Thursday, December 22, 2016

இலக்கியம்mm

வேலையால் வந்த களைப்பு தீர ,தேனீர் குடிப்பதற்காக கேத்தலின் பட்டனை அழுத்தியவன் ,கப்பை கழுவி சமையலறை மேசையில் வைத்து விட்டு தேயிலை பாக்கை தேடினான்.வழமையாக பாவிக்கும் லிப்டன் தீர்ந்து போயிருந்தது.டில்மா தேயிலை பெட்டி அவனைபார்த்து சிரித்து"ஆபத்துக்கு பாவமில்லை என்னை குடித்து பார்" என்பது போல் தோன்றியது.
எத்தனை தரம் சொன்னாலும், உவள் சிங்களவனுக்கு பிழைப்பு காட்டுறது என்றே அடம் பிடிக்கிறாள் என புறுபுறுத்தபடியே    அக்கம் பக்கம் பாரத்தவன் ,தன்னை ஒருத்தரும் கவனிக்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு டில்மா தேயிலை பக்கற்றை கோப்பையினுள் போட்டு சுடுதண்ணியை ஊற்றி ஊற வைத்து பிளிந்தெடுத்த தேயிலை பக்கற்றை குப்பை தொட்டியில் எறிந்தவன், பாலை கலந்து ருசிக்கத் தொடங்கினான்,மனம் குணம் எல்லாம் சரியாக இருக்கவே ,அலுமாரியிலிருந்த பிஸ்கட்  டப்பாவையும் ,தேனீர் கோப்பையையும் எடுத்து கொண்டு கணனிக்கு முன்னால் போய் குந்தினான்.
"வேலயால வந்து உவ்வளவு நேரமும் ஊதுலய குந்திகொண்டிருக்கிறீயள்"
"அடி ஆத்தே நான் சும்மா விடுப்பு பார்த்து கொண்டிருக்கிறன் என்று நினைச்சிறோ? ஒன் கொல் அப்பா,அமெரிக்கா,கனடா ,லண்டன் லொக்கல் எல்லாம் நான் தான் கான்டில் பண்ண வேணும்"
"எப்ப தொடக்கம் தமிழ் பிஸ்னஸ் லன்குஜ் ஆனது,எனக்கு தெரியும் நீங்கள் என்ன எழுதிகொண்டிருக்கிறீயள் என்று,ஒரு சதத்திற்கு பிரயோசனம் இல்லாத வேலை பார்க்கிறீயள்"
"அப்படி சொல்லாதையும் ஒரு நாளைக்கு  உம்மை 'எழுத்தாளனின் மனைவியோ'? என்று அடையாளப்படுத்தி  கேட்பினம்."
" ....அது வேற நினைப்பு......சும்மா விசர் கதையைவிட்டிட்டு
எனக்கு ஒரு தேத்தண்ணி போட்டுதாங்கோ"
"போட்டு தரலாம் ஆனால் லிப்டன் இல்லை,டில்மா தான் இருக்கு ,டில்மா டி குடிக்கவும் மாட்டேன் போடவும் மாட்டேன்"என்று கூறிய படியே கணனியில் மூழ்கிபோனான் சுரேஸ்.
இறுக்கி கதவை சாத்திவிட்டு  சென்ற சுதா சிறிது நேரம் கழித்து இரு தேனீர் கோப்பைகளுடனும் மைக்ரோவேவில் சூடாக்கின சமோசவுடன் உள்ளே வந்தாள்.
தேனீரையும் சமோசாவையும் சுவைத்தபடியே அன்று அவன் எழுதிய கிறுக்கலை வாசிக்கும்படி அவளிடம் கேட்டுகொண்டான்.அவளும் வாசித்து சுமாராக இருக்கு என சொல்வே இணையத்தில் பதிவிட்ட பின்,. எத்தனை லைக்,எத்தனை கொமண்ட்ஸ் வருகின்றது என்றஎதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பான்.
