Wednesday, November 26, 2014

வித்தியா வீட்டுச் செல்லம்

மீண்டும் வசந்தகாலம் மரம் ,செடி, கொடி பூத்து குலுங்க தொடங்கிவிட்டன.வீட்டுத்தோட்டம் வைக்கும் சிட்னிவாழ் பெரும் குடிமக்கள் தங்களது முயற்சியில் தீயா வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்.அவர்கள் தீயா வேலை செய்வதைப் பார்த்து சுரேஸும் கொஞ்சம் மிளகாய் கன்றுகளை வாங்கி வந்து நடத்தொடங்கினான். சுரேஸின் நடமாட்டத்தை அறிந்த பின் வீட்டு நாய் குரைத்தது.உடனே நாயின் உரிமையாளர் ஆங்கிலத்தில் நாயைவிட அதிக சத்தத்தில் குரைக்க நாய் குரைப்பதை நிறுத்தியது. மீண்டும் குரைக்க தொடங்க ஆத்திரமடைந்த சுரேஸ் "ஏய் நாயே நானா, நீயா இந்த ஏரியாவுக்கு முதல் வந்தது"உரத்த குரலில் கத்தியவன் ஊரா இருந்திருந்தால் பொட்டுக்குள்ளால் பூர்ந்து வந்து உன்ட காலை அடிச்சு நொருக்கியிருப்பேன் என் மனதில் திட்டியபடியே மிளகாய் கன்றுகளை நடத்தொடங்கினான்.
நாய் மீண்டும் குரைக்காமையால் ,தனது திட்டலுக்கு பயந்து விட்டது, தமிழ் அறிந்த நாயாக்கும் என எண்ணி சிரித்துக்கொண்டான்.

"பிராவுனி" ஊரில அவன் வளர்த்த நாயின் பெயர் .பெயர் மட்டும் ஆங்கில பெயர் ஆனால் தெருநாய்.முற்சந்தியில் யாரோ மூன்று குட்டிகளை கொண்டுவந்து விட்டிட்டு போய்விட்டார்கள் .இவன் ஆசைப்பட்டு ஒன்றை தூக்கி வந்துவிட்டான்.நாய்குட்டியின் முனகலை கேட்ட தாயார் 
"தம்பி யாரப்பு உதத் தந்தது" 
"சந்தியில நிண்டது நான் பிடிச்சிட்டு வந்தனான் அம்மா"
"அது பெட்டை நாய்குட்டியாக இருக்கும் அப்பு ,பிறகு குட்டி போட்டுதென்றால் கரைச்சல் நீ அந்த இடத்திலயே விட்டப்பு"
"அம்மா ....பிளிஸ் அம்மா நான் வளர்க்க போறன்"
நாய்குட்டியை தூக்கி பார்த்த தந்தை, இது கடுவன் ஆசைபடுகிறான் வைச்சிருக்கட்டுமன் என அவனுக்கு ஆதரவு குரல் கொடுக்க தாயார் தலையை ஆட்டி அனுமதிகொடுத்தார். அம்மா அந்த நாயை வளர்ப்பத்தற்கு சில நிபந்தனைகளை விதித்தார்.நாயை வீடுக்குள் விடக்கூடாது,நாயை தொட்டு விளையாடிய பின்பு கை கழுவிய பின்புதான் வீட்டுக்குள் வர வேண்டும்
குசினிக்குள் சென்று நாய்க்கு சாப்பாடு,தண்ணிர் வைப்பதற்காக கோப்பைகளை தேடிக்கொண்டிருந்தான் .
"என்னப்பு குசினிக்குள் சத்தம் கேட்குது உன்ட நாய்குட்டி உள்ள வந்திட்டுது போல கிடக்கு,பிடிச்சு வெளியால விடு"
"அது நான் அம்மா, சாப்பாடு வைக்க கோப்பை ஒன்று தேடுறேன் "
"சனம் சாப்பிட கோப்பை இல்லை உனக்கு நாய்க்கு சாப்பாடு வைக்க கோப்பை வேண்டிக்கிடக்கு,சிரட்டையில் சாப்பாடு போடப்பு"
இதற்கு எதிர்கதை கதைச்சால் நிச்சயம் நாய்குட்டியை இழக்க நேரிடும் என்ற காரணத்தால் சிரட்டையிலயே பால்,தண்ணிர் ,உணவுயாவும் கொடுத்தான்..
அம்மாவின் மச்சாள் முறை உறவுக்கார பெண் அத்துடன் அவரின் நெருங்கிய நண்பியும் ஆவார்.
வித்தியா என்ற ஒரு பெண்பிள்ளை உண்டு, சுரேசை விட இரண்டு வயது குறைவு.தாயும் மகளும் ஒன்றுவிட்ட கிழமையாவது சுரேஸின் வீட்டுக்கு வருவார்கள்.வருபவர்களுக்கு எல்லாம் நாய்குட்டியை காட்டுவதுதான் சுரேசின் பொழுதுபோக்கு ,வித்தியாவையும் அழைத்து சென்று நாய்குட்டியை காட்டியவன் பெட்டியினுள் இருந்து வெளியே எடுத்துவிட்டான் ,இதை எதிர்பாரத வித்தியா "அம்மா" என அலறியபடியே வீட்டினுள் ஒடினாள்.
சுரேஸுக்கும் மீசை அரும்பி வயசுக்கு வர,வித்தியாவும் பருவமடைய அவர்களுடன் சேர்ந்தே நாய்குட்டியும் நாயாகிவிட்டது.வித்தியா சுரேஸின் வீட்டை வருவதை குறைத்துக்கொண்டாள்.பிரவுனி ஒருநாள் வீதியை கடக்கும் பொழுது பஸ்வண்டியில் அடிபட்டு இறக்க கவலையுடன் இருந்த சுரேஸை,"மனிதனே சாகிறான் நீ உந்த நாய்க்கு போய் கவலை படுகிறாய்,இழுத்து கொண்டுபோய் தேசிக்காய் மரத்தடியில் தாட்டுவிடு மரம் நல்லாய் காய்க்கும்" என்றார் தந்தை .அடுத்த ஆண்டு மரம் நல்லாய் காய்க்க தொடங்கியது.

அம்மா சில காய்களை பொறுக்கி அவனிடம் மச்சாள் வீட்டை கொடுக்கும்படி கூறினாள்.அவனுக்குள் ஒருவித கிளுகிளுப்பு அவனை அறியாமலயே உண்டாகிவிட்டது.அவனிடம் இருந்த அழகான ஒரு சேர்ட்டை மாட்டிகொண்டு வித்தியா வீட்டிற்க்கு சென்றான்.வாசலில் இருந்து குமுதம் வாசித்து கொண்டிருந்தவள் 
"அம்மா சுரேஸ் வந்திருக்கிறார் "என்றவள் மீண்டும் தனது கதை புத்தகத்தில் மூழ்கிவிட்டாள் வெளியே வந்த தாயார் அட தம்பி சுரேஸ் உள்ள வாவேன்.
வாசல்லிருந்தவளை பார்த்துகொண்டிருக்கும் பொழுது அவளது தாயார்
"வித்தியா தம்பியை சுரேஸ் என்று கூப்பிடக்கூடாது அவர் உனக்கு அண்ணா முறை" என்றாள்
"அன்ரி அம்மா இதை உங்களிட்ட கொடுக்க சொன்னவ "
"என்னது தம்பி"
"வீட்டு மரத்து தேசிக்காய் ,நான் போயிற்று வாரன்" வந்த வேகத்தில் வீடு திரும்பினான்.....பாய் சுரேஸ் அண்ணா என்ற குரல் நக்கலா, நளினமா, காதலா என்று தெரியாமல் வித்தியா கலியாணம் கட்டி வெளிநாடு செல்லும் வரை ஏக்கத்துடன் இருந்தான்.
வித்தியாவுக்கு இரு ஆண்பிள்ளைகள் வெளிமாநில பல்கலைகழகத்தில் பயில்கின்றனர்.கணவனும் ,தாயாரும்,செல்லமும்தான் அந்த பெரிய வீட்டில் குடியிருக்கின்றனர்.
அடிக்கடி வித்தியாவின் தாயாரை பார்ப்பதற்க்கு வீட்டை சென்றுவருவான் .அவள் இப்பவும் சுரேஸ் அண்ணா என்றுதான் அழைப்பாள்.தாயார் வயது போனாலும் மிகவும் துடிப்பாக தனது வேலைகளை கவனித்துகொள்வார்.

