Tuesday, July 1, 2014

எல்லாம் 'இ' மயம்....

தொலைபேசி தொல்லை கொடுக்க எடுத்து "கலோ  இங்க  சுரேஸ்  அங்க  யார் ?"
"இங்க  லாதா  உங்க  திருமதி சுதா சுரேஸ் இருக்கிறாவோ"என்றாள்  நக்கலா.
சுரேஸும்  பதில்  நக்கலாக
"திருமதி சுதா இருக்கவில்லை  படுத்திருக்கின்றா"
"சும்மா பகிடியை  விட்டிட்டு டெலிபோனை அவளிட்ட கொடுங்கோ "எதோ அவசரமாக  பேசபோகினமாக்கும் என்று நினைத்து  டெல்போனை சுதாவிடம் கொடுத்தான்.சுதாவும் ,லதாவும் பாடசாலை காலத்திலிருந்தே நண்பிகள்.புலம்பெயர்ந்த  பின்பும்  அவர்களின் நட்பு ஒகோ என கொடி கட்டி பறக்கின்றது.
புலம்பெயர்ந்த  காலத்தில் இவர்களின் உரையாடல் ஆறுமாதத்திற்கு ஒருக்கா அல்லது ஒரு வருடத்திற்கு ஒருக்கா என்றுதான் இருந்தது. காரணம் தொலைபேசி கட்டணம்  அந்த  காலகட்டத்தில்  அதிகமாக இருந்தமையாகும். இன்று இவர்களின் தொடர்பு குறைந்தது கிழமைக்கு இரண்டு என சொல்லலாம்.முகப்புத்தகம்,மின்னஞ்ஞல்,தொலைபேசி,ஸ்கைப்,வேஸ்டைம் போன்றவற்றின் மூலம் இவர்கள் நட்பை வளர்த்துகொண்டிருக்கின்றனர்.
இவர்கள் அப்படி என்னதான் உரையாடி,எழுதி நட்பை வளர்க்கிறார்கள் என நீங்கள் நினைப்பது போலத்தான் சுரேஸும் நினைத்தான்,ஆனால் இப்ப புரிந்துவிட்டது. இப்ப லதா ஊரில நிற்கின்றாள் அங்கிருந்துதான் இந்த தொலைபேசி அழைப்பு.
"அடியே இன்னும் நித்திரையா,உங்க எத்தனை மணி இப்ப?"
"இந்த மனுசன் சும்மா சொல்லுது நான் எழும்பி சமைச்சுபோட்டு கண்ணயர்ந்தனான், அதுசரி ஊர் எப்படியிருக்கு "
"எல்லாம் நல்லாயிருக்கு, வேஸ்புக்கில் எங்கன்ட படங்கள் போட்டிருக்கிறேன் போய் பாரடி ,உன்ட குரலை கேட்டு கனகாலமாச்சு அதுதான் எடுத்தனான்....பாய்...சீயு "

ஒரு கிழமைக்கு முதல் தான் குடும்பமாக கனடாவிலிருந்து ஊருக்கு போனவர்கள் .போகமுதல் இருவரும் ஸ்கைப்பில் அரைமணித்தியாலத்திற்கு மேல் உரையாடியிருப்பார்கள்.ஊருக்கு கொண்டு செல்ல வாங்கிய பொருட்கள் கூட நண்பிக்கு ஸ்கைப் ஊடாக காட்டப்பட்டது. லதாவுடன் ஸ்கைப்பில் கதைத்தபின்பு ஒரு பெருமூச்சு விட்ட சுதா ,இவள் லதா அடுத்துஅடுத்து ஊருக்கு போறாள் ,நாங்கள் தான் இன்னும் ஊருக்கு போகாமல் இருக்கிறோம் என்றாள்.அவளை சமாதானப்படுத்துவதற்காக உமக்குத்தானே ஊரில ஒருத்தருமில்லை பிறகு ஏன் ஊருக்கு போவான் என்றான்.
