Sunday, June 7, 2015

அதே சிரிப்பு அதே

ஊரில அந்தகாலத்தில பெண்கள் வயதுக்கு வந்த பின்போ அல்லது பருவமடையப்போகிறாள் என்ற அறிகுறிகள் தெரிந்தவுடன் தனியாக வெளியே செல்வதற்கு அநேகமான வீடுகளில் தடை போடுவார்கள்.அப்பா, அண்ணா ,தம்பி போன்றோரின் துணையுடன் தான் செல்வார்கள்.பக்கத்துவீட்டு அக்காமாருக்கு சில தம்பிமாரை துணைக்கு அனுப்புவினம், ஆனால் தங்கச்சிமாருக்கு பக்கத்துவீட்டு அண்ணமாரை அனுப்பமாட்டினம் அந்த விசயத்திலமட்டும் சனம் தெளிவாக இருக்கும்.சுரேசும் உப்படி இரண்டு மூன்று அக்காமாருக்கு போடிகார்ட் வேலை பார்த்திருக்கிறான்.பக்கத்துவீட்டில நாலு பொம்பிளை பிள்ளைகள் மூத்தவர் உயர்தரம் படிக்கும் பொழுது சுரேஸ் ஏழாம் வகுப்பு படிக்கிறான் .இரண்டாவது அக்கா பத்தாம் வகுப்பு .அடுத்த இரண்டு பெண்களும் ஐந்தாம் ,மூன்றாம்.வகுப்பு படித்துகொண்டிருந்தார்கள். பக்கத்துவீட்டு குடும்பத்தலைவர் வெளி மாகாணத்தில் பணிபுரிந்தபடியால் ,அக்காமார் தூர இடங்களுக்கு செல்வதென்றால் சுரேசை துணைக்கு அழைத்து செல்வார்கள்.
சுரேஸ் அந்த வீட்டுக்கார அம்மாவை பக்கத்து வீட்டு அண்ரி என்றுதான் அழைப்பான்.காரணம் அவனுக்கு கன அண்ரிமாரை தெரியும் பக்கத்துவீட்டு அண்ரி,முன்வீட்டு அண்ரி பின் வீட்டு அண்ரி இப்படி பல அண்ரிமார் உண்டு. மற்ற அண்ரிமாருக்கு ஆண்பிள்ளைகள் இருந்தபடியால் பக்கத்து வீட்டு அண்ரியுடன் கொஞ்சம் பாசம் அதிகமாகவே இருந்தது.
பனை ஒலை வேலிதான் இரண்டு வீட்டுக்கும் தடுப்புச்சுவர்.இரண்டு வருசத்திற்கு ஒருக்கா தான் அது அடைபடும் .வேலியடைச்ச ஒரு மாசத்தின் பின் இரண்டு மூன்று பனை மட்டையை விலத்தி ஒரு சிறிய பொட்டை இரண்டு வீட்டாரும் உருவாக்கிவிடுவார்கள்.அந்த பொட்டுக்குள்ளால் தான் இருவீட்டாரும் பண்டமாற்று செய்வார்கள்.சீனி,மிளகாய் தூள்,அரிசி போன்றவை பரிமாறப்படும்.காலப்போக்கில ஊர் நாய்கள் எல்லாம் அந்த பொட்டுக்குள்ளால் புகுந்து போய் பொட்டை பெரிதாக்கிவிடும்.அதுமட்டுமல்ல நாய்கள் போய் வந்தபடியால் பனைமட்டையில் இருக்கும் முள்ளுகளும் தேய்ந்துபோய்விடும் இதனால் சுரேஸ்க்கு உடலில் கிறுக்கல் விளாமல் பக்கத்துவீட்டை போய்வரக்குடியதாக இருந்தது.
இரண்டு வீட்டு அம்மாக்களும் ஊர்விடுப்பு கதைக்கும் டெஸ்க்டொப் அந்த பொட்டுதான்,முகம் தெரியாமல் கதை த்துக்கொண்டிருப்பினம் ,ஆறுமாதம் போனபிறகு கறையான் ஒலையை சாப்பிட தொடங்க அதில ஒரு சிறிய விரிசல் பிறகு கறையானை தட்டிவிடுகிற சாட்டில அந்த இடத்தில் முகம் பார்த்து கதைக்க கூடிய ஒரு வின்டோ திறக்கப்பட்டுவிடும்.