வித்தியாவின் மாமா இவர்களுடன் ஊரில இருந்தவர் பின்பு அவுஸ்ரேலியா வந்தவுடன் அவரையும் இங்கு அழைத்திருந்தார்கள். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு சுரேஸை அழைப்பார்கள் . சுரேஸ்,மாமா,வித்தியாவின் கணவர் மூவரும் ஒன்றாக இருந்து உற்சாக பாணம் அருந்துவது வழமை இருவருடங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார்.
" சுரேஸ் அண்ணா இன்றைக்கு யாரின்ட பிறந்த நாள் சொல்லு ங்கோ பார்ப்பம்"
"மாமாவின்ட"
"செல்லத்தின்ட பிறந்த நாளும் அவரின்ட பிறந்த நாளும் ஒரே நாள்"
"மாமாவை மாதிரித்தான் இவனும், சாப்பாடு நேரத்திற்கு கொடுக்காவிட்டால் கோபம் வந்திடும்,செல்லம் வாடா சாப்பிடுவம்" என தூக்கி அரவணத்தபடியே விலையுயர்ந்த சில்வர் கோப்பையில் ,அலுமாரியிலிருந்த பெட்டியை திறந்து அதனுள் போட்டவள் ,செல்லம் சாப்பிடடா என வயிற்றை யும் முதுகையும் தடவிக்கொடுத்தாள்.
அம்மாவுக்கு ஒரு கிஸ் தாடா ,அப்பா எங்கயடா? அவரை காணவில்லை அதுதான் தேடு,என அவனின் செயல்களுக்கு அவளே விளக்கம் கொடுத்துகொண்டிருந்தாள் .கார் வந்து நின்ற சத்தம் கேட்டு பாய்ந்து ஒடியவனை வாடா வாடா அப்பா உள்ள வருவார்.அப்பாவை கண்ட செல்லம் அவர் மேல் பாய்ந்து தாவிக்கொண்டது.அவரும் அவனுக்கு ஒரு முத்தம் கொடுக்க அதுவும் ஒரு முத்தம் கொடுத்தது. அப்பா வாங்கி வந்த விளையாட்டு பொருளை வெளியே எடுத்து கிலுக்கி காட்டவே பாய்ந்து வாங்கியவன் வீட்டை சுற்றி சந்தோசத்தில் ஒடிவந்தான் .
"ஹலோ சுரேஸ் "
"ஹாய் விமல்"
செல்லத்தை மடியில் வைத்து தடவியபடியே 
"வித்தியா இவனின்ட ரெயினிக் நாளைக்கு இருக்கு ,பிறகு டொக்டரிட்ட அப்பொயின்ட்மன்ட் இருக்கு,மறந்திடாமல் அவனின்ட சாப்பாட்டையும் வாங்கி கொண்டு வர வேணும்"
"எல்லாத்துக்கும் முதல் செல்லத்தை குளிப்பாட்ட அவங்கள் வருவாங்கள் ,செல்லத்துக்கு குளிக்கிறது என்றால் நல்ல விருப்பம்,என்னடா செல்லம் "வினாவியபடியே செல்லத்திற்க்கு முத்தமிட்டாள் வித்தியா.
ஐந்தாறு குடும்பம் பரிசுப்பொருட்களுடன் வந்திருந்தனர் .கப்பி பேர்த்டெ பாடி கேக் வெட்டினார்கள்.கேக் செல்லத்திற்க்கு தித்தி முத்தமும் இட்டனர் விமல் தம்பதியனர்,அத்துடன் பாட்டியும் தந்து பங்குக்கு முத்தமும் கேக்கும் கொடுத்தாள். செல்லத்தின் நண்பர்கள் ஒருத்தரும் அங்கு வரவில்லை.நண்பர்களின் பெற்றோர்களும்,காவலர்களும் தான் வந்திருந்தனர்.
இன்று மாமாவின் பிறந்த நாள் அதே நாள் இவனின்ட பிறந்தா நாளும்,......மாமா எங்களுடன் நல்ல பாசமாய்யிருந்தவர் பாவம் செத்து போயிட்டார்".
"இப்ப என்ன வித்தியா சொல்லுறீர் மாமா ,நாயாக மறுபிறப்பு எடுத்திருக்கிறார் என்றொ"
"ஒம் அண்ணே எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றது.இவனின் செயல்கள் எல்லாம் அப்படிதான் இருக்கிறது"
" உமக்கு ஞாபகம் இருக்கே 30வருசத்திற்கு முதல் என்ட வீட்டு நாய்குட்டி உம்மட காலை நக்க வர அலறிஅடிச்சு கொண்டு அம்மாவிடம் ஒடிப்போனது, இப்ப என்னடா எனற நாய்குட்டிக்கு முத்தமிடுகின்றீர்"
"அப்ப நான் சின்ன பிள்ளை மற்றது அது தெருநாய்"
"அடுத்த பிறவி அவுஸ்ரேலியாவில் நாயாக உம்மட வீட்டில பிறக்க வேணும் ."சுரேஸ் சொன்னதை கேட்ட நாய் ஒரு பார்வை பார்த்து குரைத்தது.அந்த குரைப்பும் பார்வையும் டேய் உனக்கு என்ன விசரா என்ற மாதிரி இருந்தது.
நீங்களும் உங்கன்ட நாய்களை கூட்டிகொண்டு வந்திருந்தால் அதுகளும் ஒடிப்பிடிச்சு ,ஒளிச்சுப்பிடிச்சு விளையாடியிருக்குங்கள்.தங்களுடைய இச்சைகளையும் தீர்த்திருக்குங்கள் என்றான் சுரேஸ்.
"அதுகளுக்கு டிசெஸ் பண்ணியாச்சு"அண்ணே
"அட கடவுளே இவ்வளவத்தையும் கொடுத்து அதுகளின்ட பொறுத்த இடத்தில கைவச்சிட்டிங்களே"
இப்படி சுரேஸ் சொன்னதை கேட்ட செல்லம் துள்ளி குதித்து ஒடி வந்து சுரேஸின் காலில் விழுந்து "ஊ ஊ ஊ ,வவ்,வவ்"
ஆயிரம் இருந்தும்,வசதிகள் இருந்தும் no அது 
செல்லத்தை குனிந்து முதுகில் தட்ட அது மீண்டும் "ஊ.....ஊ......வவ்.........வவ் ........ஊ....ஊ"
ஊரில் தெருநாய்க்கு இருக்கிற அந்த சுதந்திரம் இங்க இல்லை நீ அவுஸில் நாயாக பிறக்க போறாயா ,ஊரில தெருநாயாக பிறக்கபோறீயா என்று கேட்பது போலிருந்தது.தொடர்ந்து அங்கிருந்தால் நாய் பாஷை யில் பாண்டித்தியம் கிடைத்துவிடும் என பயந்து வீட்டுக்கு புறப்பட தயாரானான்.
அவன் போக வெளிக்கிட மீண்டும் செல்லம் "வவ் ,வவ் ஊஊ"
"யாராவது வந்திட்டு போக வெளிக்கிட்டா எங்கன்ட செல்லத்திற்க்கு விருப்பமில்லை, அங்கிள் போயிட்டு பிறகு வருவார் அங்கிளுக்கு பாய் சொல்லு"

அட கோதாரி ,அவுஸ்க்கு வந்து நாய்க்கு அங்கிள் ஆனதுதான் மிச்சம். நல்ல வேலை மனிசி பிள்ளைகள் வரவில்லை வந்திருந்தால் ......"வவ் ஊ" :D
என நினைத்தபடி காரை ஸ்டார்ட் பண்ணினான்..... 

Thursday, October 2, 2014

மாங்காய்மண்டை + வேதாளம்

பனிக்காலத்தில் வீட்டு வளவுக்குள் அதிகமாக போவதில்லை,அன்று நல்ல வெய்யில் அடிச்சுது ஒரு கோப்பியை போட்டுகொண்டு வெளியால வந்து தோட்டத்து கதிரையில் குந்தினேன்.வீட்டினுள் இருந்த வெப்பநிலையை விட வெளியில் மிகவும் இதமாக இருந்தது.

எம்.ஜி. ஆர் காலத்து வாழை தண்டு போலஉடம்பு ஆளே,மடவாழை பாடல்களை முனுமுனுத்தபடி சீனியில்லா கோப்பியை ரசித்து குடிக்கதொடங்கினேன்.

'வேதாளம்,வேதாளம்' என சத்தம் கேட்டுது.அக்கம் பக்கம் திரும்பி பார்த்தேன் ஒருத்தரையும் காணவில்லை.
'மரமண்டை,மரமண்டை' கிழக்கு பக்கத்தில இருந்து வந்திச்சு திரும்பி அந்த பக்கத்தையும் பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை.
முதல்நாள் அடிச்ச தண்ணியின் வேளை போல கிடக்கு பெரும் குடிமக்கள் இதைதான் கங்கோவர் என்று சொல்லுறவங்களாக்கும் என நினைத்தபடி கோப்பியை குடித்தேன்.... 'வேதாளம்,மரமண்டை' என்ன மரம்மாதிரி நிக்கிறாய் என கோரோசா சத்தம் கேட்டுது. கோப்பி கப்பை கதிரையில வைச்சுப்போட்டு பக்கத்து சீனாகாரன்வீட்டு ,முன் வீட்டு, பின் வெள்ளைக்காரன் வீட்டு வளவுகளை எட்டிபார்த்தேன், ஒருத்தருமில்லை.
மனிசி மனசுக்குள் திட்டினாலும் நிச்சயம் இப்படி வெளிப்படையாக திட்டாமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவளையும் ஒருக்கா போய் பார்ப்போம் என உள்ளே சென்றேன் அவள் சமையல் செய்துகொண்டிருந்தாள்.
மீண்டும் சீனியில்லா கோப்பியை குடிக்க தொடங்கினேன் "அடே வேதாளம் ,நீ ஊரில இருந்துதானே வந்தனீ.....உனக்கு என்ட உசரம் ,சுற்றளவு ஒன்றும்தெரியாதோ.....உனக்கு குளிர் என்றால் கம்பளி ஆடையை போடுவாய் ,வெய்யிலென்றால் அம்மனமாய் திரிவாய் அதுதான் ஸ்டைலென்று வேறு புலம்புவாய்.....ஆனால் நாங்கள் அப்படியில்லை "
"மாங்காய்மண்டை ,சீனியில்லா கோப்பி குடிக்கிற உன்னைதான்டா,கடத்தல் மன்னன்....உவங்கள் அவுஸ்ரேலியா காரங்கள் நீங்கள் களவாய் வந்து குடியேறுவியள் என்று பல சட்டங்களை இயற்றி தடுக்கிறாங்கள் ,அதேபோல எங்களை உள்ளவிடுவதற்கும் பல சட்டங்களை உருவாக்கி கட்டுப்படுத்துகின்றார்கள் ஆனால் நீ .உள்ளாடைக்குள் சுற்றி அவங்களை உச்சிப்போட்டு எங்களை கடத்தி கொண்டுவந்து படுத்துற தொல்லை தாங்க முடியல்ல.... .என்னை கடத்தி உன்ட கூட்டாளிமாருக்கு பிலிம் காட்டுறதைவிட கஞ்சாவை கடத்தியிருந்தால் நீ இன்று கோடிஸ்வரன்....

'கஞ்சாவையா.....என்ட சிவனே'
டேய்,டேய் ஏன்டா சும்மா இருக்கிற அந்த மனுசனை இதுக்குள்ள இழுக்கிறாய்.என்னை பொறுத்தவரை சட்டவிரோதமாய் எதை செய்தாலும் குற்றம்தான் "
உன்ட ஊரில என்ட பரம்பரை எப்படி வாழ்ந்தது என்று உனக்கு தெரியும்தானே.எங்கன்ட இஸ்டத்திற்கு வளர்ந்து ,பருத்து பூத்து குலுங்கி காய்த்து கனியாகி பழமாகி எல்லோர் வாயிலும் இனித்து பேசு பொருளாக இருந்த எங்களை ஏன்டா கடத்தி கொண்டுவந்து தொல்லை தருகின்றாய். ஐந்து வருடத்திற்கு முதல் பூச்சாடி ஒன்றில என்னை புதைத்துவிட்டாய் கோடை காலம் என்றபடியால் நானும் விபரம் தெரியாமல் முளைத்துவிட்டேன்.பூச்சாடியில் பூமரங்கள்தானே வைப்பார்கள் நீ ஒருத்தன் தான் பூச்சாடியில் மாமரம் வைத்த புலம்பெயர்ந்த புண்ணாக்கு.
ஆறு மாதக் கோடையில் பூச்சாடியை வெளியே எடுத்து வைத்து மீண்டும் குளிர்காலம் என்றவுடன் உள்ளே எடுத்து வைத்து முதல் இரண்டு வருடமும் தொல்லை கொடுத்தாய் இதைப்பார்த்து பக்கத்து வீட்டு மேரி காரணம் கேட்டதற்கு ,இந்த நாட்டு காலநிலைக்கு ஏற்றவகையில் இயயைபாக்கமடைவதற்காக அப்படி செய்வதாக சொல்லி அடுத்த வருடம் வீட்டு வளவு மூலையில் நட்டுவிட்டாய்.நான் வளரக்ககூடிய வளவாடா உன்ட வீட்டு வளவு.
என்னை கடத்திகொண்டு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடமாச்சு ஒரு மீற்றருக்கு மேல வளரவில்லை.பனி,குளிர்,வெய்யில் இதெல்லாம் தாங்கி வாழ்ந்து கொண்டுருக்கிறேன் .இந்த கொடுமைகளை தாங்கி கொள்ளலாம் ஆனால் நீ நண்பர்களுடன் என்னை பற்றி பேசும் பேச்சுக்களை கேட்டு தாங்கமுடியாமல் இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்டா... கடந்த ஆண்டு இரண்டு காய்கள் என்னால் உனக்கு தர முடிந்தது ,அதில் ஒன்று அழுகிவிட்டது மற்றது கனியானது.அதை நீ படம் எடுத்து முகப்புத்ததில் போட்டவுடன் உன் நண்பர்கள் உன்னிடம் என்னை பற்றி விசாரிக்க நீ அவர்களுக்கு விட்ட புளுகை நினைத்து நான் வெந்து வெதும்பி போனேன்டா.
உன்ட ஊர் கறுத்தகொழும்பான் நான் என்றும் அதே சுவையுடன் இருக்கிறேன் என்று சொன்னீயே அதுதான்டா என்னால் தாங்கமுடியவில்லை.அடே இந்த பனிக்கும்,வெய்யிலிலும் எப்படி உனக்கு நான் உன்ட ஊர் கறுத்த கொழும்பானின் சுவையை தரமுடியும். நீயே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு....ஆனால் நாங்கள் மட்டும் அதே சுவையுடன் இருக்க வேண்டும் என நினைக்கின்றாய் ,தப்பட தம்பி தப்பு.......