திரும்பி முறைத்து பார்த்துவிட்டு ஒருத்தரும் இல்லையோ என்ட ஒன்றுவிட்ட சித்தி அங்கதான் இருக்கிறா.....அதுமட்டுமல்ல எங்கன்ட ஊர் கோவில் அப்படியே இருக்கு ,அந்த அம்மாளாச்சியின் கருணையால் தான் நாங்கள் இங்க வந்தனாங்கள் இல்லாவிட்டால் ஊரில் இருந்து புலி ஆர்மி சண்டையில் செத்திருப்போம்.புலிக்கும் ஆர்மிக்கும் வேறவேலையில்லாமல் சண்டைபிடிச்சவங்கள் என மனதில் எண்ணியபடியே சரியப்பா இன்னும் இரண்டு வருசாத்தால போவம் என்றான். உப்படிதான் இப்ப நாலு வருசமா சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்.என சொல்லியபடியே பேஸ்புக்கில நண்பியின் பக்கதிற்கு சென்றுவிட்டாள்.
அவர்கள் பயணம் செய்த அன்று சுதாவின் ஐ.போன் பலதடவை சிணுங்கியது.முதல் சிணுங்களுக்கு ஐ போனை எடுத்து இலையான் கலைப்பது போல ஒரு தட்டு தட்டினாள் இரண்டு படங்கள் வந்திருந்தன.ஒன்று லதா காரில் ஏறும் பொழுது எடுத்த படம்.மற்றது அவர்கள் குடும்பமாக விமானநிலயத்திற்கு காரில் செல்லும் படம்.மீண்டும் அரைமணித்தியாலத்தின் பின்பு அதே சிணுங்கள்,அதே இலையான் கலைப்பு இந்த தடவை விமானநிலையத்தின் கருமப்பீடத்தில் நின்று கடவுச்சீட்டை கொடுக்கும் பொழுது எடுத்த படமும்,விமானத்தின் இருக்கையில் எல்லோரும் இருந்தபடி விதம்விதமான நிலைகளில் அனுப்பியிருந்தார்கள். இரண்டுமூன்று மணித்தியாலமாக அலைபேசி சிணுங்கவில்லை.
" லதா வேற படம் ஒன்றும் அனுப்பவில்லயோ"
"ரொம்ப முக்கியம் ...."என்றாள்
"இல்லை அனுப்பியிருந்தா விமானப்பணிப்பெண்களை சும்மா பார்ப்போம் என்றுதான்"
"உந்த வயசிலயும் அலையாதைங்கோ"
விமானத்தில் பாவிச்சா காசு கட்ட வேணும் அதுதான் அவள் எடுக்கவில்லை ப்போல கிடக்குது.என சுதா சொல்லிவிட்டு நித்திரைக்கு சென்றுவிட்டாள்.
லதாவின் முகபுத்தகத்தில் பல போட்டோக்கள் அப்லோட் பண்ணப்பட்டிருந்தது.
சுரேஸ் படங்களை பார்த்து கொண்டிருக்கும் பொழுது சுதாவும் வந்து பார்க்கத்தொடங்கினாள்.விமானத்தின் கழிவறை படத்தை தவிர எனைய படங்கள் யாவும் போடப்பட்டிருந்தது.அத்துடன் கட்டுநாயக்க விமானநிலையம் அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலின் படம் போன்றவையும் காட்சியளித்தது.
