேவை விடயமாகத்தான் இப்ப கனகர் என்ட வீட்டை வந்தவர் .
"வாறசனிக்கிழமை ...முழக்கம்,அதற்கு அடுத்த சனி .....இன்னிசை,ஞாயிற்றுக்கிழமை....பன் விழா.,நடக்க இருக்குது இந்தா டிக்கட்" என மூன்று டிக்கட்டை கிழித்து தந்தார்.
"இப்ப எங்கன்ட் சனம் ஞாயிற்றுக்கிழமையிலும் புரோகிறம்களை வைக்குது ,அடுத்த நாள் வேலைக்கு போகவேணும் அண்ணே"
"அது பத்து மணிக்கு முடிஞ்சிடும் நீ டிக்கட்டை பிடி"
"உங்களுக்கு என்ன ரிட்டயர் பண்ணிட்டியள் சொல்லிவியள்"
"நீ மட்டும் என்ன இப்படியே மார்க்கண்டேயர் மாதிரி இருக்கப்போறீயே "
"சரி அண்ணே,உங்களோட கதைச்சு காலத்தை தள்ளஏலாது இப்ப எவ்வளவு காசு நான் தரவேணும்"
"நான் உன்னட போனமாதம் எடுத்த டிக்கட்டுக்கு காசு தரவில்லை அதை இதில கழிச்சு விடு"
இப்படித்தான் எங்கன்ட டிக்கட் வியாபாரம் பண்டமாற்றிலயே போய்விடும்.
இலவச நிகழ்ச்சிகளையும் நாங்கள் விட்டு வைப்பதில்லை.கனகருக்கு இரவு நேரங்களில் கார் ஒடுவதற்கு கண் தெரியுதில்லை என்று சகல நிகழ்சிகளுக்கும் என்னோடுதான் வாறவர்.பக்கதிலிருந்து சிட்னி விடுப்புக்கள்,தன்னுடைய வீட்டு விடுப்புக்களை சொல்லி கொண்டு வருவார்.சில நேரத்தில மனுசன் அரைவாசி கதையை சொல்லி போட்டு கொரட்டை விட்டு நித்திரை கொள்வார்.அண்ணே என்ன நித்திரையோ என்று கேட்டா சீ ,சீ சும்மா கண் அயர்ந்து போய்யிட்டேன் என்பார்.
கனகரை கோயிலில்தான் முதல்முதல் சந்திச்சனான்.கோவில் வாசலில் நின்ற கனகர் "தம்பி எந்தப்பக்கம் போறீர்"
"பென்டில் கில் போரன்"
"என்னை ஒருக்கா அங்க இறக்கி விடுவீரோ ,கடையில இடியப்பம் வாங்க வேணும்"
"சரி வாங்கோ"
"தாங்க்ஸ் டா தம்பி"
காரில வந்து ஏறினவுடன்.முருகா உனக்குதான் நன்றி சொல்ல வேணும் இந்த வெய்யிலில் எப்படி போறது என்று நினைச்சு கொண்டு நிற்கும்பொழுது நீ தான் இந்த தம்பியை எனக்கு காட்டினனீ....என்ட பெருமான் முருகன் என்னை கைவிடமாட்டான்....இப்படி முருகனுக்கு நன்றிகடனை சொல்லிபோட்டு தனது பேச்சை தொடங்கினார்.
"தம்பி யாழ்ப்பாணம் தானே"
"ஓம் எப்படி கண்டுபிடிச்சியள்"
"உம்மட கதையில தெரியுதுதானே,யாழ்ப்பாணத்தில எவ்வடம்"
"மானிப்பாய்"
"மானிப்பாயோ! மருதடிக்கு பக்கத்திலயோ "
"இல்லை பள்ளிக்கூடத்திற்கு முன்னாலா, நீங்கள் மானிப்பாயோ"
"சீ சீ நான் கோண்டாவில் ,என்ட ஒன்றைவிட்ட அக்கா அங்கதான் கலியாணம் கட்டினவ,ஒவசியர் சிவப்பிரகாசத்தின் மகனைத்தான் கட்டினவ ஆட்களை தெரியுமோ?"