குமுதினி அக்காவை நண்பிகளின் வீட்டுக்கு அழைத்து செல்வதற்க்குகூறிய அழைப்பு சுரேஸ்க்கு இந்த வின்டோவால் தான் வரும் .வின்டோவால் அழைப்பு வர பொட்டுக்குள்ளால் புகுந்து சுரேஸ் பக்கத்து வீட்டு அக்காவுக்கு மெய்பாதுகாவலன் வேலை செய்ய செல்வது வழமையாக இருந்தது.குமுதினி சாதாரண யாழ் அழகி.அதாவது வட இந்தியழகி அல்ல . இப்படித்தான் ஒரு நாள் இருவரும் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு இளைஞன் இரண்டு தரம் அவர்களை கடந்து சென்றான்,மூன்றாம்தரம் செல்லும் பொழுது ஒரு கடிதத்தை கீழே போட்டுவிட்டு வெகு சீக்கிரமாக சைக்கிளை ஒட்டிச்சென்றான்.சுரேஸ் அதை குனிந்து எடுக்க செல்ல ,சுரேஸ் எடுக்காதையடா அதை, கேதியா என்னோட நடந்து வா ,ஊத்தைவாலி என்று திட்டியபடியே அவளும் ஓட்டமும் நடையுமாக சினேகிதி வீட்டை போய் சேர்ந்தார்கள்.இதை ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் என குமுதினி கேட்டபடியால் சுரேஸும் ஒருத்தரிடமும் சொல்லவில்லை.
குமுதினிக்கு பேரதேனியா பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீடத்திற்கு அனுமதி கிடைத்தது..குமுதினி முதல் முதலாக பேரதனியா செல்லப்போகின்றாள் தாயாருக்கு தனியாக அனுப்ப பயமாக இருந்தது. ஊரில தெரிந்தவர்கள் யாரவது அங்கு படிக்கிறார்களா என விசாரித்ததில் பக்கத்து ஊர் குகன் இன்ஞினியரிங் படிப்பதாக அறிந்து கொண்டார்கள் , பெடியனுடன் அனுப்ப அவர்களுக்கு விருப்பம் வரவில்லை .நண்பி ஒருத்தி மூலம் வேறு பாடசாலை மாணவியின் அறிமுகம் கிடைத்து இருவரும் ஒன்றாக ஒரே நாளில் பயணம்செய்ய ஏற்பாடு செய்தார்கள்.
அந்த ஊரில் கந்தையரின் கார் தான் புகையிரத நிலையம் ஆஸ்பத்திரி போன்ற தேவைகளுக்கு ஊர்மக்கள் பாவிப்பார்கள். வீட்டில் உள்ளோர் கண்ணீர் சிந்தியபடியே அவளை கந்தையரின் காரில் அனுப்பி வைத்தனர் .கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போற வழியில் அவளது புதிய பல்கலைகழக நண்பியையும் ஏற்றி சென்றார்கள் .கந்தையரின் சோமசெட் காரில் குறைந்தது எட்டு பேரை ஏற்றலாம் . முன்சீற்றில் சுரேஸ் அவனுக்கு பக்கத்தில் இடையில் ஏறிய அக்காவின் அப்பா இருப்பதற்காக 
"தம்பி டேய் ஒரு காலை தூக்கி இஞ்சால் போடு ஐயாவுக்கு இருக்க வசதியாக இருக்கும் "டிரைவர் சொன்னதிற்கு ஏற்ப ஒருகாலை சாரதியின் பக்கம் போட்டான்.இப்பொழுது அவனது இரண்டு காலுக்கும் நடுவில் கந்தையரின்ட காரின் கியர்,ஒவ்வொரு முறையும் அவர் கியர் போடும் பொழுதும் நெஞ்சுக்குள் ஒருவித பயம் வந்து போகும்.
பயணச்சீட்டை பெற்றுகொண்டார்கள் ,வாசலில் நின்ற டிக்கட் பரிசோதகர் மேடை சீட்டு வாங்காதவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என சொல்லவே மூன்று மேடைச்சீட்டை வாங்கி உள்ளே ஐந்து பேர் சென்றார்கள்.