"உதுக்கு என்ன கொமனட் போடலாம்"
"ஒரு கொமனட்டும் போடதேவையில்லை,நீங்கள் உங்கன்ட வேலையை பாருங்கோ "
"அதுகள் கஸ்டப்பட்டு படமெடுத்து போட்டிருக்குதுகள் அட்லீஸ் ஒரு லைக் ஆவது போடுவோம்"
"சரி சரி போட்டு தொலையுங்கோ"
"உம்மட சினேகிதானே எதோ என்ட பிரன்ட் மாதிரி அலுத்துகொள்கிறீர்"உங்களோட நின்று சும்மா சண்டை பிடிச்சுகொண்டிருக்க ஏலாது .நீங்கள் பார்த்தி ட்டு விடுங்கோ , அவள் இப்ப கோவிலில் நிற்கிறாள் திருவிழா படங்கள் எடுத்து அனுப்புறன் என்றவள் .நான் குளிச்சு போட்டு வந்து ஆறுதலாக பார்க்கவேணும் என்று கூறியபடி குளிக்க சென்றாள். இரண்டுநாள் கொழும்பில் நின்றுவிட்டு ஊருக்கு சென்ற லதா அங்கிருந்து இப்பொழுது ஊர் திருவிழா நேர்முக வர்ணனை அதாவது ஸ்நப் சட் செய்கின்றாள்.தொழில்நுட்பம் அதிகமாக முன்னேறியபடியால் இருவரின் நட்பும் முன்னேறிக்கொண்டு செல்லுகின்றது.குளித்து பக்தி பரவசமாக நெற்றியில் விபூதி,குங்குமத்துடன் கணனியின் முன் அமர்ந்து நண்பி லதாவின் முகநூலுக்கு பின்னூட்டம் இட்டுகொண்டிருந்தாள்.அருகில் வைத்திருந்த ஐ.போன் சினுங்கியது.மெல்லிய தட்டு தட்டினாள் திரையில் அம்மன் காட்சியளித்தாள் என்ட அம்மாளாச்சி என உரத்த குரலில் கூறியபடியே இரு கைகூப்பி வணங்கினபடியே,இஞ்சாருங்கோப்பா எங்கன்ட அம்மாளாச்சியை ஒடிவந்து கும்பிடுங்கோ என சுரேசை அழைத்தாள்.பல கோணங்களில் அம்மனின் திருவுருவத்தை படமெடுத்து அனுப்பிகொண்டிருந்தாள் லதா. இவள் பதிலுக்கு நன்றி தெரிவித்தபடியே இருந்தாள் ,இறுதியாக செய்தி அனுப்பியிருந்தாள் நாளை தேர் திருவிழா காலை 10 மணிக்கு நடை பெறும் அந்த நிகழ்வின் படங்களையும் அனுப்புவதாக எழுதியிருந்தாள்.
அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஐ.போன் சிணுங்கியது.தேர்திருவிழா படங்களை பலவித கோணத்தில் அனுப்பிகொண்டிருந்தாள்.இவள் அம்மனின் தேர்திருவிழா பார்க்க போனவளா அல்லது நண்பிக்கு படம் அனுப்ப போனவளா என்ற சந்தேகம் சுரேஸுக்கு ஏற்பட்டது.அவனது சந்தேகத்திலும் நியாயம் இருந்தது.அம்மனின் நகையையும், சேலையை பற்றியும் இருவரும் அலசிஆராய்ந்து கொண்டிருந்தனர். அம்மனையும்,கோவிலையும் பற்றி விடுப்புக்கள் முடிந்த பின்பு. வந்திருந்த மக்கள் கூட்டத்தை படமெடுத்து அனுப்பி அவர்களை பற்றிய விவரணங்கள் தொடங்கின.
"இந்த படத்தில ஒரு மொட்டை தலை நிற்குது யாரென்று தெரியுதே"
"இல்லையடி , யாரது?"
"முந்தி எங்களுக்கு பின்னால திரிஞ்ச மதன்"
"அடியே அவனே நல்லாய் கிழன்டுபோனான்"
'உவையள் எதோ இளமையா இருக்கினம் அவன் கிழன்டுபோனானாம்' ,புலம்பெயர்ந்த பிரதேசத்தில் விற்பனையாகும் அலங்காரங்களை வாங்கி பூசிக்கொண்டு தாங்கள் இளமையாக இருக்கிறம் என்ற நினைப்பு ..... உவையளின்ட இளமையின் ரகசியம் எங்களுக்குத்தானே தெரியும் என எண்ணிகொண்டு தனது கணனியில் மூழ்கிபோனான் சுரேஸ்இறுதியாக இன்னும் இரு தினங்களின்பின்பு இந்தியா மற்றும் சிங்கப்பூர் சென்ற பின்பு கனடா செல்வதாகவும் என்ற செய்தியை போட்டிருந்தாள்.