டேய் வேதாளம் ,சின்ன வயசில வேதாளம் முருங்கை மரத்திலெறிவிட்டது என அம்புலிமாமா கதைகள் உனக்கு சொல்லிதந்தவர்கள்தானே. உன்ட ஊர் வரன்ட பிரதேசம் அங்கு முருங்கையாகிய நான் நல்லாய்வளர்வேன் என்பது உனக்கு தெரிந்த உண்மை பிறகு ஏன் என்னை இந்த ஈரப்பதாமான நாட்டில் பரப்ப முயற்சிக்கிறாய்....
டேய் கறி! ஊரில நீ என்னை திரும்பியும் பார்க்கிறதில்லை,சாப்பாட்டுக்கோப்பையில் ஒரு கரையில தூக்கி வைத்துவிட்டு குப்பையில் எறிந்துவிடுவாய் ஆனால் இங்கு என்னை ஒரு மூலிகை மாதிரிபாவிக்கின்றாய்.நீரழிவுக்கு வியாதிக்கு கறுவேற்பிள்ளை நல்லம் என்று விளம்பரப்படுத்துகின்றாய்,ஆராச்சி செய்தா இந்த முடிவுக்கு வந்தாய் ?யாரொ சொன்னதை கேட்டு நீ ஒரு மருத்துவன் மாதிரி கதை விடுகின்றாய்.யாராவது பெண்கள் வந்தால் கொத்துக்கொத்தாக என்னை உடைத்து அவர்களிடம் கொடுப்பதுமட்டுமல்லாமல் எனது கன்றுகளையும் பிரித்துதெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து நீ இன்பம் காண்கின்றாய். நீ சைட் அடிக்க நான் தான் கிடைத்தேனா?
.ஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயா?உன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா.....
கறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்... 

Wednesday, September 3, 2014

கப்பல் சனம்

தம்பி ந‌ல்லாய் படிச்சு , உவன் கன‌கனின்ட மகனை போல நீயும் வெளிநாட்டுக்கு போய்மேற்படிப்பு ப‌டிச்சு டாக்டராக வந்திட வேணும் என்று கரனின் அப்பா சொல்லிகொண்டே இருப்பார்.கரன் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது கன‌கரின் மூத்தமகன் குகன் மருத்துவதுறையில் இறுதியாண்டு படித்திகொண்டிருந்தான்.கன‌கர் அரச உத்தியோகத்த‌ர் .இரு மகன்கள் இரு மக‌ள்கள்.மூத்தவ‌ன் குகன் அடுத்த இருவரும் பெண்கள் கடைசி கணேஸ்.
கர‌ணும் கணேஸும் ஒரே வகுப்பு ஒரே பாடசாலை இருவருக்குமிடையே ஒரு போட்டி மனபான்மை இருந்தது.
குகன் இறுதியாண்டு படிக்கும் பொழுதே ,கனகர் நல்ல சீதனத்துடன் கலியாணத்தை ஒழுங்கு படித்துவிட்டார்.பெண் சுகி மருத்துவத்துறையில் இர‌ண்டாம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தாள்.சுகி படித்து முடிந்தவுடன் கலியாணத்தை வைப்பதாக இரு தரப்பின‌ரும் உறுதி படுத்திகொண்டனர்.
குகன் ம‌ருத்துவராக கொழும்பு பொது வைத்தியசாலையில் பணி புரிய தொட‌ங்கினான். கனகருக்கு அன்றைய காலகட்டத்தில் ஆளும்கட்சியில் நல்ல செல்வாக்கு இருந்தது.அவரின் பாடசாலை நண்பன் ஒருவர் மந்திரியாக இருந்தார்.கனகரின் அரசசெல்வாக்கும் சுகியிடம் வாங்கிய சீதனபணமும் குகன் லண்டனில் மேற்படிப்பு படிக்க வழிசமைத்து கொடுத்தது.குகன் லண்டனில் தனது படிப்பை முடிக்க அதேசமயம் இலங்கையில் சுகி தனது படிப்பை முடித்தாள்.

தொலைபேசி வசதிகள் இல்லாதபடியால்,வான்கடிதங்கள் மூலம் தங்களது முத்தங்களை பகிர்ந்து கொண்டனர்.படிப்புமுடிந்தமையால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.ஆனால் கனகர் அதற்கு ஒரு தற்காலிக தடையை போட்டார்.

இலங்கைக்கு திரும்பி வந்தால் அரசு கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் ஆனபடியால் திரும்பி வராமல் லண்டனிலயே தொடர்ந்து இருக்கும்படியும்,சுகியை லண்டனில் மேற்படிப்பு படிப்பதற்கு அனுப்புவதாவும் அங்கு வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளும்படியும் கனகர் தனது திட்டத்தை கடிதம் மூலம் அறிவித்தார்.குகனும் தந்தை சொல்படியே செய்தான்.
சுகியும் அரச செலவில் லண்டனுக்கு மேற்படிப்புக்கு சென்றாள் .மேற்படிப்பு படித்துமுடித்தவுடன் மீண்டும் தாயகம் வந்து பணிபுரிவேன் என இருவரும் சத்தியபிரமானம் எடுத்துதான் இங்கிலாந்து சென்றார்கள். லண்டன் மேட்டுக்குடி வாசிகளாக இருவரும் மாறினார்கள் .

லண்டன் வாழ்க்கையை கடிதமூலம் அறிந்த கனகர் தனது இரு மகள்மாருக்கும் லண்டன் பொறியிளாலர் மாப்பிள்ளைகளயே தேர்தெடுத்தார்.அந்த காலகட்டத்தில் "லண்டன் இஞ்னியர்மார்" சந்தையில் அதிகமாக விற்பனையில் இருந்தார்கள். சகோதரங்கள் கணேஸையும் லண்டனுக்கு மாணவவிசாவில் எடுத்தனர். டிப்லோமா,டிகிரி படிப்புகளை படித்து லண்டன் இஞ்னியரானான்.இலங்கையில் உயர்தர பரீட்சையில் நாங்கு பாடங்களிலும் சாதாரண சித்தியடைந்தவனை பிரித்தானிய கல்வி வடிமைப்பு பொறியிளாலராக்கியது.
கணேஸ் பல தடவைகள் பிரித்தானியாவின் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கபடவே, ஒரு குறுக்குவழியை பின்பற்ற முயற்சி செய்தான்..ஒருசிலர் வெள்ளையின பெண்களை மணமுடித்து பிரஜாவுரிமை பெற்ற பின்பு விவாகரத்து செய்துவிடுவார்கள்.அந்த முறையை கணேஸ் பின்பற்றி பிரித்தானிய பிரஜாவுரிமையானான்.
பிரித்தானியாவில் அவனது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை.
கரன் கொழும்பில் கணக்காளராக பணிபுரியும் பொழுது சுற்றுலா விசாவில் அவுஸ்ரேலியா வந்து அகதி அந்தஸ்து கோர,அவுஸ்ரேலியா நிரந்தர வதிவிடவுரிமை கொடுத்து இருவருடங்களின் பின் பிராஜவுரிமையும் கொடுத்தது.
கரன் கணேசுடன் தொடர்பு கொண்டு அவுஸ் பலருக்கு இருவருடத்தில் பிரஜாவுரிமை கொடுப்பதாக சொல்லவே ,சுற்றுலா விசாவில் அவுரேலியாவுக்கு வந்தான்.,.அவுஸ்ரேலியா காலநிலை மிகவும் நன்றாகவே பிடித்துகொண்டது அத்துடன் ,அவனது படிப்புக்கேற்ற வேலையும் கிடைத்தது.வந்தாரை வாழவைக்கும் அவுஸ் அவனையும் அரவணைத்துகொள்ள, வெள்ளையின பெண்ணை விவாகரத்து செய்து ,அவுஸ்ரேலியா மாப்பிள்ளையானன்.
1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்பு பலருக்கு அகதி அந்தஸ்து அவுஸ்ரேலியா வழங்கத் தொடங்கியது.சிலர் தொழில்சார் திறமைகளுடன் குடிபெயர்ந்தார்கள்.