புகையிரதம் வருவதற்கு சில வினாடிகளுக்குமுன் சைக்கிளில் ஒரு கூட்டம் பாட்டுக்கள் பாடியபடி புகையிரதநிலையைத்தை வந்தடைந்தார்கள்.இரு பயணச்சீட்டை மட்டும் பரிசோதகரிடம் காட்டிய படியே அந்த கூட்டம் உள்ளே சென்றது.

"சுரேஸ் அந்த ஊத்தவாலி சனியனும் இந்த ரெயினில வருகுது போல கிடக்குதடா"

"ஒமக்கா அவர் தான் "

"எனக்கு பயமாயிருக்கு"
உந்த பெடியள் செட்டுக்குள்ள கந்தையா வாத்தியின்ட இஞ்ஞினியர் பெடியன் குகன் நிற்கிறான் போலகிடக்கு சொல்லியபடி குமுதினியின் புது நண்பியின் அப்பா அந்த கூட்டத்தை நோக்கி சென்றார்.அதே நேரம் அட அங்க பாருடா சரக்குகள் கூட்டம் நிற்குது கிட்ட போய் நின்றால் அதுகள் ஏறும் கொம்பாட்மன்டில் நாங்களும் ஏறலாம் என்றபடி அந்த பெடியள் கூட்டம் இவர்களை நோக்கி வந்தது.

"தம்பி குகன் ,"
"ஹலோ அங்கிள் ,என்ன கொழும்புக்கோ"
"இல்லை, இல்லை என்ட மகளும் அவவின்ட சினேகிதபிள்ளையும் பெரதேனியா கம்பஸ்க்கு போயினம்,யாராவது தெரிந்த ஆட்கள் வருவினமோ என்று பார்த்துகொண்டிருந்தனான் கடவுளாக பார்த்து உம்மை காட்டி போட்டார், "
வாரும் வாரும் உம்மை அவையளுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறன் ,ஒருக்கா வடிவாய் பார்த்து கொள்ளும்"