"ஓமோம் தெரியும் அவையள் என்ட சொந்தகாரர் "
"பிறகென்ன நீர் என்ட சொந்தகாரார் நல்லதாய் போச்சு"
இப்படிதான் எங்களது அறிமுகம் 10 வருசத்திற்கு முதல் தொடங்கினது இப்பவும் தொடருது.நாட்டில எப்ப பிரச்சனை முடியுதோ அப்ப திரும்பி நாட்டுக்கு போய்விடுவேன் உவங்கன்ட நாட்டில ஒரு நாளும் இருக்க மாட்டேன் ,அங்க போய் எங்கன்ட சனத்திற்கு சமூகசேவை செய்ய வேணும் என்று சொன்ன கனகர் இன்னும் நாட்டுக்கு போகவில்லை.சிட்னி தமிழருக்கு சமூகசேவை செய்யிறார்.
கோவில் கொமிட்டியிலும் அங்கத்துவராக இருக்கின்றார்.கனகர் மகனுடன் இருந்தாலும் எதாவது உதவிகள் வேணுமென்றால் என்னிடம்தான் கேட்பார்.
சைவமும் தமிழும் எங்களுடைய இரு கண்கள் என்றும் அதை புலம் பெயர்ந்த பிரதேசத்திலும் எமது சந்ததிக்கு புகட்ட வேணும் அதற்காகத்தான் அவர் கோவில் கொமிட்டியிம் அங்கத்துவராகவும்,தமிழ்பாடசாலையில் ஆசிரியர் தொழில் ஈடுபடுவதாக சொல்லிக் கொள்வார்.
தம்பி நீ உன்ட பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு அனுப்பும் .நாங்களே தமிழை படிக்காவிடில் வெள்ளையோ வந்து தமிழ்படிக்க போகுது என்று ஒரு நாள் ஆதங்கப்பட்டார்.
" என்னுடைய இரண்டு மகள்மாரும் உயர்தரத்தில் தமிழ் எடுத்து சித்தியடைந்திட்டினம் ,உங்கன்ட பேரப்பிள்ளைகள் எப்படி தமிழ் கதைப்பினமே?"
".சும்மாபோடம்பி அவள் தாய்காரி என்ட மருமகள் வீட்டிலயே தமிழில் பேசமாட்டாள் பிறகு எப்படி பிள்ளைகள் தமிழில் கதைக்கபோகுது?தமிழில் பேசினால் ஆங்கில உச்சரிப்பு வடிவாக வராமாட்டுதாம் என்று போட்டு தான் குடும்பமே ஆங்கிலத்தில பேசுதுகள்,அதுசரி உன்ட பிள்ளைகள் இங்கயே பிறந்தவை "
"ஒமோம் இங்கதான் பிறந்தவை,அவர்கள் தமிழ்பாடாசலைக்கு மட்டுமல்ல ,அதுகள் சைவபாடசாலைக்கும் சின்னனிலிருந்து போனதுகள்,தேவாரமும் நல்லாய் பாடுவினம் ,"
"என்ட பேரப்பிள்ளைகளை மருமகள்காரி சாய் பஜனுக்கு கூட்டிக்கொண்டு போறவ ,அதுகள் தெலுங்கு பஜனையும் ,ஹிந்தி பஜனையும் நல்லாய் பாடுங்கள்,அவையளுடன் சேர்ந்து மகனும் ,மருமகளும் பஜனை பாடுவினம்"
"அப்ப குடும்பத்திற்கே ஹிந்தி தெரியும் என்று சொல்லுங்கோ,"
"சும்மா போடாம்பி அதுகள் இங்கிலிஸில வசனத்தை எழுதிவைச்சிட்டு அங்க போய் இருந்து பாடுதுகள்"
"என்ன அண்ணே நீங்கள் தமிழும் சைவமும் நம் இருகண்கள் என்று சமுகசேவை செய்யிறீங்கள் ஆனால் உங்கன்ட வாரிசுகள் தெலுங்கும் சாய்ராமும் நம்மிரு கண்கள் என்று திரியினம்,,,அண்ணே இந்த முறை உயர்தர பரீட்சைக்கு தமிழை ஒரு பாடமாக எடுத்த ஆறு பிள்ளைகள் மருத்துவ பீடத்திற்கு தெரிவிசெய்யப்பட்டிருக்கினம்....என்ற செய்தியை.உங்கன்ட மருமகளிட்டையும் மகனிட்டையும் சொல்லுங்கோ...,"