சுபன்,கருணா அகதியா தஞ்சம் கோருகின்றனர் ,அவுஸ்ரெலியா அவர்களையும் அரவணைக்கின்றது.இருவரும் கணேசுக்கும் ,கரணுக்கும் நண்பர்களாகின்றனர் ,நால்வரும் தொடர்மாடி கட்டிடம் ஒன்றில் வீடு வாடைகிக்கு எடுத்து குடி பெயர்கினறனர்.வெள்ளிக்கிழமை மாலைவேளையில் நால்வரும் ஒன்றாக உற்சாக பாணம் அருந்துவார்கள்.வேறு சிலநண்பர்க ளும் வெளியிலிருந்து வந்துஇவர்களுடன் கலந்து உற்சாகமடைவார்கள். 
இவர்களின் தொல்லை தாங்கமுடியாமல் சிலர் பொலிஸுக்கு தகவல் கொடுக்க ,பொலிஸ் சில நடவடிக்கை எடுத்தது.இருந்தும் இவர்களின்தொல்லை தொடர்ந்துகொண்டேயிருந்தது,சமையல் வாசனை,சந்தனக்குச்சி மணம் போன்றவை சில குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது .சில குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தார்கள். வெற்றிடமான வீடுகளுக்கு நண்பர்களை குடிபெயருமாறு சிபார்சு செய்தார்கள்.தொடர்மாடிக்கட்டிடத்தின் பாதி வீடுகள் ஒரே இனங்களின் வீடுகளானது.
கரன் தாயகம் சென்று திருமணம் செய்து மனைவியை அழைத்துக்கொண்டு அவுஸ்ரேலியா திரும்பினான் .அதேதொடர்மாடிக்கட்டிடத்தில் இருவரும் தனிக்குடிதனம் சென்றார்கள்.கணேசும் தூரத்து உறவுக்கார பெண்ணை மணமுடித்து அதே தொடர்மாடிக்கடித்தில் குடிபெயர்ந்தான். இருவரின் மனைவிமாரும் வெள்ளிக்கிழமை ஒன்றுகூடலுக்கு தடை போட மாதத்தில் ஒருமுறை ஒன்று கூடினார்கள்.ஒரே சத்தமாகவும்,பெடியங்கள் அநேகர் வந்து போவதாலும் இந்த தொடர்மாடிக்கட்டிடத்திலிருந்து வேறு தனிவீட்டுக்கு போவோம் என மனைவிமார் சொல்ல ,தனிவீடு வாங்கி குடிபெயந்தார்கள்.
கரனும்,கணேஸும் இப்பொழுது தொடர்மாடி கட்டிடப்பக்கம் வருவதில்லை..சுபனும் ,கருணாவும் வியாபாரத்திலிடுபட்டு செல்வந்தர்களானார்கள் .அவர்களும் அந்த தொடர்மாடிப்பக்கம் போவதில்லை. சுபன் குடியுரிமை பெற்றவுடன் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்னுடன் தொடர்பில் இருந்தான் .அவள் ஒழுக்கமற்றவள் என கூறி ஊர் பெண்ணை மணமுடித்துகொண்டான்.
கருணா திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தான் .இது அவளது கணவனுக்கு தெரியவர விவாகரத்தில் அவர்களது திருமணவாழ்க்கை முடிவடைந்தது.கருணா சிறிது காலம் மெல்பேர்னில் வாழ்ந்துவிட்டு மீண்டும் தனது ஊர் பெண்ணை மனமுடித்து சிட்னியில் வாழத்தொடங்கினான்.
1990 ஆம் ஆண்டுவரை சுற்றுலா விசாவில் பலர் அவூஸ்ரேலியாவுக்கு வந்து பின்பு அகதி அந்தஸ்து கோரி ,பின்பு தங்களது குடும்பத்தை வரவழைக்கின்றனர்.சிலர் அந்த தொடர்மாடிக்கட்டிடத்தில் குடி புகுகின்றனர்.
பிரபாவும்,மனைவியும் மத்தியகிழக்கு நாட்டிலிருந்து சுற்றுலா விசாவில் அவுஸ்ரேலியா வந்து இன்றுவரை அந்த தொடர்மாடிக்கட்டிடத்தில் வாழ்கின்றார்கள். தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார்கள்.

இப்பொழுதெல்லாம் அந்த நாலு நண்பர்களும் வருடத்தில் ஒருதடவை ஒன்று கூடுவார்கள்.பிள்ளைகள் ஆரம்பபாடசாலையில் படித்திக்கொண்டிருந்தார்கள்.காலப்போக்கில் வருடத்தில் ஒருதடவை ஒன்றுகூடுவதும் இல்லாமல் போய்விட்டது.

1994/95 ஆம் ஆண்டளவில் அவுஸ்ரேலியாஅரசு, சிறிலங்கா கடவுச்சீட்டுக்காரர்களுக்கு சுற்றுலா விசா கொடுப்பதை தடுப்பதற்காக மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.
இதனால் உசாரடைந்த கடத்தல்மன்னர்கள் போலி ஆவுஸ்ரேலியா கடவுச்சீட்டு,போலி அவுஸ்ரேலியா விசா போன்றவற்றை தயாரித்து ஆள் கடத்தல் வேலை செய்தனர்.இப்படி வந்தவர்களை விமானநிலையத்திலயே தடுத்து விசாரனை செய்து முகாமுக்கு அனுப்பிவைத்தார்கள்.முகாமிலிருந்தவர்களை தொடர்மாடிக்கட்டிடத்திலிருந்தவர்கள் சென்றுபார்வையிட்டு சில உதவிகளை வழங்கியிருந்தார்கள்.சகலருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.சிலர் தொடர்மாடிக்கட்டிடத்தில் தங்களது அவுஸ்ரேலியா வாழ்க்கையை தொடங்கினார்கள். கணேஸும் கரனும் தங்களது பிள்ளைகளின் பாடசாலை வைபவம் ஒன்றில எதிர்பாராத விதமாக சந்திக்க வேண்டிவந்தது.
"ஹலோ மச்சான் உன்ட மகளுக்கு இந்த செலக்டிவ் ஸ்கூலிலயே அட்மிசன் கிடைச்சது"
"ஓமடா என்ட மகளுக்கு இஞ்சதான் கிடைச்சது ,ஒரு மார்க்ஸால் இங்க வரவேண்டி வந்திட்டது "
இருவரும் பழைய நாட்களை சிறிது நேரம் இரைமீட்டனர்.
"நீ அந்த பிளட் பக்கம் போனனீயோ"
" இல்லை,நீ "
"கடைசியா அவன் பிரபா வந்த பொழுது போனனான் "
"இப்பவும் யாராவது பழைய சனம் இருக்கோ"
"பிரபா மட்டும் அங்க இருக்கிறான் வேறு ஒருத்தருமில்லை,டூரிஸ்ட் விசாவில எங்கன்ட சனம் கனக்க வந்து அவுஸ்ரேலியாவை நாறப்பபண்ணிப்போட்டுதுகள்"
1996ஆண்டு காலகட்டத்தின் பின்பு விமானமூலம் களவாக உள் நுழைந்தவர்களில். பரமேஸ்வரனும் ஒருவன். முகவரிடம் பணம்கட்டி தாய்லாந்தில் பரமேஸ்சர்மா என பாஸ்ப்போர்ட் எடுத்து கம்போடியா சென்று அவுஸ்ரேலியா விமானத்தில் ஏறி சிட்னி விமானநிலையத்தில் வந்திறங்குகின்றான்.நோ இங்கிலிஸ் என புலம்ப ,அதிகாரிகள் விசாரனைகளை செய்து விலவூட் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.பரேமேஸ் தனது கேஸ் அதிகாரியிடம் புலிபிடிக்குது என சொல்லி ஆறு மாதத்தில் அவுஸ்ரேலியா குடியுரிமை பெறுகின்றான்,அதைதொடர்ந்து மனைவி குழந்தைககளை வரவழைக்கின்றான்.
2000ஆண்டின் பின்பு உயர்கல்வி கற்பதற்கு பலருக்கு விசா வழங்கப்படுகிறது,அப்படிவந்தவன் சண்முகநாதன்.கள்ளவேலி பாய்ந்த பொழுது கால்முறிந்த எக்ஸ்ரேயினை காட்டி புலி அடித்து கால் முறிந்தது எனக்கு நாட்டுக்கு திரும்பி போகமுடியாது மீண்டும் போனால் புலி என்னை கொன்றுவிடுவார்கள் என கேஸ் அதிகாரிகளிடம் சொல்லி நிரந்தர குடியுரிமை பெற்றுகொண்டான்.
ஏற்கனவே அவூஸ்ரேலியா விசா பெற்ற பெண்ணை திருமணம் முடித்து சுரேஸ் அவுஸ்ரேலியா குடியுரிமை பெறுகின்றான்.
இன்று தொடர்மாடிக்கட்டிடம் இருந்த பிரதேசத்தில் பெரும்பான்மையினராக கரன்,சண்முகம், பிரபா,சுரேஸ் ஆகியோரின் இனத்தவர்கள் வாழ்கின்றார்கள்.வியாபாரஸ்தாபனங்களை இந்த இனத்தவர்கள் எடுத்து நடத்துகிறார்கள். புதிதாக வருபவர்கள் அநேகர் அந்த இடத்தில் சிறுதுகாலம் வாழ்ந்துதான் வேறு இடங்களுக்கு செல்வார்கள்.
பிரபா இளைப்பாறிவிட்டான்.,அவனுக்கு தற்பொழுது அந்த தொடர்மாடிக்கட்டிடத்தில் நாலுவீடுகள் உண்டு. சிட்னியில் அவனை எல்லோரும் "பிரபாஅண்ணே"என்றுதான் அழைப்பார்கள்.தொடர்மாடிக்கட்டிடத்தில் நீண்ட காலமாக வாழ்வதனால் இந்த பெயர் அவனுக்கு அடையாளமாக போய்விட்டது.அகதிகளாக வருபவர்களுக்கு ,முடிந்தளவு உதவிகளை செய்து கொடுப்பான்.. . அவனது மகன் மருத்துவனாக கடந்த இரண்டு ஆண்டுகாலமாக பணிபுரிகின்றான்.
கணேஸின் 55வது பிறந்தநாளை செப்பிறைஸாக செய்ய வேண்டுமென்ற காரணத்தால், கரனின் வீட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.கணேஸின் மனைவிதான் இந்த பிறந்தநாளை மிகவும் செப்பிறைசாக ஒழுங்கு செய்திருந்தாள்.

கணேசின் மேட்டுக்குடி நண்பர்கள், உறவினர்கள் ,தொடர்மாடிக்கட்டிட ஒரு சில நண்பர்கள் மற்றும் ,கணேஸின் நண்பிகளின் குடும்பங்கள் என அழைப்பு விடப்பட்டிருந்தது.சகலரையும் மாலை ஆறுமணிக்கு வரும்படி அன்புகட்டளை விடப்பட்டிருந்தது 
லண்டனிலிருந்து கணேஸின் சகோதரங்கள் எல்லோரும் வந்து கரனின் வீட்டில் தங்கியிருந்தார்கள்.மண்டபத்தில் வைத்து இவர்களை கண்டது கணேஸுக்கு உண்மையிலயே செப்பிறைஸாக தான் இருந்தது.சகோதரங்களை கண்ட கணேஸ் கட்டித்தழுவி முத்தமிட்டு ஆனந்தகண்ணீர் விட்டான்.
கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து பாடியபின்பு எல்லோரும் ஒண்றுகூடினார்கள்.பெண்கள் சினிமா,மற்றும் சின்னதிரை பற்றி கலந்துரையாட ஆண்கள் அரசியல் மற்றும் ஊர் உலவாரம் பேசிகொண்டிருந்தனர். 
எங்கன்ட ஆட்கள் எந்த பகுதியில் இங்க அதிகம் இருக்கினம் என குகன் கேட்டான்.
"அண்ணே அந்த பக்கம் நான் போய் 20வருடத்திற்க்கு மேல் ஆகுது "

"ஏன்டா நீ போறதில்லை"
"எங்கன்ட சனம் எங்க தான் ஒழுங்கா இருக்கு? கண்ட சனமும் அவுஸ்ரேலியாவுக்கு வந்து நாட்டை நாறப்பண்ணிபோட்டுது"