. "கிறுக்கலை இணைச்சாச்சோ ?இனி என்ன உதுல இருந்து அசையமாட்டியள்,எத்தனை லைக்,கொமண்ட்ஸ் என்று பார்த்துகொண்டு இருங்கோ"
"ஒரு எழுத்தாளன் என்றால் அப்படித்தான்"
" எப்பகல்லெறி நடக்குதோ"
"அதுதான் நான் என்னை அடையாளப்படுத்தாமல் கிறுக்கிறேன்"
வாசகர்கள் லைக்கை போட்டு கருத்துக்களை எழுதியவுடன் அவனை அறியமாலயே அவனுக்கு தான் ஒரு படைப்பாளி என்ற எண்ணம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கிவிட்டது
இணையத்தில் எழுதிய கிறுக்களுக்கு ஆயிரம்  வாசகர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் தன்னை தானே இலக்கியவாதி என்று அடையாளப்படுத்தி. கொண்டு புத்தக வெளியீடுகள்,இலக்கிய சந்திப்புகள் போன்றவற்றுக்கு செல்ல தொடங்கினான்.
புத்தக வெளியீடுகளுக்கு செல்வது அவனுக்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை பின்வரிசையில் போயிருந்து கைதட்டி போட்டு சிற்றுண்டிகளை சுவைத்து வீடு வரும் பொழுது ஒரு  புத்தகத்தை  வாங்கி வந்து நானும் ஒரு எழுத்தாளன் ,இலக்கியவாதி என வீட்டிலுள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் பெருமையடிப்பது அவனது வழக்கம்.
கம்பரமாயணம்,ஐம்பெரும் காப்பியங்கள் இவைகள்பற்றி தெரிந்திருந்திருப்பவன் இலக்கியவாதி என அவன் எண்ணியிருந்தான்.இவற்றில் ஒன்றைப்பற்றியும் அறியாதவன் எப்படி ஒரு இலக்கிய சந்திப்புக்கு போவது என்ற மனக்குழப்பத்திலிருந்தவனுக்கு எட்டாம் வகுப்பில் படித்த இராமயணக்கதை ஞாபத்திற்கு வர கூடவே இந்திய தொலைக்காட்சிகள் ராமாயண அறிவை அள்ளிவழங்க ,இது போதுமே ஒரு இலக்கிய கூட்டத்தில் பங்கு பற்ற என்ற துணிவுடன் இலக்கிய கூட்டங்களுக்கும்  செல்ல தொடங்கினான்.இடக்கு முடக்காக யாரவது இலக்கிய விவாத்திற்கு வந்தால் "நான் ஒரு சிவபக்தன் ,ராமரைப்பற்றி விவாதிக்க விரும்பவில்லை "என்று சொல்லி சமாளிக்கலாம் என தன்னைத்தானே சாமாதானப்படுத்திக்கொள்வான்.
வார இறுதி சிட்னியில் என்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்று முகப்புத்தகத்தையும்,அவுஸ்ரேலியா இணைய பத்திரிகைகளையும் தட்டி பார்த்துகொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது "இலக்கிய சந்திப்பும் கருத்து பகிர்வும்" என்ற விளம்பரம், விளம்பரத்தை பார்த்தவன் வார இறுதியன்று போக தீர்மானித்துக்கொண்டான். இரண்டு மூன்று அவனைப்போன்ற இளசுகளும் ஐந்தாறு முதியோரும் கலந்து கொள்ளவந்திருந்தனர்.
ஒவ்வொருத்தரும் தங்களது பெயர்களையும் படைப்புக்களையும் சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டார்கள்.அவனும் தன்னை இணையஎழுத்தாளன் ,வலைப்பூ கிறுக்கன் என அறிமுகப்படுத்தி கொண்டான்.