நல்லூர்,கீரிமலை மற்றும் கதிர்காமம்,தென்னிலங்கையில் சென்று வந்த பிரசித்தி பெற்ற இடங்கள் யாவும் முகபுத்தகத்தில் தறவேற்றப்பட்டிருந்தது .
இந்தியாவிலிருந்தும் தான் சென்ற கோவில்களின் படங்ளை அனுப்பியிருந்தாள்.அடுத்து அடுத்து அனுப்பிய படங்களை பார்க்கும் பொழுது சுரேஸின் நெஞ்சு கொஞ்சம் படபடக்க தொடங்கிவிட்டது.இருந்தும் இயல்புநிலைக்கு வந்திட்டான்,இப்பொழுது இந்தியாவுக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படாது ஆகவே அதை வாங்க வேண்டிய சூழலில்லை என பெருமூச்சு விட்டவனுக்கு
"இஞ்சாருங்கோப்பா இந்த சீலையும்,சுரிதாரும் நல்லாயிருக்கு வாங்கப்போரன்"
"சரி போகும் பொழுது வாங்குவம்"
"போகும் பொழுதோ?,இன்டநெற்றில ஓடர் பண்ணினால் நாலு நாளில் வீட்டை சமான் வந்திடும் " .
வாங்குவதை தடுப்பதற்காக " நம்பி காசை கட்டலமோ தெரியாது,அது போக கலர்களை மாறி அனுப்பிபோடுவாங்கள்"
"இங்க இருந்து வேறு ஆட்களும் இன்டநெற்றில் சமான்கள் எடுத்திருக்கினம்,உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம்"
"சரி ஒடர்பண்ணி வாங்கும் " என பச்சை கொடி காட்டினான்.
சிங்கப்பூர் சென்ற லதா சிரங்கூன் நகர நகைக்கடைகளில் உள்ள நகைகளை படமெடுத்து அனுப்பியிருந்தாள்.இதையும் இன்றநெற் மூலம் எடுக்கப்போறாளோ என சுரேஸ் பயப்பட்டான்.ஆனால் நகைகளை தபால் மூலம் எடுப்பது நல்லதல்ல நகைகளை நாம் சிங்கபூர் செல்லும்பொழுது வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என லதா சொன்னது அவனுக்கு நிம்மதியை தந்தது.
.+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
30 வருடங்களுக்கு முதல் சுரேஸின் மூத்தசகோதரன் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைவாய்ப்பு கிடைத்து சென்ற பொழுது அவனது தாயார் ஏங்கிய ஏக்கம் நினைவில் வந்தது. சகோதரன் சென்று எட்டு நாட்களின்பின்பு 'சுகமாக வந்து சேர்ந்தேன்' என எழுதிய கடிதம் கிடைக்க பெற்ற பிறகுதான் தாயார் நிம்மதியாக உணவு உண்டாள்.
சுரேஸ் சிறுவனாக இருக்கும்பொழுது கடைக்கு சமான் வாங்க சென்றால் மனப்பாடம் செய்து கொண்டு செல்வான்,கடைக்கு சென்றவுடன் மறந்து விடுவான் ,அல்லது பிழையான பொருளை வாங்கிகொண்டு வந்திடுவான் .அதை மாற்றி எடுப்பதற்கோ அல்லது மறந்த பொருளை வாங்குவதற்கு மீண்டும் செல்வான்.ஆனால் இன்று .....எல்லாம் இ மயம்....