"ஓமடா லண்டனிலும் அப்படித்துதான் நான் எங்கன்ட சனத்தோட பழகுகிறதில்லை, 10% சனம் தான் ஸ்கில்ட் மைகிறேசனில எங்களை மாதிரி வந்திருக்கும் மிச்சமெல்லாம் ,களவாக அகதிகளாக வந்ததுகள்"
" ஓம் அண்ணே நீங்கள் சொல்லுறது சரிதான்....எனக்கும் பிரிடிஷ் பாஸ்போர்ட் இருந்தபடியால் உவங்கள் உடனே அவுஸ்ரேலிய சிட்டிசன்சிப் தந்திட்டாங்கள்"
இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த சுபனும் ,கருணாவும் தாங்கள் அகதியாக வரவில்லை என்று எனையோரை நம்ப வைப்பதற்காக ,தாங்கள் வரும் பொழுது பிஸ்னஸ் விசா இலகுவாக கொடுத்ததாகவும் தற்பொழுது கொடுப்பதில்லை என்றும் கூறினார்கள்.
ரியலெஸ்டேட் பரா என்றால் சிட்னி யில் அவனின் இனத்தை சேர்ந்தவர்கள் யாவரும் அறிவார்கள்."பொய் என்றால் வியாபாரம் வியாபாரம் என்றால் பொய்" என்பது அவனது கொள்கை .இதனால் அவன் இன்று ஒரு புகழ்பெற்ற பிசினஸ்மான்.தனது வியாபாரமெல்லாம் எங்கன்ட சனத்தொடுதான் என மனசாட்சிக்கு விரோதமில்லாது சொன்னான்.
'நொக்கியா சண்' என்று தான் சண்முகநாதன் அழைக்கப்டுகின்றான் அந்த கொம்பனியின் பிராந்திய முகாமையாளராக பணிபுரின்றான்,.

"பிராபாஅண்ணே நீங்கள் எப்படித்தான் அந்த ஏரியாவில் இன்னும் இருக்கிறீங்களோ தெரியவில்லை நாங்கள் இருக்கும் பொழுது அந்த இடம் எவ்வளவு பிஸ்புல்லா இருந்தது."என கரன் கேட்டான்

"எனக்கு என்றால் இப்பவும் அப்படித்தான் இருக்கு போல தெரிகின்றது"

"உந்த கப்பல் சனம் வந்த பிறகு சரியான மோசம்.....ஒரு வெள்ளை பெட்டை போக கூட்டமாக நின்று பார்த்துகொண்டு நிக்குதுகள்"என கணேஸ் சொன்னான்.
"அடே நீ இதை சொல்லுறாய் கலியாணம்கட்டின மனிசிகளை பார்த்தே விசில் அடிக்கிறாங்கள் " என்றான் கருணா.
"உந்த கப்பல்சனம் எல்லாச்சாதி பெட்டைகளையும் எல்லோ பார்க்கிறாங்கள்"என்றான் சுபன்...... ..
"என்னட்ட வேலை கேட்டும், வீடு வாடாகைக்கும் கேட்டு சிலதுகள் வாரதுகள் ,சிலபேருக்கு வேலை எடுத்து கொடுத்திருக்கிறேன் " என்றான் ரியல்ஸ்டெ பரா.
"கடந்த கிழமை ஒரு பொம்பிளையை கட்டிப்பிடிச்சது என்று கப்பலில் வந்த பெடியனை டி.வி யில் காட்டினாங்கள்" என்றான் நொக்கியா சண்..
பக்கத்தில் நின்ற பதின்மவயது இளைஞனை அழைத்த பிரபா.இவன் கஜன், இவனது குடும்பம் கப்பல் மூலம் 2008 ஆண்டு இங்கு வந்தவர்கள் ,அப்பொழுது இவன் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான் இரண்டுதடவை அதேவகுப்பில் படித்தான் .இன்று மருத்துவபீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயில்கின்றான்..... அவனது தங்கை சட்டக்கல்வி பயில்கின்றாள்.என அவனை அந்த கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தான் பிரபா........ அங்கு இருந்த அங்கிள்மார்,அண்ரிமாரின் கண்கள் யாவும் அவனே நோக்கின..... 
இந்த கூட்டத்தின் மத்தியில் எழுத்தாளன் சுரேசும் இருந்தான் :D :D 

Tuesday, July 1, 2014

எல்லாம் 'இ' மயம்....

தொலைபேசி தொல்லை கொடுக்க எடுத்து "கலோ  இங்க  சுரேஸ்  அங்க  யார் ?"
"இங்க  லாதா  உங்க  திருமதி சுதா சுரேஸ் இருக்கிறாவோ"என்றாள்  நக்கலா.
சுரேஸும்  பதில்  நக்கலாக
"திருமதி சுதா இருக்கவில்லை  படுத்திருக்கின்றா"
"சும்மா பகிடியை  விட்டிட்டு டெலிபோனை அவளிட்ட கொடுங்கோ "எதோ அவசரமாக  பேசபோகினமாக்கும் என்று நினைத்து  டெல்போனை சுதாவிடம் கொடுத்தான்.சுதாவும் ,லதாவும் பாடசாலை காலத்திலிருந்தே நண்பிகள்.புலம்பெயர்ந்த  பின்பும்  அவர்களின் நட்பு ஒகோ என கொடி கட்டி பறக்கின்றது.
புலம்பெயர்ந்த  காலத்தில் இவர்களின் உரையாடல் ஆறுமாதத்திற்கு ஒருக்கா அல்லது ஒரு வருடத்திற்கு ஒருக்கா என்றுதான் இருந்தது. காரணம் தொலைபேசி கட்டணம்  அந்த  காலகட்டத்தில்  அதிகமாக இருந்தமையாகும். இன்று இவர்களின் தொடர்பு குறைந்தது கிழமைக்கு இரண்டு என சொல்லலாம்.முகப்புத்தகம்,மின்னஞ்ஞல்,தொலைபேசி,ஸ்கைப்,வேஸ்டைம் போன்றவற்றின் மூலம் இவர்கள் நட்பை வளர்த்துகொண்டிருக்கின்றனர்.
இவர்கள் அப்படி என்னதான் உரையாடி,எழுதி நட்பை வளர்க்கிறார்கள் என நீங்கள் நினைப்பது போலத்தான் சுரேஸும் நினைத்தான்,ஆனால் இப்ப புரிந்துவிட்டது. இப்ப லதா ஊரில நிற்கின்றாள் அங்கிருந்துதான் இந்த தொலைபேசி அழைப்பு.
"அடியே இன்னும் நித்திரையா,உங்க எத்தனை மணி இப்ப?"
"இந்த மனுசன் சும்மா சொல்லுது நான் எழும்பி சமைச்சுபோட்டு கண்ணயர்ந்தனான், அதுசரி ஊர் எப்படியிருக்கு "
"எல்லாம் நல்லாயிருக்கு, வேஸ்புக்கில் எங்கன்ட படங்கள் போட்டிருக்கிறேன் போய் பாரடி ,உன்ட குரலை கேட்டு கனகாலமாச்சு அதுதான் எடுத்தனான்....பாய்...சீயு "