செங்கைஆழியன்,சுஜாதா போன்ற ஒரு சில பிரபல எழுத்தாளர்களை மட்டும் அறிந்திருந்த அவனுக்கு ஒரு இளம்படைப்பாளி ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களை கூறி கருத்துக்களை பகிர்ந்ததை கேட்டு சிறிது நேரம் தடுமாறிபோய்விட்டான்.சுதாகரித்து நிமிர்ந்த பொழுது அவனுக்கு பரிச்சமான டக்கிளஸ் என்ற பெயரை அந்த இளம் எழுத்தாளர் சொல்ல மீண்டும்தடுமாறிபோனான்.இலக்கியகூட்டத்தினுள் என்ன நாசமறுப்புக்கு இந்த பெடியன் அரசியல்வாதிகளை இழுக்கிறார் என்று மனதினுள் எண்ணியபடி தொடர்ந்து டக்கிளஸின் அரசியல் கதைத்தால் வெளிநடப்பு செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற தீர்மானத்துடன் அமர்ந்திருந்தான்.
டக்கிளஸ் ஒரு ஏதிஸ்ட் ரைட்டர் அவரின் கதைகளை வாசிக்கும் பொழுது மிகவும் சுவார்சியமாக இருக்கும் என்று அந்த இளைஞர் சொன்ன பின்புதான் ,ஓஓ உவர் எங்கன்ட டக்கிளஸ் இல்லை வெள்ளைகார எழுத்தாள டக்கிளஸ் என்று புரிந்துகொண்டான். "இலக்கியத்தின் லெபனான்" என்று பரிஸ் தலைநகரத்தை சொல்லுவார்கள் அவ்வளவுக்கு வன்முறைகள் இலக்கியகூட்டங்களில் நடக்கும் என்று ஒரு அன்பர் கருத்து பரிமாறினார்.உடனே அவன் அங்கிருந்த படைப்பாளிகளை ஒரு நோட்டம் விட்டான் சகலரும் புத்தபெருமானின் சாந்தமே சொருபமாக காட்சியளித்தனர்.நிச்சயம் இவர்கள் வன்முறையில் இறங்கமாட்டார்கள் என சமாதானம் அடைந்தான்.இருந்தாலும் சிட்னி முருகனை நினைத்து பையா நான் உன் அப்பனின் தீவிர பக்தன்  நினைவில் வைத்துகொள் என்று சிட்னிமுருகனுக்கு ஒரு சின்ன ரிக்குயஸ்ட்டை வைத்து விட்டு  தொடர்ந்து, கருத்து பரிமாறலில் ஈடுபட்டோரின் கருத்தை உள்வாங்கிகொண்டிருந்தான்.
மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் .மண்டபத்தில் இருப்பதற்கு இருக்கைகள் காணமல் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். மேடையில் நடுநாயகமாக அவன் அமர்ந்திருந்தான்.அவனை புகழ்ந்து பேச ஆறு பேர் அவனின் பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.
மேடையில் பாரதியின் கவிவரிகளை பேசி அவனைப்பற்றி புகழ்ந்தனர் சிலர்.வேறு சிலர் கம்பனின் வரிகளை சொல்லி ஒப்பிட்டனர் .கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து என சகல படைப்பாளிகளின் பெயர்களும் மேடையில் ஒலித்து கொண்டிருந்தன அவனுக்கோ புல்லரிப்பு தாங்கமுடியவில்லை. நன்றியுரை முடிவடைய மேடையை விட்டு இறங்கி நடக்கின்றான்.மைதானம் நிறைய வாசகர்கள் அவன் எழுதிய நாவல்களுடன் காத்திருந்தனர் ,கையொப்பத்தையிட்டபடி சென்றவனுக்கு சில பெண்கள் தங்களது கன்னத்தை காட்டினர் முத்தமிடுவதா ஒப்பமிடுவாத என திகைத்து ஒப்பமிட்டு சென்றான்.அடுத்த பெண் ....... ரிங்க் ரிங்க் அலாரம் அலற திடுக்கிட்டு எழுந்தான் .....நாசமபோன கனவுக்கு ஒரு எல்லையில்லை ......கண்ணா இலக்கியம் என்பது வேறு விளையாட்டு என்பது  வேறு..... வேலைக்கு செல்லும் பொழுது சுரேஸ் ,கனவுக்கும் கற்பனைக்கும் ஆண்டவன் ஒரு எல்லை வைக்காதது நல்லதுதான் என நினைத்தபடியே புன்முறுவலுடன் காரை செலுத்தினான்...