தனது மகளையும்,குமுதினியையும் அறிமுகம் செய்து வைத்தார்.குமுதினி சுரேசை பார்த்த பார்வை இந்த ஊத்தைவாலி இஞ்ஞினியராம் என்ற மாதிரி இருந்தது "அன்ன கோச்சி எனவா" என்றபடியே பித்தளை மணியை ரயில்வே சிப்பந்தி அடிக்க ,சகலரும் தங்களதுபொதிகளை தூக்கி கொண்டு முன்னுக்கு வந்து நின்றார்கள் .சிலர் முருங்கைக்காயை பழைய புதினப்பத்திரிகையால் சுற்றி சணல் கயிற்றால் கட்டியிருந்தனர் வேறு சிலர் பிலாப்பழத்தை மாட்டுத்தாள்(சீமேந்து பை)பேப்பரால் சுற்றி கொண்டுவந்திருந்தனர். யாழ் தேவி புகையை தள்ளிக்கொண்டு தனது வெக நடையில் ஆடி அசைந்து வளைந்து குலுங்கி வந்துகொண்டிருந்தாள்.புகையிரத நிலைய அதிபர் ஒரு வளையத்தோடும்,சிவத்த கொடியுடனும் வந்து நிற்க இன்னொரு சிப்பந்தி இன்ஞின் டிரைவரிடம் வளையத்தை வாங்க தயாராக இருந்தார்.அதிபர் சிவத்த கொடியை காட்டி வளையத்தை கொடுக்க யாழ்தேவி தனது வேக நடையை மெல்ல மெல்ல குறைத்து நின்றாள்.
சனம் அடிபட்டு முண்டியடித்து பொதிகளுடன் ஏறினர்,சிலர் பொதிகளை யன்னலூடாக கொடுத்தனர் .
"குகன் டேய் இங்கவாடா" என்ற சத்தம் ஒரு பெட்டியிலிருந்து வந்தது.
"என்னுடைய பிரன்ட்ஸ் அந்த கொம்பார்ட்மன்டில் இருக்கினம் அதுல இடமிருக்கு வாங்கோ" என அழைத்தான்.
குமுதினி தனது குடும்பத்தினரையும்,நண்பி தனது அப்பாவையும் பார்த்தார்கள் அனுமதி பெறுவதற்கு அவர்கள் தலையை ஆட்டி அவருடன் போ என்று அனுமதி கொடுத்தனர்.
மூவரும் அந்த கொம்பார்ட்மன்டில் ஏறிக்கொண்டனர்.அதில் பல ஆண்கள் பெண்கள் என இருந்தனர் எல்லோரும் பல்கலைகழகத்தில் படிப்பவர்கள் என பார்த்தவுடனே தெரிந்தது.சில புது மாணவர்களும் ,பல பழைய மாணவர்களும் இருந்தனர்.விசில் சத்தத்துடன் சிவத்த பச்சை கொடி காட்டப்பட கூ கூ என்ற ஒசை எழுப்பிய படி மெதுவாக யாழ்தேவி அசைந்தாள்.கையை அசைத்து விடைபெற்றனர் ,கண்ணீர் சிந்தியபடி சிலர் , மறக்காமல் போய் சேர்ந்தவுடன் கடிதத்தை போடு என்று ஒரு சிலர் சொல்லி விடை பெற்றனர் .காரில் மயான அமைதி நிலைவியது.கந்தையரும் ,மற்ற பெரியவரும் முன்னுக்கு இருந்து அரசியல் பேச தொடங்கிவிட்டார்கள் இருவரும் தமிழர்விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் சிங்கள அரசியல்வாதிகளை குறைகூறிகொண்டே வந்தனர்
சாந்தினியும் சார்ளினியும் அழுது கொண்டே காரிலிருந்தனர் .பாமினி அவர்களை சமாதனப்படுத்திகொண்டிருந்தாள்.
சுரேஸ் யன்னலூடாக நட்சத்திரங்களை பார்த்த படியே எதிர்காலத்தை பற்றி கனவு காண தொடங்கிவிட்டான். தனக்கு வெளி மாகாணத்தில் அனுமதி கிடைத்தால் புகையிரதத்தில்இவர்களை போன்று சந்தோசமாக செல்ல முடியும் சாந்தினிக்கும் அங்கு கிடைத்தால் அவளையும் அழைத்து செல்லலாம் இருவரும் ஒன்றாக வேல செய்யலாம் என அவனது கனவுகள் நீன்று கொண்டே போனது .கந்தையரின் கார் பெரியவரின் வீட்டு கேற்றடியில் நிறுத்தியவுடன் ,அவனது கனவும் கலைந்தது.
முன் சீட் காலியானதை தொடர்ந்து அவன் அந்த சீட்டிலிருக்க வேண்டிய நிலை ஏற்பட அங்கு போய் அமர்ந்து கொண்டான். அவனது கனவு தொடர கந்தையரின் பேச்சு தடையாக இருந்தது.அவருக்கு சினிமாவும் அரசியலும் அத்துப்படி. 
"டேய் எம்.ஜி ஆரின்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்திட்டியா"
"இல்லை அண்ணே"
"நான் பார்த்திட்டேன் ஓவ்வோரு நாட்டிலயும் ஓவ்வோரு பாட்டுடா.வாத்தியார் இந்த படத்தில பட்டையை கிளப்பிறார்"
"ம்ம் ம்ம் ம்ம்" என அவன் தலையை அசைக்க ,ஒரு பாட்டை விசில் அடிச்சு பாடிக்கொண்டே காரை ஒட்டினார்.