ஒரு கிழமைக்கு முதல் தான் குடும்பமாக கனடாவிலிருந்து ஊருக்கு போனவர்கள் .போகமுதல் இருவரும் ஸ்கைப்பில் அரைமணித்தியாலத்திற்கு மேல் உரையாடியிருப்பார்கள்.ஊருக்கு கொண்டு செல்ல வாங்கிய பொருட்கள் கூட நண்பிக்கு ஸ்கைப் ஊடாக காட்டப்பட்டது. லதாவுடன் ஸ்கைப்பில் கதைத்தபின்பு ஒரு பெருமூச்சு விட்ட சுதா ,இவள் லதா அடுத்துஅடுத்து ஊருக்கு போறாள் ,நாங்கள் தான் இன்னும் ஊருக்கு போகாமல் இருக்கிறோம் என்றாள்.அவளை சமாதானப்படுத்துவதற்காக உமக்குத்தானே ஊரில ஒருத்தருமில்லை பிறகு ஏன் ஊருக்கு போவான் என்றான்.
திரும்பி முறைத்து பார்த்துவிட்டு ஒருத்தரும் இல்லையோ என்ட ஒன்றுவிட்ட சித்தி அங்கதான் இருக்கிறா.....அதுமட்டுமல்ல எங்கன்ட ஊர் கோவில் அப்படியே இருக்கு ,அந்த அம்மாளாச்சியின் கருணையால் தான் நாங்கள் இங்க வந்தனாங்கள் இல்லாவிட்டால் ஊரில் இருந்து புலி ஆர்மி சண்டையில் செத்திருப்போம்.புலிக்கும் ஆர்மிக்கும் வேறவேலையில்லாமல் சண்டைபிடிச்சவங்கள் என மனதில் எண்ணியபடியே சரியப்பா இன்னும் இரண்டு வருசாத்தால போவம் என்றான். உப்படிதான் இப்ப நாலு வருசமா சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்.என சொல்லியபடியே பேஸ்புக்கில நண்பியின் பக்கதிற்கு சென்றுவிட்டாள்.
அவர்கள் பயணம் செய்த அன்று சுதாவின் ஐ.போன் பலதடவை சிணுங்கியது.முதல் சிணுங்களுக்கு ஐ போனை எடுத்து இலையான் கலைப்பது போல ஒரு தட்டு தட்டினாள் இரண்டு படங்கள் வந்திருந்தன.ஒன்று லதா காரில் ஏறும் பொழுது எடுத்த படம்.மற்றது அவர்கள் குடும்பமாக விமானநிலயத்திற்கு காரில் செல்லும் படம்.மீண்டும் அரைமணித்தியாலத்தின் பின்பு அதே சிணுங்கள்,அதே இலையான் கலைப்பு இந்த தடவை விமானநிலையத்தின் கருமப்பீடத்தில் நின்று கடவுச்சீட்டை கொடுக்கும் பொழுது எடுத்த படமும்,விமானத்தின் இருக்கையில் எல்லோரும் இருந்தபடி விதம்விதமான நிலைகளில் அனுப்பியிருந்தார்கள். இரண்டுமூன்று மணித்தியாலமாக அலைபேசி சிணுங்கவில்லை.
" லதா வேற படம் ஒன்றும் அனுப்பவில்லயோ"
"ரொம்ப முக்கியம் ...."என்றாள்
"இல்லை அனுப்பியிருந்தா விமானப்பணிப்பெண்களை சும்மா பார்ப்போம் என்றுதான்"
"உந்த வயசிலயும் அலையாதைங்கோ"
விமானத்தில் பாவிச்சா காசு கட்ட வேணும் அதுதான் அவள் எடுக்கவில்லை ப்போல கிடக்குது.என சுதா சொல்லிவிட்டு நித்திரைக்கு சென்றுவிட்டாள்.
லதாவின் முகபுத்தகத்தில் பல போட்டோக்கள் அப்லோட் பண்ணப்பட்டிருந்தது.
சுரேஸ் படங்களை பார்த்து கொண்டிருக்கும் பொழுது சுதாவும் வந்து பார்க்கத்தொடங்கினாள்.விமானத்தின் கழிவறை படத்தை தவிர எனைய படங்கள் யாவும் போடப்பட்டிருந்தது.அத்துடன் கட்டுநாயக்க விமானநிலையம் அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலின் படம் போன்றவையும் காட்சியளித்தது.
"உதுக்கு என்ன கொமனட் போடலாம்"
"ஒரு கொமனட்டும் போடதேவையில்லை,நீங்கள் உங்கன்ட வேலையை பாருங்கோ "
"அதுகள் கஸ்டப்பட்டு படமெடுத்து போட்டிருக்குதுகள் அட்லீஸ் ஒரு லைக் ஆவது போடுவோம்"
"சரி சரி போட்டு தொலையுங்கோ"
"உம்மட சினேகிதானே எதோ என்ட பிரன்ட் மாதிரி அலுத்துகொள்கிறீர்"உங்களோட நின்று சும்மா சண்டை பிடிச்சுகொண்டிருக்க ஏலாது .நீங்கள் பார்த்தி ட்டு விடுங்கோ , அவள் இப்ப கோவிலில் நிற்கிறாள் திருவிழா படங்கள் எடுத்து அனுப்புறன் என்றவள் .நான் குளிச்சு போட்டு வந்து ஆறுதலாக பார்க்கவேணும் என்று கூறியபடி குளிக்க சென்றாள். இரண்டுநாள் கொழும்பில் நின்றுவிட்டு ஊருக்கு சென்ற லதா அங்கிருந்து இப்பொழுது ஊர் திருவிழா நேர்முக வர்ணனை அதாவது ஸ்நப் சட் செய்கின்றாள்.தொழில்நுட்பம் அதிகமாக முன்னேறியபடியால் இருவரின் நட்பும் முன்னேறிக்கொண்டு செல்லுகின்றது.குளித்து பக்தி பரவசமாக நெற்றியில் விபூதி,குங்குமத்துடன் கணனியின் முன் அமர்ந்து நண்பி லதாவின் முகநூலுக்கு பின்னூட்டம் இட்டுகொண்டிருந்தாள்.அருகில் வைத்திருந்த ஐ.போன் சினுங்கியது.மெல்லிய தட்டு தட்டினாள் திரையில் அம்மன் காட்சியளித்தாள் என்ட அம்மாளாச்சி என உரத்த குரலில் கூறியபடியே இரு கைகூப்பி வணங்கினபடியே,இஞ்சாருங்கோப்பா எங்கன்ட அம்மாளாச்சியை ஒடிவந்து கும்பிடுங்கோ என சுரேசை அழைத்தாள்.பல கோணங்களில் அம்மனின் திருவுருவத்தை படமெடுத்து அனுப்பிகொண்டிருந்தாள் லதா. இவள் பதிலுக்கு நன்றி தெரிவித்தபடியே இருந்தாள் ,இறுதியாக செய்தி அனுப்பியிருந்தாள் நாளை தேர் திருவிழா காலை 10 மணிக்கு நடை பெறும் அந்த நிகழ்வின் படங்களையும் அனுப்புவதாக எழுதியிருந்தாள்.
அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஐ.போன் சிணுங்கியது.தேர்திருவிழா படங்களை பலவித கோணத்தில் அனுப்பிகொண்டிருந்தாள்.இவள் அம்மனின் தேர்திருவிழா பார்க்க போனவளா அல்லது நண்பிக்கு படம் அனுப்ப போனவளா என்ற சந்தேகம் சுரேஸுக்கு ஏற்பட்டது.அவனது சந்தேகத்திலும் நியாயம் இருந்தது.அம்மனின் நகையையும், சேலையை பற்றியும் இருவரும் அலசிஆராய்ந்து கொண்டிருந்தனர். அம்மனையும்,கோவிலையும் பற்றி விடுப்புக்கள் முடிந்த பின்பு. வந்திருந்த மக்கள் கூட்டத்தை படமெடுத்து அனுப்பி அவர்களை பற்றிய விவரணங்கள் தொடங்கின.
"இந்த படத்தில ஒரு மொட்டை தலை நிற்குது யாரென்று தெரியுதே"
"இல்லையடி , யாரது?"
"முந்தி எங்களுக்கு பின்னால திரிஞ்ச மதன்"
"அடியே அவனே நல்லாய் கிழன்டுபோனான்"
'உவையள் எதோ இளமையா இருக்கினம் அவன் கிழன்டுபோனானாம்' ,புலம்பெயர்ந்த பிரதேசத்தில் விற்பனையாகும் அலங்காரங்களை வாங்கி பூசிக்கொண்டு தாங்கள் இளமையாக இருக்கிறம் என்ற நினைப்பு ..... உவையளின்ட இளமையின் ரகசியம் எங்களுக்குத்தானே தெரியும் என எண்ணிகொண்டு தனது கணனியில் மூழ்கிபோனான் சுரேஸ்இறுதியாக இன்னும் இரு தினங்களின்பின்பு இந்தியா மற்றும் சிங்கப்பூர் சென்ற பின்பு கனடா செல்வதாகவும் என்ற செய்தியை போட்டிருந்தாள்.
நல்லூர்,கீரிமலை மற்றும் கதிர்காமம்,தென்னிலங்கையில் சென்று வந்த பிரசித்தி பெற்ற இடங்கள் யாவும் முகபுத்தகத்தில் தறவேற்றப்பட்டிருந்தது .
இந்தியாவிலிருந்தும் தான் சென்ற கோவில்களின் படங்ளை அனுப்பியிருந்தாள்.அடுத்து அடுத்து அனுப்பிய படங்களை பார்க்கும் பொழுது சுரேஸின் நெஞ்சு கொஞ்சம் படபடக்க தொடங்கிவிட்டது.இருந்தும் இயல்புநிலைக்கு வந்திட்டான்,இப்பொழுது இந்தியாவுக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படாது ஆகவே அதை வாங்க வேண்டிய சூழலில்லை என பெருமூச்சு விட்டவனுக்கு
"இஞ்சாருங்கோப்பா இந்த சீலையும்,சுரிதாரும் நல்லாயிருக்கு வாங்கப்போரன்"
"சரி போகும் பொழுது வாங்குவம்"
"போகும் பொழுதோ?,இன்டநெற்றில ஓடர் பண்ணினால் நாலு நாளில் வீட்டை சமான் வந்திடும் " .
வாங்குவதை தடுப்பதற்காக " நம்பி காசை கட்டலமோ தெரியாது,அது போக கலர்களை மாறி அனுப்பிபோடுவாங்கள்"
"இங்க இருந்து வேறு ஆட்களும் இன்டநெற்றில் சமான்கள் எடுத்திருக்கினம்,உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம்"
"சரி ஒடர்பண்ணி வாங்கும் " என பச்சை கொடி காட்டினான்.
சிங்கப்பூர் சென்ற லதா சிரங்கூன் நகர நகைக்கடைகளில் உள்ள நகைகளை படமெடுத்து அனுப்பியிருந்தாள்.இதையும் இன்றநெற் மூலம் எடுக்கப்போறாளோ என சுரேஸ் பயப்பட்டான்.ஆனால் நகைகளை தபால் மூலம் எடுப்பது நல்லதல்ல நகைகளை நாம் சிங்கபூர் செல்லும்பொழுது வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என லதா சொன்னது அவனுக்கு நிம்மதியை தந்தது.
.+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
30 வருடங்களுக்கு முதல் சுரேஸின் மூத்தசகோதரன் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைவாய்ப்பு கிடைத்து சென்ற பொழுது அவனது தாயார் ஏங்கிய ஏக்கம் நினைவில் வந்தது. சகோதரன் சென்று எட்டு நாட்களின்பின்பு 'சுகமாக வந்து சேர்ந்தேன்' என எழுதிய கடிதம் கிடைக்க பெற்ற பிறகுதான் தாயார் நிம்மதியாக உணவு உண்டாள்.
சுரேஸ் சிறுவனாக இருக்கும்பொழுது கடைக்கு சமான் வாங்க சென்றால் மனப்பாடம் செய்து கொண்டு செல்வான்,கடைக்கு சென்றவுடன் மறந்து விடுவான் ,அல்லது பிழையான பொருளை வாங்கிகொண்டு வந்திடுவான் .அதை மாற்றி எடுப்பதற்கோ அல்லது மறந்த பொருளை வாங்குவதற்கு மீண்டும் செல்வான்.ஆனால் இன்று .....எல்லாம் இ மயம்....




 

Sunday, June 15, 2014

புத்தரும் அப்பே அளுவா

அப்பொழுது வயது பத்து இருக்கும் என நினைக்கின்றேன்.பத்திரிகைகள் வாசிப்பேன் .அப்பா அரச உத்தியோகம் என்றபடியால் பல இடங்களுக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ,அவரது நண்பர்கள் அநேகர் அரச உத்தியோகத்தர்கள்.அவர்கள் எங்கள் வீட்டில் ஒன்றுகூடுவார்கள் இல்லையெனில் நாங்கள் அவர்கள் வீடுகளில் ஒன்று கூடுவோம்.பலர் சைவத்தமிழர்கள், ஒரு சிலர் கிறிஸ்தவர்கள்.எல்லொருடைய வீட்டின் வாசலிலும் ஒரு பிள்ளையார் படம் தொங்கவிடப்பட்டிருக்கும் .இதை சகல சைவத்தமிழர்களின் வீட்டிலும் அன்றைய காலகட்டத்தில் காணலாம்.வீட்டின் உள்ளே இன்னோரு அறையில் சிவன்,உமாபதியார், முருகன் ஒரு மூலையில் குடி கொண்டிருப்பார்கள் .வரவேற்பறையில் யோகசுவாமிகளின் படம் தொங்கிகொண்டிருக்கும்.இவரைப்பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. அநேகர் அறிந்திருப்பீர்கள்.தலையில் ஒரு கொண்டை,வெள்ளைத்தாடி,வெள்ளைவேஸ்டி அணிந்து வெள்ளைச்சால்வையால் மேலுடமைப்பை பொர்த்தி சப்பாணிகட்டி அமர்ந்திருப்பார்.பல வீடுகளில் இந்த கறுப்பு வெள்ளை படம்தான் இருந்தது. திருநீற்று குறி அவரை ஒரு சைவ குரு என சமுகத்திற்கு அடையாளப்படுத்தியது. இதுவரை நான் யோகசுவாமிகளின் வர்ணப்படத்தை காணவில்லை

சிவதொண்டன் நிலயங்களின் பிதா இவர் என்று சொல்லலாம். யாழ்ப்பாண சிவதொண்டன் நிலையம்தான் யோகசுவாமிகளின் கருத்துருவாக்க மையம் ,சுவாமிகளின் கருத்துக்களை நற்சிந்தனை என்ற சஞ்சிகை மூலம் பிரசுரித்து கொண்டிருந்தார்கள்.

இதே காலகட்டத்தில் இருபதைந்து வயது மதிக்க தக்க சிலுப்பாதலையுடன் ஒரு இளைஞனின் கறுப்பு வெள்ளை நிழற்படம் இந்த அரச உத்தியோகத்தர்களின் குடும்பங்களில் அறிமுகமாகிறது. எனது அம்மாவிடமும் ஒரு புகைப்படம் கிடைக்கின்றது.
"இஞ்சாருங்கோ இவரின்ட படத்தில இருந்து விபூதி,கும்குமம்,தீர்த்தம் எல்லாம் வருகின்றாதாம் ,சுசிலா இதை தந்தவ"என்று சொல்லி அப்பாவிடம் காட்டினார்.
"உவங்கள் கள்ளச்சாமிகள் உவங்களை நீரும் நம்பிகொண்டிருக்கிறீரோ?"
"எனக்கு நம்பிக்கை இருக்கு "அம்மா அப்படி சொன்னபின்பு அப்பா எதிர்த்து ஒன்றும் சொல்லாமல் உம்மட இஸ்டம் என்றார்.
அந்த படத்தை அம்மா அழகான ஒரு பிறேம் போட்டு சாமியறையில் மாட்டிவிட்டார்
சுசிலாவும் கணவனும் இந்த இளைஞனின் புகைபடத்தில் அதிகமாகவே ஈடுபாடு கொள்ளதொடங்கிவிட்டார்கள் .அவரின் படம் போட்ட கலண்டர்கள் அடித்து நன்கொடை பெற்றுக் கொண்டனர்.இவர்களுக்கு இரு பெண்குழந்தைகள் இருந்தனர் .இருவருக்குமிடையே ஒரு வயது வித்தியாசம்தான் இருந்தது.இந்த சிறுவர்கள் இருவரும் பெற்றோரின் வழிகாட்டலில் அந்த இளைஞனின் புகைப்படத்தை வணங்கி பஜனை பாடல்கள் பாடி வழிபட்டுக்கொண்டு வந்தனர்.

நாங்கள் வாழ்ந்த ஊரைவிட்டு இரு குடும்பத்தலைவர்களின் வேலை நிமித்தம் மாறவேண்டிய சூழல் ஏற்பட்டது.சுசிலாஅன்ரி குடும்பம் தலைநகர் கொழும்புக்கு மாற்றலாகி சென்றனர் நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி வந்தோம்.

யாழ்ப்பாணத்தில் அந்த இளைஞனின் பக்தர்கள் சிறுசிறு குழுக்களாக உருவாகி கொண்டிருந்தனர். பஜனைகள் பாடி வீதியில் செல்வார்கள்.அநேகமாக வீடுகளில் பஜனை வைப்பார்கள எனது நண்பர்களின் வீடுகளிலும் இந்த பஜனை நடைபெறும் சுண்டல் சாப்பிடுவதற்காக நான் இதில் கலந்து கொள்வேன். எனது அப்பா மனித தெய்வங்களில் அதிக நாட்டமில்லாத காரணத்தால் எனக்கும் அதில் நாட்டமிருக்கவில்லை.....
உயர்தர பரீட்சை முடித்தவுடன் எனது மாமா கொழும்பில் வசித்தபடியால் விடுமுறைக்கு சென்றேன்.அவர் ரமணமகரிஷியின் பக்தர். திருவண்ணாமலைக்கு அதிகம் சென்றுவருவார். ரமண்மகாரிஷியை நேரில் கண்டு உரையாடியவர். இவர் தனது குருவுக்கு பஜனை வைத்தார் .

திருவண்ணாமலையில் ரமணமகாரிஷியின் ஆச்சிரமம் இருக்கின்றது அங்கிருந்து ரமணரின் கருத்துக்களை மவுடன்பாத் என்ற சஞ்சிகை மூலம் உபதேசித்து வந்தனர் . தலை முடியை மிகவும் குட்டையாக வெட்டி கோமணத்துடன் நிற்க்கும் படங்கள் மக்களிடையே இவரை சாமியார் என அடையாளம் காட்டியது. சில பிரதிகளை மாமா கொண்டுவந்து வீட்டுக்கு வருவோரிடம் கொடுப்பார்.


பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தேன்,அங்கு சுசிலா அன்ரியும் கணவனும் வழிபட்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை .நான் அருகே சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.மிகவும் சந்தோசப்பட்டனர் , அடுத்த நாள் வீட்டில் பாபா பஜனை நடைபெறுமாம் வரும்படி சொன்னார்கள்.
வீட்டின் வரவேற்பறையில் பெரிய பாபா படம்.சிலுப்பாதலை விலையுயர்ந்த பட்டு காவியாலான உடம்பை மறைத்த ஆடை .கையை உயர்த்தி பக்தர்களை ஆசிர்வதிப்பது போன்ற ஒரு தோற்றம். .
ஜம்பது பேரளவில் அங்கு கூடியிருப்பார்கள் சகலரும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.வங்கி,சுங்க இலாகா,தனியார் நிறுவனக்களில் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள்.குடும்பமாக சமுகமளித்திருந்தனர்.பஜனை முடிந்தவுடன் சுசிலா அண்ரி சொற்பொழிவாற்றினார் தான் புட்டபக்திக்கு சென்று சுவாமியை தரிசித்ததாகவும்,அவரின் கையால் எடுத்த விபூதி என வந்திருந்த எல்லொருக்கும் விபூதியும்,பாபாவின் போட்டோவும் அன்பளிப்பு செய்தார்.எனக்கும் அன்பளிப்பு கிடைத்தது.அத்துடன் பஜனாவளி என்ற புத்தகமும் எனக்கு கிடைத்தது.
இரு பெண்பிள்ளைகளும் நன்றாக பஜனை பாடினார்கள் அவர்களுக்கு தேவாரம் தெரியாது பஜனைகள் நன்றாகவே தெரியும் . காலங்கள் கரைந்தொடின பெண்கள் இருவரும் கணக்காளராக தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய தொடங்கினார்கள் .
திருமணமாகி இரு பெண்களும் அவுஸ்ரெலியா புலம் பெயர்ந்தனர் .அவர்களின் கணவன்மார்களும் கணக்காளரும்,பொறியியளாலருமாகும்.
சுசிலா அன்ரியும்,கணவனும் தீவிர சாய்பாபா பக்தர்களாகி ஒவ்வோருவருடமும் புட்டபத்தி சென்று வருவார்கள் கலப்போக்கில் அவர்களும் பாபாவின் அடிசேர்ந்தார்கள்.இவர்களின் இரு பெண்பிள்ளைகளும் அதே தீவிரத்துடன் பாபா கருத்துக்களையும்,அடையாளங்களையும் அவுஸ்ரேலியா வாழ் புலம்பெயர்ந்த தமிழ்மக்களியடேயே பரப்பி வந்தனர். கடைப்பிடித்தனர் என்று சொல்வதை விட பரப்பினர் என்பதே சாலச் சிறந்தது. இவர்களின் வாரிசுகள் நாங்கு பேர்கள்.அவர்களும் பாபாவின் பக்தர்கள் புட்டபத்திக்கு அதிகம் செல்வார்கள்.பாபா யுத் செர்க்கில் (பாபா இளைஞர் வட்டம்)என்ற அமைப்பில் அங்கத்துவராக இருக்கின்றனர். புட்டபத்தியின் பிதாவின் கருத்துக்களையும்,அவரின் அடையாளங்களையும் எனைய இளைஞர்களுக்கு காவிசெல்கின்றனர்.

இன்று தாயகத்தை சேர்ந்த யோகசுவாமிகளின் வேஸ்டி, விபூதி இட்ட கறுப்பு வெள்ளை நிழற்படத்தையோ ,மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த கோமணத்துடன் ரமணமகாரிஷியின் ஆண்டிக்கோல படத்தையோகாணமுடிவதில்லை அல்லது அரிதாக காணக்கிடைக்கும். ஆனால் புட்டபத்தி பாபாவின் கலர்புல் போட்டொக்கள் எங்கும் எதிலும் நிறைந்திருக்கும். இந்த பாபா குருவை மிஞ்சிய சிஸ்யன் என்றே சொல்லலாம்.இவரின் குரு சிரடி சாய்பாபா .சிரடிக்கு இருந்த பக்தர்களைவிட புட்டபத்திபாபாவுக்கு இருந்த ,இருக்கின்ற பக்தர்கள் அதிகம் என்றே சொல்லலாம். இன்று இருந்திருப்பார்....
மீண்டும் தாயக நினைவுக்கு சென்றால் அதாவது 40வருடத்திற்கு முன்பு சைவர்களின் வீடுகளின் வாசலில் ஒரு பிள்ளையார் படம் இருக்கும் . என்பதின் பிற்பகுதியில் கொழும்பில் ஆஞ்சநேயரின் அறிமுகம் மெல்ல தொடங்கியது.இன்று ஆஞ்ச நேயர் சகல வீடுகளின் வாசலில் பிள்ளையாருக்கு பக்கத்தில் இருக்கின்றார்.....இந்த மாற்றங்களை மக்களே மக்களுக்கு புகுத்துகின்றனர் .....புத்தரும் தமிழரின்ட வீடுகளில் குடி கொண்டிருப்பார் இராணுவம் ஆயுதம் மூலம் புத்தரின் கருத்தையும்,சிலையையும் திணிக்காமல் விட்டிருந்தால்.... புத்தரும் அப்பே அளுவா ... என எம்மவர்கள் வழிபட்டிருப்பார்கள்