வீடு வந்தவுடன் பொக்கற்றிலிருந்த காசை எடுத்து கந்தையரிடம் கொடுத்தான்.காசை எண்ணிப்பார்த்த கந்தையர் தலையை சொறிந்தபடி
"தம்பி காசு காணது இன்னும் ஒரு 10 ரூபாவை வாங்கி தாரும்"
"ஏன் அண்ணே நீங்க முதலில் சொன்னது இவ்வளவுதானே"
"நான் நினைச்சன் போனவுடனே திரும்பி வாரது என்று ஆனால் நின்று வந்தபடியால் கொஞ்சம் கூட வாங்கி தாரும்"
உள்ளே சென்ற பாமினி பத்து ரூபா தாளை சுரேஸிடம் கொடுத்தாள் அவன் அதை வாங்கி கந்தையரிடம் கொடுக்க அவர் பல்லை இழித்தபடி வாங்கி கொண்டார். நெடுகளும் வேலி அடைக்க வேண்டியிருக்கு இந்தமுறை தகரத்தால் அடைத்துவிடுவோம் என சுரேஸின் வீட்டுகாரரும் பக்கத்து வீட்டுக்காராரும் முடிவெடுத்தனர்.இனிமேல் நீ அதிகம் பக்கத்துவீட்டை போகதே என அம்மா சொல்லிவிட்டார்,ஒம் என்று தலையை ஆட்டிவிட்டு ஏன் என்ற கேள்வியை கேட்காமல் விட்டுவிட்டான் மனதில் ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது அவனுக்கு .முதல்நாள் அவன் சாந்தினியை பார்த்து புன்னகைத்ததின் எதிரொலியோ எண்ணிகொண்டான்.
இப்பொழுது பக்கத்து வீட்டு அண்ரி உதவிகளுக்கு இவனை கூப்பிடுவதில்லை.பாமினியும் யாழ்பல்கலைகழக்த்தில் அனுமதி கிடைத்து அங்கு நிரந்தரமாக இருந்து படிப்பதற்கு சென்றுவிட்டாள் .
.சாந்தினியும் சாலினியும் சைக்கிளின் தனியாக செல்வார்கள் .துணைக்கு அவர்களுக்கு தம்பிமார் தேவைப்படவில்லை.சாந்தினி அந்த நால்வரிலும் அழகானவள் அத்துடன் நிறமும் .சின்ன வயதிலிருந்தே சுரேஸுக்கு அவள் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது .
"மச்சான் இப்படியே ஒருதலை காதலில் இருந்தால் யாரும் கொத்திகொண்டு போய்விடுவாங்கள் சோதனை முடிஞ்சுதுதானே போய் கதையடா" என்றார்கள் நண்பர்கள். துணிவே துணை என்று போட்டு சுரேஸ் கிட்ட போனான் அதற்குமுதல் அவள் சைக்கிளை திருப்பிகொண்டு சென்றுவிட்டாள் .சிறிது காலம் சுரேஸ்நிற்க்கும்பொழுது அவள் வெளியே வருவதில்லை .அப்படி எதிர்பாரதவிதமாக கண்டு கொள்ளவேண்டி வந்தாலும் மூன்றாம் நபர் போன்று சென்றுவிடுவாள்.சுரேஸும் தொடரவிரும்பவில்லை.சுரேஸ் கன்னிமீசையை இன்று வரை முழுவதுமாக எடுக்கவில்லை,தேவை ஏற்படும்பொழுது கிளிப்பண்ணிகொள்வான். ...சிறுது காலம் தாடி வைத்திருந்தான் வெளிநாடு செல்வதற்காக தாடியை மட்டும் எடுத்திருந்தான்.
முப்பதைந்து வருடங்களின் பின்பு கண்ணாடியை பார்த்தபடி மீசையை தடவிகொண்டே சிரித்துகொண்டிருந்த சுரேசைப் பார்த்த மனைவி
" அவள் சொன்னதை கேட்டு இப்ப இளமை ஊஞ்சலாடுதோ?"
"இல்லையடி ஆத்த பெண்களை பற்றி இன்னும் எனக்கு புரியவில்லை"
"இனி புரிஞ்சு என்னத்தை பண்ணப்போறீயள் போய் போர்த்து கொண்டு பாடுங்கோ"
அன்று மாலை நண்பனின் உறவுவினர் லண்டனிலிருந்து வந்திருந்தமையால் இவனை விருந்துக்கு அழைத்திருந்தார்கள்.குடும்பமாக சென்றிருந்தான்.பிள்ளைகளை அறிமுகம் செய்து வைத்தனர் .ஆண் பெண் வேறு பாடின்றி முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.
"இவன் சுரேஸ் என்ற பிரண்ட்,இது அவனது மனைவி "இருபகுதியினரும் கை குலுக்கி கொண்டனர்.
"சுரேஸ் புரோம் மானிப்பாய்"
"யெஸ் "
"கட்டியணைத்து முத்தமிட்டாள்"
"அதே சிரிப்பு அதே மீசை பார்த்தவுடன் நான் நினைச்சன் நீங்கள் சுரேஸ்சாகதான் இருப்பீங்கள் என்று"
"நான் சாந்தினி ,உங்கன்ட வீட்டுக்கு பக்கத்திலிருந்த குமுதினி,பாமினிஅக்காவையின்ட தங்கச்சி ,நாங்கள் நாலு பேரும் லன்டனில்தான் இருக்கின்றோம்"



யாவும் சுத்த கற்பனை :D