Tuesday, April 8, 2014

உவங்கள்

தலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டார்.பெடியனை பொத்தி பொத்தி வளர்த்தார்.அவரின்ட பெயர் சொல்ல அவன் தான் வாரிசு என்ற ஒரு காரணம் ஆகும்.
சுரேஸும் கந்தரும் வயசு வித்தியாசம் பாராமல் விவாதிப்பார்கள் அதாவது இருவரும் அலட்டுவார்கள் .வெளியே இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள் எதோ முக்கியமான விடயம் பற்றி கலந்தாலோசிக்கினம் எண்டு ஆனால் ஒரு சதத்திற்கும் பிரயோசணமில்லாத விடயமாக இருக்கும்.இவர்களின் இந்த அலட்டல் ஊரில் தேர்முட்டியடியில் தொடங்கினது. இப்ப சிட்னியில்முருகன் கோவில்,நண்பர்களின் வீட்டுதண்ணி பார்ட்டி ,தமிழ் பாடசாலை வரை தொடர்கிறது.
கந்தரின் இளமைக்காலம் யாழ்ப்பாணத்தில் பின்பு வேலை கொழும்பில், இளமை குடும்பவாழ்க்கையும் கொழும்பில் .ஊர் கோவில் திருவிழாவுக்கு குடும்பமாக வந்து இரண்டு கிழமை ஊரில் நிற்பார்.சாமி தீர்த்தம் ஆடி முடிந்த அடுத்த நாள் கந்தர் தீர்த்தம் ஆடி பூங்காவனதன்று உச்சநிலையில் இருப்பார். அதற்கு அடுத்தநாள் கந்தர் தாயாரின் வீட்டில் பெரிய விருந்தும் வைப்பார்.
புலத்தில் வீடுகளில் நண்பர்கள் ஒன்று கூடுவது போல ஊரில் ஒன்று கூடுவதில்லை.தேர்முட்டியடி ,வாசிகசாலை போன்றவற்றில் தான் ஒன்றுகூடுவார்கள் .இலவசமாக கிடைக்ககூடிய இடமும் இதுதான்.
மாலை நேரங்களில் தேர்முட்டியடியில் ஐந்தாறு பெரிசுகள் நாலைந்து இளசுகள் கூடி ஊர் விடுப்பு,அரசியல் கதைப்பது வழக்கம் .கந்தர் ஊரில் நின்றால் நிச்சம் கலந்து கருத்தும் பகிர்ந்து கொள்வார்.தமிழர்கள் தனிநாடு கேட்டு போராட தொடங்கிய காலகட்டம்.
"உவங்கள் தனிநாடு கேட்கிறாங்கள்,உதால கொழும்பில் இருக்கிற எங்களுக்குதான் பிரச்சனை" என கந்தர் தன்னுடைய மனக்குறையை கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இருந்த பெரிசுகள் சிங்களவனோட வாழ முடியாது எங்களை அவன் கல்வி,குடியேற்றம்,மற்றும் சந்தைகட்டிடங்களை தீ வைத்து பலவழிகளில் ஒதுக்கதொடங்கிவிட்டான் ஆகவே தனிநாடு தான் தீர்வு என்றார்கள் .இளசுகலும் உணர்ச்சிவசப்பட்டு தனிநாடுதான் ஒரே வழி என்றார்கள்.
கந்தர் ஊர் திருவிழா முடிவடைந்து கொழும்பு திரும்பினார்.இரண்டு கிழமையால் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடும்ப சகிதமாக கப்பலில் ஊர் வந்து சேர்ந்தார். அன்று மாலையே தேர்முட்டியடிக்கு வந்தார்.
"உவங்களாட வாழ ஏலாது தனிநாடுதான் ஒரே வழி .நான் இனி திரும்பி போக மாட்டேன் ஊரோடதானிருக்க போகிறேன்" என்று கூறியவர் பிள்ளைகளை எந்த பாடாசாலைக்கு அனுப்பலாம்,மற்றும் எந்த டியுட்டரி,டியுசன் மாஸ்டர் திறம் போன்ற விபரங்களை சுரேஸிடம் இருந்து அறிந்துகொண்டார்.
சுரேஸும் தான் போகும் டியுட்டரியும்,கல்விகற்கும் ஆசிரியர்கள், சிறந்தது என சொல்லிவைத்தான் .இதில் ஒரு உள் நோக்கமும் இருந்தது. கந்தரின் பிள்ளைகள் ஆரம்பகல்வியை கொழும்பிலுள்ள பிரபலமான கிறிஸ்தவ பாடசாலையில் படித்தார்கள். அதுமட்டுமன்றி கொழும்பு நாகரிகமும் அவர்களிடம் அதிகம் காணப்பட்டது.ஊர் இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும் ஒருவித கவர்ச்சி இருந்தது.பெண்களை இரட்டை சடையுடனும், அரைப்பவாடை பிளாவுஸ்,மற்றும் சுருக்குவைத்த முழுச்சட்டையுடன் பார்த்த ஊர் இளைஞர்களுக்கு ,மேலாடயை ஜீன்ஸுக்குள் விட்டு அங்கங்கள் ஒரளவு தெரியும் படி வீதியில் செல்லும் பெண்களை நிச்சமாக இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும்.சுரேஸின் உணர்வுகளையும் அந்த கவர்ச்சி தூண்டியது.
சுரேஸும் கண்ணனும் அனேகமாக ஊரில் ஒன்றாக ஊர்வலம் வருவார்கள்.கன்ன உச்சி வைத்து தலைமுடியை பக்கவாட்டில் இழுத்திருப்பான் சுரேஸ் கண்ணாடி முன்னால் நின்று அழகு பார்ப்பது குறைவு.கண்ணன் தலைமுடியைமேவி இழுத்து நாலுபேர் மத்தியில் தன்னை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்க வேணும் என்று உடையணிந்து தன்னை அழகு படுத்திகொள்வான்.படிப்பிலும் சுரேசைவிட கேட்டிக்காரன்.கண்ணனின் இந்த தோற்றமும் கல்வியறிவும் கந்தரின் மூத்தவள் பிரியாவை கவர்ந்துவிட்டது.
கந்தருக்கு உலக அரசியல் ,கொழும்பு அரசியல் தெரிந்தளவுக்கு ஈழ அரசியலில் அறிவில்லை.ஈழநாடு,வீரகேசரி ,பத்திரிகை,கொழும்பு ஆங்கிலபத்திரிகை செய்திகளை படித்துவிட்டு தேர்முட்டியடி அரசியல் விமர்சனம் செய்வார்.அத்துடன் இயக்கங்களின் பெயர்களோ,அதன் தலைவர்கள் யார் என்பது பற்றிய அறிவுமில்லை.பாதுகாப்பு படைகளுக்கு எதிராக எதாவது தாக்குதல் நடந்தால் ,"பெடியள் அடிச்சு போட்டாங்கலாம் ,நல்ல அடியாம் மகே அம்மே என்று ஆர்மிகாரன் ஒடிட்டானாம்" என சொல்லி புலங்காகிதம் அடைவார்.அவங்களுக்கு உவங்கள் பெடியள் செய்யிறதுதான் சரி என நற்சான்றிதழ் வழங்குவார்.
இப்படிதான் ஒருநாள் கந்தரின் வீட்டுக்கு அருகாண்மையில் பொலிஸ் வணடிக்கு கிரனைட் தாக்குதலை செய்துவிட்டு பெடியள் தப்பி சென்றுவிட்டார்கள்.ஒரு பொலிஸதிகாரி மரணமடைய எனையோர் தலைமையகத்திற்கு தகவல் அனுப்பிவிட்டார்கள்.முப்படையும் ஸ்தலத்திற்க்கு விரைந்துவந்தனர்.மக்கள் வீடுவாசலைகளையும்,உடமைகளையும் விட்டு வேறு கிராமத்திற்கு ஒடினார்கள்.கந்தரும் குடும்பத்தோடு வெளிக்கிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.
முப்படையினர் தங்களது ஆத்திரத்தை கிராமமக்களின் வீடுகளை,உடமைகளை தீ வைத்தும்,கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தும் தீர்த்து கொண்டார்கள்.பின்பு இரு நாட்கள் ஊரடங்கு சட்டம் போட்டு ஊரை காவல் காத்தார்கள்.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதிப்படைந்த கிராம மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்,அத்துடன் இளைப்பாரிய உச்சநீதிமன்ற நீதி பதியின் தலைமயில் விசாரனை நடை பெறும் என பத்திரிகையில் செய்திகள் வந்தன,ஆனால் நீதியும் ,நிதியும் மக்களுக்கு கிடைக்கவில்லை.மக்கள் தங்களது முயற்ச்சியால் இயங்கத்தொடங்கினார்கள். மீண்டும் தேர்முட்டி அரசியல் வியாக்கியானதை தொடங்கினார்கள்.
"உவங்கள் பெடியள் கிரனைட்டை காட்டுப்பகுதியில் போட்டிருந்தால் ஆர்மிக்காரன் எங்கன்ட இடத்தை உப்படி நாசம் பண்ணியிருக்கமாட்டாங்கள்"... அங்கும் இங்கும் திரும்பி பார்த்துவிட்டு " உவங்கள்பெடியள் செய்தது சரியான பிழை"என்றார் கந்தர்.
"அண்ணே கெரில்லா போர் என்றால் உப்படித்தான் இருக்கும்"
"அடே! பாதிக்கப்பட்டது நாங்கள்"
"அண்ணே நோகாமல் நொங்கு குடிக்கப் பாக்கிறீங்கள்"
ஊர் நிலமைகள் சரியில்லை என அறிந்த கந்தர் மீன்டும் கொழும்பு திரும்பினார் .மூத்தமகள் பிரியாவை மேல்படிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது மகளும்,மகனும் ஊரில் தாயாருடன் இருந்தார்கள்.லண்டனுக்கு ஒப்பின் விசா என அறிந்து விடியற்காலை பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தவம் இருந்து விசா பெற்று உடனடியாகவே லண்டன் பயணமானார்.
குடும்பத்தை லண்டன் அழைப்பதற்கான ஆயத்தங்களை செய்யத்தொடங்கினார்.மூத்தவளுக்கு அவுஸ்ரேலியா மாப்பிள்ளையை கட்டி கொடுத்தார். இரண்டாவது மகளும் ,மகனும் மருத்துவர்களாக லண்டனில் இருக்கின்றார்கள் .கந்தரும் மனைவியும் சிட்னிக்கும் லண்டனுக்கும் காலநிலைக்கு ஏற்றமாதிரி மாறிமாறி குடியிருப்பினம்.லண்டனில் வின்டர் என்றால் சிட்னியில் குடியிருப்பு. சிட்னியில் இருக்கும் பொழுது பேரப்பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு கந்தர் அழைத்து வருவார்.சுரேஸும் தனது பிள்ளைகளை அதே பாடசாலைக்கு அழைத்து செல்வான்.
"டேய் சுரேஸ் உவங்கள் ஒழுங்கா தமிழ் படிப்பிப்பாங்களோ"
"ஏன் அண்ணே அப்படி கேட்கீறீங்கள் என்ட பிள்ளைகள் உயர்தரம் வரை இங்க படிச்சவயள் அவர்கள் இப்ப நல்லா தமிழ் பேசுவினம்"
"உவங்கள் என்ட பேத்திக்கு போனமுறை மார்க்ஸ் போடும்பொழுது குறைச்சு போட்டாங்கள் அதுதான் கேட்டனான்"

"உவங்கள் இப்ப உந்த கேட்டை பூட்டிப்போடுவாங்கள் நான் போய் காரை உள்ள விடப்போகிறேன்" காரை உள்ளே விட்டுவிட்ட பின்பு வந்த கந்தர் மீண்டும் அரசியல் பக்கம் கதையை தொடங்கினார்
"ஐ.நா தீர்மானம் இந்த முறை உவங்களுக்கு வெற்றி கிடைக்கும்"

"யாருக்கு அண்ணே"

"கூட்டணிக்குத்தான்டா"
"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"